புதுச்சேரி, ஆக.10- புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் கொம்யூன் சேந்தநத்தம் கிராமத்தில் சங்கராபரணி ஆற்றங்கரையை ஒட்டி உள்ள சுடுகாடு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தில் வேலை நடைபெற்றது. ஆக.8 அன்று வேலை செய்து கொண்டிருந்த முனுசாமி என்ற விவசாய தொழிலாளி எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்துவிட்டார். அவர் அங்கிருந்து தொழிலாளர்கள் உடனடியாக மீட்டு, வில்லியனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இல்லை என்பதால், லோடு கேரியர் வண்டி மூலம் ஏற்றி சென்ற போது எதிர்பாராத நிலையில், வழியிலே முனுசாமி இறந்துவிட்டார். ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு உயிரிழந்த முனுசாமி குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ரூ. 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, இன்னரசு, அரிதாசு,விநாயகம் ஆகியோர் சனிக்கிழமை (ஆக. 10) முதல்வர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.