districts

img

பேருந்து வசதி கேட்டு ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

வேலூர், நவ.25- வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.  வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டம், வெள்ளேரி கிராம மக்கள்  மற்றும் சீருடையுடன் பள்ளி மாணவர்கள் வந்து மனு அளித்தனர். அம்மனுவில், எங்கள் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் ஊருக்கு கடந்த 35 ஆண்டுகளாக பேருந்து வசதி கிடையாது. வேலூர் மற்றும் குடியாத்தத்தில் இருந்து இயக்கப்படும் 3 பேருந்துகள் சென்றாம்பள்ளி வரை செல்கிறது. முறையான பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பேருந்து ஏறி பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். மறுபுறம் பெண்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி சென்றாம் பள்ளி வரை இயக்கப்படும் பேருந்துகளை வெள்ளேரி வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். மேலும் வேலூர் வட்டம் குளவி மேடு -2 பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குளவி மேட்டில் வசித்து வருகிறோம். கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக கால்வாய் புறம்போக்கு இடத்தை இடுகாடாக பயன்படுத்தி வருகிறோம். தற்போது அதே பகுதியை சேர்ந்த சிலர் இடுகாட்டை பயன்படுத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே அரசு சார்பில் கால்வாய் புறம்போக்கு இடத்தில் புதிதாக இடுகாடு மற்றும் தகன மேடை அமைத்து தர வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.