districts

img

கவிஞர் மு.மேத்தா, பாடகி பி.சுசீலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது

சென்னை,செப்,24-  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில், கவிஞர் மு.மேத்தா, பின்னணி பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை செப்டம்பர் 30 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

இதுகுறித்து தமிழக அரசு  வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:

தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டும் வகையில் தமிழக அரசு சார்பில்,கருணாநிதி பெயரில் ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது’ ஆண்டு தோறும் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 அன்று வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்படும் என்றும் கடந்த 2022 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு அரசாணையும் வெளியிடப்பட்டது. 

2023 ஆம் ஆண்டிற்கு தமிழ்ப் பேராசிரியரும், புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்தவரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கவிஞர் மு.மேத்தாவுக்கும், திரையுலகில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலமொழிப் பாடல்களைப் பாடியவரும், ‘தென்னிந்தியாவின் இசைக்குயில்’ என்றும், ‘மெல்லிசை அரசி’ என்றும் பாராட்டப்பட்ட திரைப்படப் பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்க தேர்வு குழு பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து, மு.க.ஸ்டாலின் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை தலைமைச் செயலகத்தில் வழங்குகிறார், 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.