திருவண்ணாமலை,டிச.7- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பகுதிச் செயலாளர் சி.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் வி. சுப்பிரமணி, நிர்வாகிகள் திருமுருகன், கே. கே. வெங்கடேசன், சிவக்குமார், பி. சுந்தர், உள்ளிட்ட பலர் பேசினர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 30,000, தோட்ட பயிருக்கு ரூபாய் 40 ஆயிரம் நட்டஈடு வழங்க வேண்டும், பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மழை வெள்ளத்தால் இடிந்துபோன கிணறுகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் தடையின்றி, லஞ்சம் இன்றி, அனைவருக்கும் பயிர்க கடன் வழங்க வேண்டும், மழை வெள்ளத்தாலும், கோமாரி நோயாலும் இறந்து போன கால்நடைகளுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கலசபாக்கம் - ஆதமங்கலம் பகுதி குழுக்கள் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.