districts

img

நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை கழிவு நீர் கெடிலம் ஆற்றில் விடுவதற்கு எதிர்ப்பு

கடலூர், செப்.24- நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை கழிவு நீர் கெடிலம் ஆற்றில் விடுவதற்கு குடியிருப்போர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  கடலூரின் முக்கிய  நீர் ஆதாரமான கொண்டங்கி ஏரி இன்றைக்கு மாசுபட்டுபோய் உள்ளது. தினமும் மண் அள்ளுவதால் அதிக மழை பெய்தால் இந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புள்ளது. உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது எனவே இந்த பகுதியில் அள்ளுவதை தடுத்து நிறுத்தி கொண்டங்கி ஏறிக்கு அருகே புதிய பேருந்து நிலையத்தை கட்ட வேண்டாம் என்று கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கம் வலியுறுத்தி உள்ளது.  அதேபோல் கடலூரை பொறுத்தவரை கெடிலம் ஆறு, பெண்ணை ஆறு ஓடுகிறது. இரண்டு ஆறுகளும் மிகவும் மாசுபட்டு போய் உள்ளது. இரண்டு ஆறுகளிலும் குப்பைகள் கொட்டுவது என்பது தொடர்ந்து வருகிறது. ஆற்றில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்தி கரைகளை உயர்த்தி தடுப்புச் சுவர் கட்டி போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.  நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை கழிவுநீரை பில்லாலி தொட்டி வழியாக கெடிலம் ஆற்றில் திறந்துவிடுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி தலைமை தபால் நிலையம் முன்பு கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களில் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் சிறப்பு தலைவர் எம். மருதவாணன் தலைமை தாங்கினார். இணை பொதுச் செயலாளர் எஸ்.கே.தேவநாதன் வரவேற்றார். பொதுச்செயலாளர் பி. வெங்கடேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ. மாதவன் துவக்கி வைத்து பேசினார்.  கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ். என்.கே.ரவி, இணை  ஒருங்கிணைப்பாளர் தி.ச. திருமார்பன், மற்றும் குரு ராமலிங்கம், சுப்பராயன் ஆகியோர் பங்கேற்று  பேசினர். பொருளாளர் பி.கே.வி. வெங்கட்ராமணி நன்றி கூறினார்.