செங்கல்பட்டு, நவ. 25- பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆரம்ப சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் சம்பளம் உயர்த்தி வழங்கவேண்டும், இதற்கான தொகையை 50 விழுக்காடு ஆவின் ஒன்றியங்களில் வழங்க வேண்டும், கால்நடைகளுக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலவச தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும், வேளாண் விளைபொருட்களுக்கு விலை அறிவிப்பதை போல் ஒவ்வொரு ஆண்டும் பாலுக்கு விலை அறிவிக்க வேண்டும், ஆவின் பால் விற்பனை நிலையங்களை அதிகப்படுத்த கமிசன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் பனையடிவாக்கம், புத்திரன் கோட்டை, நுகும்பல், தொன்னாடு, சீவாடி, கல்பட்டு, சின்னவெண்மணி, ஒத்தவாடை பவுஞ்சூர், பரமேஸ்வரி மங்கலம், அம்மனூர், பேரம்பாக்கம், கூனம்பட்டறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த ஒரு வார காலமாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. கோரிக்கைகளை விளக்கி பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.ரவி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வாசுதேவன், தலைவர் வி.அரிகிருஷ்ணன், நிர்வாகிகள் கோவிந்தசாமி, ராஜேந்திரன், அர்ஜுன்குமார், லோகேஷ், எம்.குமார், விஜயகாந்த், பாபு உள்ளிட்ட பலர் பேசினர்.