திருவண்ணாமலை, செப்.25- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களில் பழங்குடியின மக்களுக்கு கடன் தருவதாக கூறிக்கொண்டு, பழங்குடி மக்களிடம் ஆதார் அட்டையை பெற்றுச் சென்று இடைத்தரகர்கள் பலரும் தனியார் நிதி நிறு வனங்களில் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். கடனை திருப்பி கட்ட வில்லை என்று தனியார் நிதி நிறுவனங்கள் அடி யாட்களை அனுப்பி பழங்குடியின மக்களை மிரட்டியதுடன் ஆபாசமாக திட்டியுள்ளனர். மேலும், ஒரு சிலரை கடத்திச் சென்று சித்திரவதை செய்வதாகவும் பகீர் தகவல்கள் வெளியாகி வருகிறது. இத்தகைய மிரட்டலுக்கு பயந்து பழங்குடியின மக்கள் பலர் திடீரென காணாமல் போய் தலைமறைவாக உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரி வித்துள்ளனர். தொடரும் கொடுமைகள்! வந்தவாசி அருகே நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளிக்கண்ணு. இவரை செப்.24 அன்று இரவு ஆறு மணிக்கு விடியல் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த நபர்கள் இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று சித்திரவதை செய்துள்ளனர். பழங்குடியினத்தை சேர்ந்த வெள்ளிக்கண்ணு வின் மனைவி எல்லம்மாள் என்பவரை நிதி நிறுவனங்கள் இடைத்தரகராக பயன்படுத்தியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பொன்னூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், ஏழுமலை ஆகியோர் தனி யார் நிதி நிறுவனத்தின் மிரட்டலுக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டுள்ளனர். இதில் ஏழுமலை என்பவர் பல ஆண்டுகளாக ஊருக்கு வராமல் தலை மறைவாக இருந்ததாக தெரி வித்துள்ளார். ஸ்ரீராம், விடியல், கௌதம், சத்யா உள்ளிட்ட பல நுண் நிதி நிறுவனங்கள் அந்த பகுதிகளில் செயல்பட்டு வருவதாகவும், அதில் சில தனியார் நிதி நிறுவனங்கள் இத்தகைய அடாவடி செயலில் ஈடுபட்டு வருவதாக பழங்குடியின மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இந்த நிதி நிறுவனங்களில் காவல்துறையை சேர்ந்த சிலர் கூட நிர்வாகியாக இருப்பதாக பழங்குடியின மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விளாங்காடு, பொன்னூர், நடுக்குப்பம் உள்ளிட்ட பல பகுதிகளில் நுண் நிதி நிறுவனங்களில் பழங்குடியினர் பெயரில் கடன் வாங்கிக் கொள்ளையடித்த விளாங்காடு ராஜகுமாரி, காத்தவராயன், பொன்னூர் எல்லம்மாள் ஆகிய இடைத்தரகர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பழங்குடியின மக்களின் கடன்கள் முழுமையாக ரத்து செய்ய வேண்டும், கடன் பெற்றவர்கள் நுண் நிதி நிறுவன ஊழியர்கள் தாக்குவது, ஆபாசமாகத் திட்டுவது குறித்து காவல்துறையிடம் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பழங்குடியினர்களுக்கு மகளிர் மற்றும் ஆண்கள் சுய உதவிக் குழுக்கள் வங்கிக் கடன் வழங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தவாசியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் உதயகுமார் , தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் மாரிமுத்து ஆகி யோர் தலைமை தாங்கினர். கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் டி. ரவீந்திரன் ஆகியோர் உரை யாற்றினர். மலைவாழ் மக்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் இரா.சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், வந்தவாசி வட்டார செயலாளர் அப்துல் காதர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச் செயலாளர் ப.செல்வன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் பெ.அரிதாசு, விவசாயிகள் சங்க வந்தவாசி வட்டாரத் தலை வர் ராதாகிருஷ்ணன் ஆகி யோர் உரையாற்றினர். இப்போராட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ந.சேகரன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன்,பெரணமல்லூர் வட்டார செயலாளர்கள் பிரபாகரன், சேத்துப்பட்டு வட்டார செயலாளர் இராஜேந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்ட முடிவில், வந்தவாசி வட்டாட்சியர் பொன்னுசாமியைச் சந்தித்து கோரிக்கை மனுவை தலைவர்கள் வழங்கினர். அப்போது, விசாரணைக்குழு அமைத்து அறிக்கையை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்களுக்கு அனுப்பி மேல் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.