சென்னை, செப். 4- சட்ட விரோத பணி நீக்கத்தை ரத்து செய்யக்கோரி திங்களன்று (செப்.3) சைதாப்பேட்டையில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். டிடிகே நிறுவனம், ஹியூமன் பார்மா டிவிஷன் எனும் மருந்து பிரிவில் 500 பேர் பணியாற்றி வந்தனர். இந்த பிரிவை, பாரத் சீரம் மற்றும் வேக்சின் என்ற நிறுவனத்திற்கு விற்று விட்டனர். இதனையடுத்து 2022ஆம் ஆண்டு 250 ஊழியர்களை முன்னறிவிப்பின்றி சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்தனர். இதனை ஏற்க மறுத்து, டிடிகே நிறுவனம் நடத்தும், டிடிகே பார்மா நிறுவனத்தில் பணி வழங்க கோரி 64 ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் 12 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பணிநீக்க உத்தரவை திரும்பப் பெறக் கோரி அகில இந்திய மருந்து விற்பனை பிரதிநிதிகள் சம்மேளனம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம்மேளன தலைவர் ரமேஷ் சுந்தர், தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் தலைவர் சத்தியநாராயணன், பொதுச்செயலாளர் விவேகானந்தன், சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.