கடலூர், செப்.29- திட்டக்குடி வட்டத்தில் அரசு ஐடிஐ மற்றும் விடுதியுடன் கல்லூரி துவங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு வலியுறுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்ட 24 வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை (செப்.29) பெண்ணாடத்தில் கே.தங்கவேல், கோவிந்தசாமி ஆகியோரின் நினைவரங்கத்தில் நடைபெற்றது. வட்டக் குழு உறுப்பினர்கள் பி.அரவிந்தன், எல்.சுமதி, கே. சிதம்பரம் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டக்குழு உறுப்பினர் ஆர்.ராஜேந்திரன் கொடியேற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி. ஆறுமுகம் தொடங்கி வைத்து பேசினார். வட்டச் செயலாளர் வி.அன்பழகன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாநாட்டை வாழ்த்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆர். ரவிச்சந்திரன், பி.தேன்மொழி ஆகியோர் பேசினர். பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஆர் விஸ்வநாதன், ஆர். மாணிக்கவேல், ஆர்.முத்துலட்சுமி, எல்.மாயவன், ஆர். மகாலிங்கம் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். மாநாட்டை நிறைவு செய்து மாவட்ட செயலாளர் கோ.மாதவன் சிறப்புரையாற்றினார். இந்த மாநாட்டில் 13 பேர் கொண்ட வட்டக் குழுவின் செயலாளராக வி.அன்பழகன் தேர்வு செய்யப்பட்டார். வெலிங்டன் ஏரியை ஆழப்படுத்தி கிளை வாய்க்கால்களை வெட்ட வேண்டும். கோவில் மற்றும் புறம்போக்கு இடத்தில் உள்ளவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.குடிசை வீட்டில் உள்ளவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டி தர வேண்டும், திட்டக்குடி வட்டத்தில் வீட்டுமனை இல்லாத அனைவருக்கும் வீட்டு மனை வழங்க வேண்டும், பழங்குடியின மக்களுக்கு இலவச வீடு மற்றும் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.