சென்னை, செப்.10- கொழுப்புச்சத்து குறைவாக உள்ள பாலை விற்க ஆவின் கட்டாயப்படுத்துவதாக பால் முகவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆவின் நிறுவனத்தை பொறுத்தவரை தமிழகம் முழுவதும் 4.5விழுக்காடு கொழுப்பு சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளையே பொதுமக்கள் விரும்பி வாங்கக் கூடிய நிலையில் கடந்த சில மாதங்களில் 3.5% கொழுப்பு சத்துள்ள பாலினை அறிமுகம் செய்து பொதுமக்களின் அதிருப்தியை சம்பாதித்துள்ளதாக, தமிழ்நாடு அரசுக்கும் கெட்ட பெயரை சம்பாதித்து தந்துள்ளது ஆவின் நிர்வாகம் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி கூறியுள்ளார். 4.5விழுக்காடு கொழுப்பு சத்து கொண்ட நிலைப்படுத்தப்பட்ட பாலினை வாங்கி பயன்படுத்திய மக்களிடம் அதே விற்பனை விலைக்கு 1% குறைவான 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பசும்பால் பாக்கெட் தான் விற்பனை செய்ய வேண்டும் என பால் முகவர்களுக்கு கட்டாயப்படுத்தி நிர்பந்தம் செய்வதால் பால் முகவர்களும் வேறு வழியின்றி அதனை பொதுமக்களுக்கு வலுக்கட்டாயமாக கொடுக்கும் போது 1% கொழுப்பு சத்து குறைவான அந்த பாலின் அடர்த்தி குறைவாகவும், சுவையின்றியும் இருப்பதால் அந்த பாலினை புறக்கணிக்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காமல் பால் விற்பனை விலையை மறைமுகமாக உயர்த்தும் எண்ணத்தில் 1% கொழுப்பு சத்தை குறைத்து அதே விற்பனை விலையில் ஊதா நிற பாக்கெட்டில் புதிய வகை பாலினை அறிமுகம் செய்து, அதனை விற்பனை செய்ய பால் முகவர்களையும், அந்த பாலினை தான் வாங்கிட வேண்டும் என பொதுமக்களையும் கட்டாயப்படுத்தி, நிர்பந்தம் செய்வதால் ஆவின் பாலின் தரம் மீதிருந்த நம்பிக்கை குறைந்து, தற்போது பால் விற்பனையும் குறையத் தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்