கடலூர், ஜூலை 20- கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதித்து மீன்வளத் துறையினர் உத்தரவிட்டுள்ளனர். வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் கடல் காற்று அதிகமாக இருக்கும் என்றும், கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே கடலூர் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம். ஆழ்கடல் சென்ற மீனவர்கள் விரைந்து கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வானிலை எச்சரிக்கை அறிவிப்பை அனைத்து மீனவர்களுக்கும் பின்பற்ற வேண்டும் என்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடலூர் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில் ஏராளமான விசைப்படகுகள் கரைகளில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.