districts

img

கன மழையால் நெல் பயிர் சேதம்: கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்

வேலூர், ஆக.13- வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக  கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் முழுமையாக தேங்கியது. இந்த நிலையில் காட்பாடியை அடுத்த கசம்,  கண்டிப்பேடு, பொன்னை, கே.வி.குப்பம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் அதிகம் பெய்த  மழையால் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியதால் வேர்க்கடலை, கீரை மற்றும் நெற்பயிர்கள் உள்ளிட்டவை அழுகும் நிலையில் உள்ளதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இதுகுறித்து பொன்னை அடுத்த எருக்கம் பட்டை  விவசாயி தருமலிங்கம் கூறுகையில், “ மோகன் என்பவரிடம் 20 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து ரூ. 4 லட்சம் செலவு செய்து நெல் சாகுபடி செய்தேன். தற்போது  பெய்த கன மழையால், முழுவதும் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் இழப்பீடு வழங்க  வேண்டும்” என கண்ணீருடன் தெரிவித்தார். தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் ஏழு வட்டங்களில்  100க்கு அதிக மான ஹெக்டர் நிலங்களில் பயிர் சேதம் அடைந்துள்ளது என்று தெரிவித்த வேளாண்  அதிகாரிகள், சேதம் குறித்த முழுமையான ஆய்வு வருவதாகவும் கூறினர்.