சென்னை, ஆக. 14 - தரமணியில் உள்ள உட்புறச் சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவிடம், கட்சியின் வேளச்சேரி பகுதிச் செய லாளர் எஸ்.முகமது ரஃபி மனு அளித்துள்ளார். அதில், 178வது வட்டம் தந்தை பெரியார் நகர், பாரதி நகர், அண்ணா நகர், மகாத்மா காந்தி நகர், கலைஞர் நகர், கானகம், தரமணி ஆகிய பகுதிகளில் உள்ள பிரதான சாலைகள், உட்புறச் சாலைகள் , தெருக்கள் குண்டும் குழியுமாக உள்ளன. சிறு மழைக்கே குட்டை போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாலைகளில் பெரும்பாலானவை 10 ஆண்டுகளுக்கும் மேலாக செப்பனிடப்படாமல் உள்ளது. மோசமான சாலை , தெருக்களால் அவ்வப்போது விபத்துகள் நிகழ்கிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக சாலைகளை செப்பனிட்டு சீரமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், 178வது வார்டு உறுப்பினர் பாஸ்கர் ஆகியோரிடமும் மனு அளித்தார். இந்நிகழ்வின் போது, பகுதிக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராஜேந்திரன், ஏ.குமரேசன், என்.குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.