போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
சென்னை,பிப்.5- போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன் கூடிய ஓய்வூதியம் புதன்கிழமை (பிப்,5) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. போக்குவரத்துக் கழகங்களைப் பொறுத்தவரை குடும்ப ஓய்வூதியம் பெறும் 20 ஆயிரம் பேர் உள்பட சுமார் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒவ்வொரு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி அளிக்கும்போதும், ஓய்வூதியர்களுக்கு அந்த பலன் கிடைப்பதில்லை. இது தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்களை ஓய்வூதியர்கள் முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில், அண்மையில் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, 119 சதவீதத்துடன் அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டவர்களுக்கு கூடுதலாக 27 சதவீதமும், 5 சதவீதம் அகவிலைப்படி பெறுவோருக்கு கூடுதலாக 9 சதவீதமும் உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குறைந்தபட்சமாக ரூ.1,300, அதிகபட்சமாக ரூ.4,000 வரை ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வுடன் கூடிய தொகை புதன்கிழமை (பிப்,5) ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, “246 சதவீதம் அகவிலைப்படி பெற வேண்டியோருக்கு 146 விழுக்காடும், 48 விழுக்காடு பெற வேண்டியோருக்கு 14 விழுக்காடு மட்டுமே இடைக்கால நிவாரணமாக அரசு வழங்கியுள்ளது. மீதமுள்ள தொகையையும் விரைந்து வழங்க வேண்டும்” என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டாஸ்மாக் கடையில் கொள்ளை
மதுராந்தகம்,பிப். 5- மதுராந்தகம் அடுத்த கீலவலம்பேட்டையில் டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்டு ரூ.30 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கீலவலம்பேட்டையில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், செவ்வாயன்று விற்பனையாளர் வழக்கம்போல் கடையை மூடிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், புதனன்று காலை அப்பகுதியாக சென்றவர்கள் டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிடப்பட்டுள்ளதை பார்த்துள்ளனர். தகவல் அறிந்த மதுராந்தகம் காவல்நிலையத்தினர் மற்றும் டாஸ்மாக் கடை விற்பனையாளர் விரைந்து வந்து, கடையை திறந்து பார்த்தப்போது கடையில் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்களை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக, மதுராந்தகம் போலீஸார் வழக்கு பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
நகைப்பட்டறையில் தங்கக் கட்டிகள் திருடிய 2 பேர் கைது
சென்னை, பிப். 5- சென்னை யானைக்கவுனியில் நகைப்பட்டறையில் ஒன்றரை கிலோ தங்க கட்டிகள் திருடப்பட்ட வழக்கில், இருவர் கைது செய்யப்பட்டனர். யானைக்கவுனி வால்டாக்ஸ் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் அ.அதோர் அலி (35). இவர், அந்த பகுதியில் நகைப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது நகைப்பட்டறையில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த சபுல் பியாடா (32) என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார். சபுல் பியோடா, அங்கிருந்த ஒன்றரை கிலோ தங்க கட்டிகளை கடந்த 3}ஆம் தேதி திருடிக் கொண்டு தப்பியோடினார். இது குறித்து யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர். விசாரணையில் சபுல் பியாடா, தங்கக் கட்டிகளுடன் திருச்சிராப்பள்ளிக்கு சென்றிருப்பதும், அங்கு தனது நண்பர்களிடம் தங்க கட்டிகளை வழங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து திருச்சிராப்பள்ளி சென்ற போலீஸார், சபுல்பியாடா நண்பர்கள் மேங்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அ.அப்துல் அலிம் கெயின் (23), ஹ.நூர் ஹசன் முல்லா (23) ஆகிய 2 பேரை பிடித்து புதன்கிழமை விசாரணை செய்தனர். விசாரணையில் தங்க கட்டிகள் திருட்டுக்கு இருவரும் உதவியிருப்பதும், சபுல் பியாடா அவர்களிடம் தங்க கட்டிகளை கொடுத்திருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார், இருவரையும் கைது செய்து, 890 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக இருக்கும் சபுல் பியாடாவை போலீஸார் தேடி வருகின்றனர்.
குடும்பம் நடத்த மனைவியை அனுப்ப மறுத்த பெண் படுகொலை
சென்னை, பிப்.5- திருவொற்றியூர் ஐயா பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகள் செல்வி (22). இவருக்கும் திருப்பூரைச் சேர்ந்த காளிமுத்து (25) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு காத லித்துள்ளார். அதன்பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்தாண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில மாதங்களிலேயே இருவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, செல்வியை காளி முத்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படு கிறது. இதனால் செல்வி சென்னைக்கு வந்து, தனக்கு ஏற்பட்ட நிலையை தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். அப்படி யென்றால் இங்கேயே இருந்து விடு என பெற்றோர்கள் கூறியுள்ளனர். பலமுறை காளிமுத்து செல்வியை வரும்படி அழைத்துள்ளார். ஆனால் செல்ல மறுத்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக காளிமுத்து திருவொற்றியூரில் உள்ள செல்வியின் வீட்டு பக்கம் சுற்றிக்கொண்டிருந்துள்ளார். புதன்கிழமை (பிப். 5) காலை 5.30 மணியளவில் செல்வி வீட்டின் அருகே வந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வெளியே வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த செல்வியின் சித்தி தனலட்சுமி (45) என்பவர், காளிமுத்துவை தடுத்து, இங்கே நீ எதற்காக வந்தாய், உன்னுடன் செல்வியை அனுப்ப முடியாது என்று கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது காளிமுத்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனலட்சுமியின் கழுத்தை அறுத்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே காளிமுத்து அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு அவரை பரிசோதித்த மருத்து வர்கள், அவர் இறந்து விட்டதாக தெரி வித்துள்ளனர்.
பனகல் பார்க்- கோடம்பாக்கம் இடையே சுரங்கப்பாதை பணிகள் நிறைவு
சென்னை, பிப்.5- சென்னையில் ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இதில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புற வழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாத வரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் புதிய வழித்தடங்கள் அமைக்கப்படுகிறது. இதில் உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதைகள் அமைக்கப்படு கிறது. உயர்மட்ட பாதைக்கா க தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் 48 ரயில் நிலையங்கள் இடம் பெறு கின்றன. இதில் 3 நிலையங்கள் மிக தாழ்வாக அமைக்கப்பட உள்ளது. மாதவரம் – சிறுசேரி வழித்தடத்தில் கச்சேரி சாலை, ஆழ்வார்பேட்டை மற்றும் பாரதிதாசன் சாலையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மிக குறுகிய இடத்தில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக மெட்ரோ ரயில் சுரங்கம் பல அடுக்குகளாக அமைக்கப்பட இருக்கிறது. இந்த நிலையங்கள் குறுகியதாகவும், ஆழத்திலும் அமைய உள்ளது. 35 மீட்டர் ஆழத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக 2 சுரங்க வழித்தட பாதை அமைக்கப்பட உள்ளன. மயிலாப்பூரில் மெட்ரோ ரயில் 3 அடுக்கு சுரங்கப்பாதையாக அமைக்க திட்ட மிட்டுள்ளது. இந்த சுரங்கப் பாதைகள் அடுக்கு சுரங்கமாக ஒன்றன் பின் ஒன்றாக கீழே இருந்து கட்டப்படுகிறது. இந்நிலையில், மெரினா கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வழித்தடத்தில், பனகல் பார்க் முதல் கோடம்பாக்கம் இடையே 2.1 கி.மீ தூரத்திற்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இதற்கான பணிகளை தொடங்கிய பெலிகான் என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் தற்போது இந்த 2.1 கி.மீ., தூர சுரங்கப்பணிகளை நிறைவு செய்துள்ளது.