சென்னை, பிப். 1- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவரும், அரசு ஊழியர் சங்கத்தின் வடசென்னை முன்னாள் மாவட்டத் தலைவருமான சுந்தரம்மாள் பணி நிறைவு பாராட்டு விழா சென்னையில் செவ்வாயன்று (பிப். 1) நடைபெற்றது. கூட்டத்தில் தலைவர்கள் பேசுகையில், சுந்தரம்மாள் இனிமையாக பழகக் கூடிய களப்போராளியாவார். போராட்டங்களை திட்டமிடுவதில் வல்லவர், ஊழியர்களை அணிதிரட்டுவதில் அவரின் பங்கு மகத்தானது. அவர் சங்கப் பணியாற்றுவதற்கு உறுதுணையாக அவரது குடும்பமே இருந்தது. 2010ஆம் ஆண்டு சத்துணவு ஊழியர்கள் கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் செய்த போது, காவல் துறையினரின் அனைத்து தடுப்புகளையும் தகர்த்து துணிச்சலுடன் தலைமைச்செயலகத்திற்குள் சென்று குரல் கொடுத்தவர். சத்துணவு, அரசு ஊழியர் சங்கம், ஜாக்டோ ஜியோ நடத்திய வீரம் செரிந்த போராட்டங்களில் முத்திரை பதித்தவர். வீரப்பெண்மணி சுந்தரம்மாள் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டதில் இருந்து ஓய்வுபெறும் வரை ஏற்றுக் கொண்ட கொள்கையில் உறுதியுடன் இருந்து செயல்பட்டார்.
அவர் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவரது சங்கப் பணியையும், சமூகப் பணியையும் தொடர வேண்டும். எனக் கேட்டுக் கொண்டனர். மேலும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் அவரது மகள், மருமகன் ஆகியோரையும் வெகுவாக பாராட்டினர். இந்நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் வே.விஜயகுமாரன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அமைப்பாளர் ஜெ.சரஸ்வதி வரவேற்றார். இதில் அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, நெ.இல.சீதரன்(அனைத்துதுறைஓய்கூதியர்சங்கம்), அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில பொருளாளர் ந.ஞானகுரு, சத்துணவு ஊழியர் சங்க தலைவர்கள் மலர்விழி, கே.ஆண்டாள், த.வாசுகி, ஆ.பெரியசாமி, பி.ராமமூர்த்தி, கே.பழநிச்சாமி, ச.சுந்தரமூர்த்தி, கற்பகம், கு.வெங்கடேசன் (தலைமைச்செயலகம்), சா.டானியல் ஜெயசிங், தெ.வாசுகி, உ.சுமதி, ஹேமலதா, ம.அந்தோணிசாமி, சி.கலைச்செல்வி, எஸ்.ஏ.வெற்றிராஜன், ஜெ.பட்டாபி, தியாகராஜன் (அரசு ஊழியர் சங்கம்), சி.பரமேஸ்வரி (மாநில மகளிர் அமைப்பாளர்) ஆகியோர் பேசினர். ப.சுந்தரம்மாள் ஏற்புரையாற்றினார். நிறைவாக த.ஏழுமலை நன்றி கூறினார்.