சென்னை, டிச. 30 - வடசென்னை மாவட்டத்திற்கு தனி நலவாரிய அலுவலகம் அமைக்க வேண்டும் என தையல் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. சென்னை பெருநகர தையல் தொழிலாளர் சங்கத்தின் ஆவடி தொகுதி 15ஆவது மாநாடு தோழர் வி.பி.சிந்தன் நினைவகத்தில் ஞாயிறன்று (டிச. 30) நடைபெற்றது. தலைவர் டி.ராமமூர்த்தி தலைமை தாங்கினார். டி.தேவன் சங்க கொடியை ஏற்றினார். துணைச் செயலாளர் எஸ்.நடேசன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு வடசென்னை மாவட்ட துணைச் செயலாளர் மா.பூபாலன் மாநாட்டை துவக்கி வைத்தார். செயலாளர் என்.கே.ரவிக்குமார் வேலை அறிக்கையையும், குணசேகர் வரவு,செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்டத் தலைவர் பி.கோவிந்தசாமி, செயலாளர் ஜி.குண சேகர், பொருளாளர் ஆர்.மணிமேகலை ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.லெனின் சுந்தர் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக துணைச் செயலாளர் ஜி.எழில் ஆனந்த் வரவேற்றார். துணைச் செயலாளர் எஸ்.வாசுகி நன்றி கூறினார். தீர்மானங்கள் தையல் தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு தனி நிதியம் உருவாக்க வேண்டும், தையல் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்றார்போல் தையல் நலவாரிய பணப்பயன்களை அதிகரிக்க வேண்டும், வேலை வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் தையல் கடைகளுக்கு உரிமம் பெற வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது, தமிழக அரசால் நடத்தப்படும் இலவச பள்ளி சீருடை தைக்கும் பெண் தையல் தொழிலாளர்களுக்கு பாரபட்ச மின்றி அனைவருக்கும் துணிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு தலைவராக டி.ராமமூர்த்தி, செயலாள ராக என்.கே.ரவிக்குமார், பொருளாளராக ஜி.எழில் ஆனந்த் உள்ளிட்ட 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.