திருவண்ணாமலை,நவ.14- திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் தாலுகா தென்மலை அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், பிரகாஷ், சக்திவாசன் உள்ளிட்ட நான்கு பேர் ஜவ்வாது மலைப்பகுதியில் மான் வேட்டைக்கு சென்றனர். அப்போது, வனப்பகுதியில் மானை துப்பாக்கியால் சுட முயன்ற போது வேட்டைக்குச் சென்ற சக்திவேல் என்ற இளைஞர் துப்பாக்கி குண்டு பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பிரகாஷ் என்ற இளைஞர் முகத்தில் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, வனத்துறை மற்றும் காவல் துறையிடம் தகவல் அளிக்காமல் சக்திவேலின் உறவினர்கள் உடலை அடக்கம் செய்ய முயன்ற போது, புதுப்பாளையம் மற்றும் ஜமுனாமரத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சக்திவேலின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துனர். மான் வேட்டைக்கு சென்ற போது எதிர்பாராத விதமாக துப்பாக்கியால் சுடப்பட்டு, வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், உடன் சென்றவரை விசாரணைக்காக செங்கம் காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள நபரை தேடி வருகின்றனர்.