districts

img

குல்பி ஐஸ் சாப்பிட்ட 35 குழந்தைகள் வாந்தி மயக்கம்

விழுப்புரம்,ஆக.19-  விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி அருகே முட்டதூரில்  குல்பி ஐஸ் சாப்பிட்ட 35 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது   விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட முட்டத்தூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஒரு நபரிடம் அப்பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் சிலர் குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்டனர்.   பின்னர் இரவு ஐஸ் சாப்பிட்ட சிறுவர், சிறுமிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஒவ்வொருவராக மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.   அங்கு 3 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட மொத்தம் 35 சிறுவர், சிறுமிகளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். குல்பி ஐசில் ஏதேனும் மயக்க மருந்து கலந்து உள்ளதா, அல்லது கெட்டுப்போன ஐசை வாங்கி சாப்பிட்டதால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதா என்பது குறித்து சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுவர், சிறுமிகளுக்கு குல்பி ஐஸ் விற்பனை செய்த மர்ம நபரை விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகிறார்கள். இதனையறிந்த மாவட்ட ஆட்சியர் பழனி சனிக்கிழமை முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார், அப்போது எம்எல்ஏ புகழேந்தி உட்பட பலர் உடனிருந்தனர்.