சென்னை, ஏப்.2- சென்னை மெட்ரோ ரயிலின் 2-வது கட்ட திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் 5-வது வழித்தடத்தில் கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் மிகஅதிக உயரத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. தற்போது உள்ள 1 மற்றும் 2-ம் கட்ட வழித் தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் பாதைக்கு மேலே இந்த வழித்தடம் அமைகிறது. இதனால் அந்த பகுதியை பயணிகள் மெட்ரோ ரயில் மூலம் கடக்கும் போது புதிய உணர்வை ஏற்படுத்தும். இன்னும் சில ஆண்டுகளில் புதிய பாதையில் பயணிக்கும் போது நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்படும் மேம்பாலம், குறுக்காக கீழே செல்லும் மெட்ரோ ரயில்களை பார்த்து ரசிக்க முடியும். இதுகுறித்து திட்ட இயக்குநர் டி.அர்ச்சுணன் கூறியதாவது:-விம்கோ நகர்-விமான நிலையம், சென்ட்ரல்-பரங்கிமலை மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கு மேலே இந்த மேம்பாலம் அமைவது சவாலான பணியாகும். ‘பேலன்ஸ் கான்டிலீவர்’ என்ற பொறியியல் முறையை பின்பற்றி சமச்சீர் கான்டிலீவர் முறை 2 காரணங்களுக்காக எடுக்கப்படுகிறது. சாலையில் அதிக போக்குவரத்து இருக்கும் போது தரையில் குறைந்த இடவசதி இருப்பதாலும் இந்த முறை செயல்படுத்தப்படுகிறது. மேலும் தூண்களை மிக உயரத்தில் கட்ட வேண்டும். இந்த முறையில் தூண்களுக்கு இடையே உள்ள தூரம் மிக அதிகம். முதல் கட்ட மெட்ரோ ரயில் பணியில் அதே முறையை பயன்படுத்தி தூண்கள் கட்டப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார். இதுபற்றி எல் அண்ட் டி திட்ட மேலாளர் கிருஷ்ண பிரபாகர் கூறுகையில், சமச்சீரான கேண்டிலீவர் கட்டுமானத்தில் பட்ரோடு மற்றும் ஆலந்தூர் இடையே கூர்மையான வளைவை உருவாக்க சிறப்பு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. 125 மீட்டர் சுற்றளவுக்கு இந்த வளைவு பாதை அமைகிறது என்றார்.