சென்னை, ஜன.2- தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தின் சார்பில் 15வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் சதுரங்க போட்டி வியாழக்கிழமை (ஜன.2) தொடங்கியது. இந்த போட்டியை தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தின் தலைவர் டாக்டர் எம். மாணிக்கம் துவக்கி வைத்தார். , உலக சதுரங்க கூட்டமைப்பின் முன்னாள் துணைத் தலைவரான டி.வி. சுந்தர், இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டரான மணுவேல் ஆரோன் (இது வரை ஒன்பது முறை தேசிய சாம்பியன்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரூ.40 லட்சம் பரிசுத்தொகை மொத்தம் ரூ.40 லட்சம் பரிசுத்தொகை கொண்ட இந்த போட்டியில், 22 நாடுகளில் இருந்து கிராண்ட்மாஸ்டர்கள் மற்றும் சர்வதேச மாஸ்டர்கள் பங்கேற்றுள்ளனர். ரயில்வேயை சேர்ந்த சர்வதேச மாஸ்டர் அரோண்யக் கோஷ் தர வரிசையில் முதல் இடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து சிங்கப்பூரின் சித்தார்த் ஜகதீஷ் மற்றும் தமிழ்நாட்டின் பா. இனியன் அடுத்தடுத்த தரவரிசையில் உள்ளனர். 8 நாட்கள் போட்டி பத்து சுற்றுகள் கொண்ட இந்தபோட்டி எட்டு நாட்கள் நடைபெறும். மொத்தம் 176 வீரர்கள் பங்கேற்கின்றனர். 'ஏ' பிரிவு போட்டியின் பரிசுத்தொகை ரூ.20 லட்சம், அதில் முதல் பரிசாக ரூ.4 லட்சமும், இரண்டாவது பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படுகிறது. 'பி' பிரிவு போட்டி, ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் நடை பெறுகிறது. இதற்கான மொத்த பரிசுத் தொகை ரூ.10 லட்சம் ஆகும். இதில் நான்கு நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னை நகரத்தைச் சேர்ந்த ஆர். அனிருத் மற்றும் சிவன் எஸ். ரோஷன் ஆகியோர் இந்த பிரிவில் முன்னணியில் உள்ளனர். மூன்றாவது நிலை வீரரான கேரளாவின் சஞ்சய் எஸ். பிள்ளை, மகளிர் பிரிவில் முன்னாள் சாம்பியன், 64 வயதுடைய மூத்த வீராங்கனையுமான தமிழ்நாட்டின் எஸ்.ஆர். ராதா, தமிழ்நாட்டைச் சேர்ந்த பி. இன்பன் மற்றும் அஷ்வா சண்முகம் ஆகியோரும் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர்.