ராணிப்பேட்டை, செப்.4- ராணிப்பேட்டை மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று (செப்.3) மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசுகையில், “இம் மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட பதிவு பெற்ற ஸ்கேன் மையங்கள் உள்ளது. அரசு பதிவு பெறாத ஸ்கேன் மையங்கள் குறித்த தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்க, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆற்காடு மற்றும் சோளிங்கர் வட்டாரங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து காணப்படுகிறது. ஆகவே இது குறித்து சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வளர்ச்சித் துறை, சுகாதாரத்துறை மூலம் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதில் ஊடகவியலாளர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகவே, பத்திரிகையாளர்கள் அனைவரும் பெண் குழந்தைகளின் நலன்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்”என்று அவர் கேட்டுக்கொண்டார். இதில் மாவட்ட சமூக நலன் அலுவலர் வசந்தி ஆனந்தன் (பொறுப்பு), துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி சந்திரலேகா (பயிற்சி), இலவச சட்ட உதவி சமரச மைய வழக்கறிஞர் எம். சங்கரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செ. அசோக், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை உதவி திட்ட அலுவலர் மரு. கோமதி, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி தா. மலர்விழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.