எரிபொருள் விலை உயர்ந்தால் எல்லா பொருட்களின் விலையும் உயரும் என்பதும் தெரிந்தே ஒன் றிய மோடி அரசு கேஸ் சிலிண்டர் விலையை தொடர்ந்து ஈவிரக்கமற்ற முறையில் ஏற்றி வருகிறது. சிலிண்ட ரின் விலை உயர்வை கேட்கும் போதே, சாமானிய மக்களின் வயிறும் சேர்ந்தே எரிகிறது. சமையல் எரிவாயுவிற்கு வழங்கி வந்த மனியத்தை மக்களின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கு வோம் என அறிவித்த மோடி அரசு அறிவித்தது. அப்போதே, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி கள் இது மோசடி திட்டம்.. முற்றிலும் மானியத்தை ஒழிக்கும் நயவஞ்சம் என சாடின. அப்போது இல்லை என மறுத்த மோடி அரசு.. தற்போது அதனை நயவஞ்சகமாக நிறைவேற்றி வருகிறது. அதன் வெளிப்பாடே படிப்படியாக மானியத்தின் அளவை குறைத்து. தற்போது மொத்த விலையையும் மக்களே செலுத்தும் நிலை யில் நிறுத்தியிருக்கிறது. கடந்த 14 மாதங்களில் மட்டும் 12 முறை கேஸ் சிலிண்டரின் விலையை மோடி அரசு உயர்த்தியிருக்கிறது. தற்போதை விலை உயர்வுடன் சேர்த்து ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.1069 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த விலை உயர்வு கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தருமபுரி ஆகிய மாவட்டங் களைச் சேர்ந்த பொதுமக்களிடம் கருத்து கேட்டோம். அவர்கள் கூறிவை.
ஒன்றிய அரசு ஏழை, எளிய நடுத்தர மக்க ளின் மீது விலைவாசி உயர்வு என்ற அம்பு களை தொடர்ந்து எய்து வருகிறது. இந்த விலைவாசி உயர்வுகளினால் பெரும் பாதிக்கப்படு வது கிராமப்புற தினக்கூலிக்கு செல்லும் பொது மக்களே. கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குழந் தைகளின் கல்வி, மருத்துவம் மற்றும் இதர தேவை களை பூர்த்தி செய்வதே கிராமப்புற ஏழை மக்களின் லட்சியமாகும். வறுமையிலிருந்தாலும், தங்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கக்கூடாது என்று கவலைக்கொள்ளும் பெற்றோர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆனால், அத்தகைய பெற்றோரிகளின் தியாகத்தை புரிந்து கொண்ட கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், தற்போது விலை உயர்ந்துள் ள சமையல் எரிவாயு பிரச்சனை குறித்து கூறு கையில்,
நிஷாந்த் ராஜூ
“நான் உட்பட 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியூரிலிருந்து வந்து கல்லூரியில் படிப்பதற்கு வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளோம். நாங்கள் மூன்று நேரமும் சமைத்து தான் சாப்பிடுகிறோம். சொந்த ஊரிலிருந்து வரும் போது, அரிசி, தானியங்கள், பாத்திரங்கள், கொண்டு வந்து சமைக்கிறோம். ஆனால், புதிதாக சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் கட்ட வேண்டியுள்ளது. இதுபோக சிலிண்டர் வாங்குவதற்கு ஆயிரத்து 500 ரூபாய் கட்ட வேண்டும். நாங்களோ கல்லூரி மாணவர்கள். இப்படி சிலிண்டர் விலை ஏத்திக்கிட்டே போனா, நாங்க சாப்பிட்டுக்கு என்ன பன்னுறது?
பிரகாஷ்
“கொரோனா காலத்திலேயே எனது குடும்பம் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டது. இப்பதான் கொஞ்சம் மேலே எந்திருச்சு வரப்போ, இப்படி சிலிண்டர் விலையை ஏத்திப்புட்டீங்களே. இதனால் என்போன்ற நடுத்தர வர்க்கத்தினர் எப்படி மேலே வர முடியும். அத நீங்களே சொல்லுங்க” என்றார்.
பெருமாள்
“தனிமனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அளித்திடுவோம்” என்ற பாரதி கூற்று பொய்த்து போக வைக்கும்படி உள்ளது இந்த சிலிண்டர் விலை உயர்வு. சிலிண்டரின் விலை இப்படி உயர்த்தினீங்கனா, நாங்க எப்படி சமைப்போம்? சாப்பிடுவோம்?. எனவே, சிலிண்டர் விலையை உடனடியாக குறைக்க வேண்டும்.
கிருபாகரன்
“பணக்காரர்களுக்கு சிலிண்டர் விலை 2 ஆயிரமா இருந்தாலும் பரவாயில்ல, 4 ஆயிரமா இருந்தாலும் பரவாயில்ல. ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு அந்த 2 ஆயிரந்தான் வாரச்சம்பளம். அந்த காச வைச்சு எப்படி குடும்பத்த ஓட்டுவாங்க. ஏற்கனவே சிலிண்டர் விலை 700 ரூபாய் இருக்கும்போதே கிராமமக்கள் கடன் வாங்கி தான் சிலிண்டர் வாங்குனாங்க. இப்படி இருக்குறப்போ, இந்த சிலிண்டர் விலை உயர்வை அங்க எப்படி தாங்கிப்பாங்க. அந்த ஆட்சியோட (ஒன்றிய பாஜக அரசு) முடிவெடுத்து அமலாக்கும் திறன் சரியில்லை. இப்படியே போயிட்டு இருந்தா இந்தியாவின் பொருளாதார குறியீடு குறைஞ்சுரும்” என்றார்.
இதற்கிடையே சிலிண்டர் விலை உயர்வு குறித்து பேட்டி எடுக்க செல்கையில், ஒரு சிலர் “ஏன்பா! இப்படி சிலிண்டர் விலையை ஏத்திகிட்டு போற பிரதமர் மோடிய ராஜினாமா செய்ய சொல்லுங்பா” என்றும், தேநீர் கடை வியாபாரிகள் “தம்பி! எனக்கே வியாபாரம் ஆகமாட்டீங்குது. இதுல இந்த சிலிண்டரு விலைய வேற ஏத்துப்புட்டாங்க. எனது வருமானமே இந்த டீக்கடைய நம்பி தான் போயிட்டு இருக்கு. இங்க வருமானம் இல்லாட்டி நான் வீட்டுல வேற வாங்குற சிலிண்டருக்கு எப்படி காசு கட்டுறது? கடைக்கு வாங்குற சிலிண்டருக்கு எப்படி காசு புரட்டுறது” என கேள்வி எழுப்பியுள்ளனர்.
சரவணா
ஊராட்சி மன்றம் வார்டு உறுப்பினர்
இந்த ஒரு வருஷத்துல மட்டும் 250 ரூபாய்க்கு மேல கேஸ் விலையை ஏத்திட்டாங்க. இப்போ 50 ரூபாய் ஏத்திருக்கிறார்கள் இதனால் சாதாரண மக்கள் ரொம்ப கஷ்டப்படுறோம். விலைவாசி ஒரு பக்கம் ஏறிக்கிட்டே போகுது ஆனா கூலி மட்டும் பல வருஷமா அதே நிலைலதான் இருக்குது. 100 நாள் வேலை கூட முழுசா கிடைக்கிறது இல்லை. அதனால வாழ்வதே ரொம்ப சிரமமாக இருக்கிறது. பசங்களை படிக்க வைக்கிறது அதுக்கு மேல கஷ்டமா இருக்குது எனவே மோடி அரசு இந்த கேஸ் விலைய குறைக்கனும்.
\மகேஸ்வரி பென்னாகரம்
தொடர்ந்து கேஸ் விலை ஏறி வருவதால் இனி கேஸ் பயன்படுத்த முடியாத நிலைதான் உள்ளது. நாங்கள் கூலி தொழில் தான் செய்து வருகிறோம். அன்றாட செலவுக்கு கஷ்டப்பட்டு வருகிறோம். இப்படி இருக்கும் போது மோடி அரசு தொடர்ந்து கேஸ் விலையை ஏற்றுவதால் இனி பழைய காலம் போல் அடுப்பில் தான் சமைக்க வேண்டிய நிலை ஏற்படும். தொடர்ந்து கேஸ் விலை ஏறுவது என்பது சரியானது அல்ல மோடி அரசு உடனடியாக கேஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.
தேவிகா –
சிலிண்டர் விலையை இப்படியே தினமும் ஏத்திகிட்டு இருந்தா எங்கள மாதிரி கஷ்டப்படுரவங்க என்னதான் பன்னுவது. போன மாசம் 980 ரூபாய்க்கு வாங்கினேன். இப்போ 1060 ரூபா எங்கள போல ஏழைகளுக்குத்தான் அரசாங்கம் ஆட்சி நடத்த வேண்டும். இப்ப யாருக்கு ஆட்சி நடத்துறாங்கன்னே தெரியவில்லை. சம்பளம் கொஞ்சம் கூட உயரவில்லை. பிள்ளைகளை படிக்க வைக்கனும், சாப்பிடனும், வீட்டுவாடகை கொடுக்கனும், நல்லது கெட்டது பார்க்கனும் இப்படியே விலைவாசி உயர்ந்துகிட்டே இருந்தா எப்படி வாழ்வது.
ஜெயலட்சுமி
இருக்கிறவங்க எவ்வளவு விலை ஏத்தினாலும் வாங்குவாங்க. இல்லாதவங்க என்ன செய்ய முடியும். குழந்தைகுட்டியை வைத்துக்கொண்டு பொழப்ப நடத்துறதே கஷ்டம். தயவு செய்து கேஸ்விலையை அரசாங்கம் குறைக்கனும். அவ்வளவு பணம் கொடுத்து எங்கலாலே வாங்கவே முடியாது.
மகேஷ்வரி
நாங்க அன்றாடம் வேலைக்கு போனாதன் கஞ்சி குடிக்க முடியும். இப்படி அடிக்கடி விலையை ஏத்துனா எப்படி நாங்க கஞ்சி குடிக்கிறது. பொழைக்கிறது. மோடி அரசாங்கம் பன்னுவது கொஞ்சம்கூட சரியில்லை. எங்கள மாதிரி பட்ஜெட் போட்டு வாழுறவங்க. பத்திரிகை காரங்கதான் எதையாவத எழுதி சிலிண்டர் விலைய குறைக்கனும் -
சுதா
இந்த மோடி அரசாங்கம் நல்லது செய்ரேன்னுதான் ஒவ்வொரு தடவையும் சொல்ராங்க. ஒரு நல்லதும் செய்யிலையே. நாங்கள் ஒரு கோடு போட்டு அந்த கட்டுப்பாட்டுக்குள்ள வாழனும்னு நினைக்கிறோம். அப்படி வாழ இந்த அரசாங்கம் விடாது போல. பேசறது எல்லாம் நல்லாத்தான் பேசுறாங்க. செயல்ல ஒன்னுமே காணேம். இப்போ சிலிண்டர் விலைய ஏத்தியிருக்காங்க. அதுக்காக சமைக்காம இருக்க முடியுமா. வாங்கித்தான் ஆகனும் எங்கள போல ஏழை பாழைகளுக்கு வேற வழியே இல்லை.
.சந்தோஷ்
எங்க வீட்டில நான், என் அம்மா, பாட்டி மூன்று பேர் உள்ளோம். உண்மையச்சொல்லனும்னா எங்க வீட்டில கேஸ் தீர்ந்து இரண்டு நாளாச்சு. ஆட்டோ ஓட்டமும் இல்ல. காசு வந்தா சிலிண்டர் வாங்கலாம்னு இருந்தேன். இப்போ மறுபடியும் 50 ரூபாய் விலைய ஏத்திட்டாங்க. வீட்டுக்குபோனா எங்க பாட்டி நேத்தே புக்பன்னுன்னு சொன்னேன் கேட்டியான்னு கத்துவாங்க. ஏற்கனவே பெட்ரோல் விலை ஏறியிருச்சு வாடகையை உயர்த்தியும் வாங்க முடியவில்லை. எப்படியாவது வாடகை வந்தா சரின்னுதான்னு இருக்கிறோம். அனாலும் வண்டி நகரவே இல்லை. இதுபோதாதுன்னு சிலிண்டர் போடரவருக்கு ஐம்பது ரூபா எச்சா கொடுக்கனும். ரொம்ப கஷ்டம் சார்…
காளீஸ்வரன்
- சம்பாதிக்கிறது மாசம் மூவாயிரம் ரூபாய்கூட வராது. இதுல ரெண்டு மாசத்திற்கு ஒருதடவ இரண்டாயிரம் ரூவா சிலிண்டருக்கே போச்சுன்னா எத வச்சு திங்கறது. பெட்ரோல், கேஸ் விலைய இப்படி ஏத்திட்டே இருக்காங்க, ரெம்ப கஷ்டம்தான். வீட்டுல பொம்மளைங்க கட்டிட வேலைக்கு போறாங்க. வாரத்திற்கு இரண்டு நாள், மூனு நாள்தான் வேலை அதுவும் இப்ப மழைங்கிறதால வேலை இல்லைன்னு முடுக்விடுவாங்க. இனி மூனு மாசத்திற்கு இப்படித்தான் மழையில எங்க பொழப்பு நாறிப்போயிரும். இவங்களுக்கு ஓட்டுப்போட்டதுதான் மிச்சம். இனியும் விலைவாசி ஏறத்தான் செய்யும். காசு வாங்கிட்டு ஓட்டு போட்டா இப்படித்தான் அனுபவிக்கனும். நான் ஒருத்தன் பேசுறதால என்ன ஆயிரப்போகுது. எல்லாம் ஒத்துமையா தட்டிக்கேட்டாத்தான் நடக்கும் –
நடராஜன்
மோடி ஆட்சிக்கு வர்றபோது நல்லது செய்யுறேன்னுதான் ஆட்சிக்கு வந்தார். இப்ப பாலுக்குகூட ஜிஎஸ்டி போட்டிருக்கிறார். இப்போ எல்லாத்துக்கும் சிலிண்டர் அவசியம்னு ஆயிருச்சு. மாசத்திற்கு 4 சிலிண்டர் கொடுத்தாலும் வாங்கிறதுக்கு காசு வேணும்ல. இல்லாதவனுக்கே எல்லா சுமையும் தலையில ஏத்துனா எப்படி எங்கள மாதிரி நடுத்தர மக்கள் வாழமுடியும். டீ,காபிகூட இப்ப நாங்க கம்மி பன்னிட்டோம். இதவிட எப்படி செலவ நாங்க குறைக்கிறதுன்னு தெரியவில்லை. இப்ப சிலிண்டர் வாங்க அடுத்தவங்க கிட்ட கடன் வாங்க வேண்டிய சூழல் இருக்கிறது. மோடி அரசு பொதுமக்களுக்கு நன்மை செய்வதற்கு என்ன வழியோ அதைச்செய்ய வேண்டும்.
.நாகராஜ்
பட்ஜெட் போட்டு இனிமேல் நாம குடும்பம் நடத்த முடியாது. அவங்க போடுற பட்ஜெட்டிலதான் நாம் வாழ வேண்டியதாக உள்ளது. நான் சாப்பாடு விற்கிறேன். ஒரு பொட்டலம் முப்பது ரூபாவுக்கு விற்கிறேன். எல்லா பொருளுக்கு விலைவாசி உயர்ந்திருச்சு 5 ரூபா கூட வைச்சு 35 ரூபாய விற்கலாம்னா மக்கள் யாரும் வாங்க மாட்டாங்க. அவங்ககிட்டயும் காசு வேணுமில்லைங்க. எதோ இருக்கிறதற்காக பொழப்ப ஓட்டறோம் வேறென்ன சொல்ல.
வைஜெயந்தி தருமபுரி
தருமபுரி பிடனேரி பகுதியில கூலி வேலை, தள்ளுவண்டி வியாபாரம் செய்யிரவங்க வாழுகிற பகுதி. முழுக்க ஏழைங்கதான் இந்த பகுதியில் இருக்காங்க. மோடி அரசு தினம் தினம் கேஸ் விலைய உயர்த்துனா, ஜனங்க எப்படி வாழ முடியும். நாங்க வீட்டுவேலை செய்தா மாதம் 4000 கிடைக்கும். இதில் சிலிண்டருக்கே 1,100 ரூபாய் கொடுத்துட்டா நாங்க என்ன பன்றது.
விசாலாட்சி பூ வியபாரி தருமபுரி
நாங்க பூ கட்டி வியாபாரம் செய்யிரோம். கொரோனா காலத்தில் வேலை இல்லாம தவிச்சோம். இப்பதான் வியபாரம் செய்யுரோம். ரேசனுல அரசி பிரியா கொடுக்குறாங்க. சிலிண்டர் விலைய உயர்த்திட்டா நாங்க எப்படி சாப்பிட முடியும். கூலி வேலை செய்யிரவங்களுக்கு கூலி உயர்த்துல. அன்றாட வாழ்க்கையே எங்களால தள்ளமுடியுல நாங்க எப்படி ஆயிரத்து நூறு ரூபாய் கொடுத்து கேஸ் வாங்கறது. அதனால சிலிண்டர் விலையை குறைக்கனும்.
தனலட்சுமி தருமபுரி
கேஸ் விலை மாதமாதம் விலை ஏத்துராங்க முன்னாடி கேஸ்சுக்கு மானியம் கொடுத்தாங்க. இப்ப அதநிறுத்திட்டாங்க. எலக்சன் அப்ப கேஸ் பிரியா கொடுக்கிறதா சொன்னாங்க ஆனா அதை செய்யில இப்ப மாசாமாசம் விலை உயர்த்துராங்க விலை ஏற்றத்தால கேஸ் வாங்க முடியாமா தவிச்சுக்கிட்டு இருக்கிறோம்.
ராணி நெல்லிநகர் தருமபுரி
எங்களுக்கு சொந்தவீடு இல்லை வாடகை வீட்ல இருக்கோம் எங்க வீட்டுகாரரு வாட்சிமேன் வேலைக்கு போறாரு. நாங்க ரேசன் அரிசி தான் வாங்கி சாப்பிடுவோம். வீட்டு வாடகை கட்டமுடியுல இந்த சூழ்நிலையில கேஸ்விலைய உயர்த்துனா நாங்க எப்படி பிழைக்கிறது.
ஆயிஷா குமாரசாமி பேட்டை தருமபுரி
கேஸ் விலை நேற்று ஏத்திருக்காங்க இப்படி மாசாமாசம் விலை ஏத்துனா எப்படி பேமிலி ரன் பன்றது. எங்களுக்கு கிடைக்கிற குறைந்த பணத்துல வீட்டு வாடகை கட்டறதா, குழந்தைகளுக்கு பீஸ் கட்டுவதா இல்லை மளிகை பொருள்கள்தான் வாங்கமுடியுமா. காவர்மென்ட் கேஸ் விலையை குறைக்னும்.
புஷ்பலதா கோல்டன்தெரு தருமபுரி
நாங்க வீட்டுவேலை செய்து பிழைக்கிறோம் தினம்தினம் கேஸ் விலை ஏத்துறாங்க. வசதியா இருந்தா வாங்கலாம் எங்கமாதிரி ஏழைங்க எப்படி வாங்க முடியும். கேஸ் வாங்க வழியில்லனு வீட்ல விறகு அடுப்பு பத்தவச்சா வீட்டு ஓனரு வீட்டு காலிபன்ன சொல்லுவாங்க. நாங்கெல்லாம் வாழ்றது எப்படின்னு தெரியில.
நாகம்மாள்
ஏற்கனவே பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் கேஸ் சிலிண்டர் வாங்குவதே பெரும்பாடாக உள்ளது. இனி பழைய கால வழக்கப்படி விறகு பெருக்கி வைத்து சமையல் செய்வதை தவிர வேறு வழியில்லை என கூறினார்.
பூர்ணிமா
கேஸ் விலை ஒவ்வொரு மாதமும் விலையை கூட்டிக்கிட்டு போகின்றனர். 1ந் தேதி 1040.50 கேஸ் சிலிண்டர் விற்றது. திடீரென ரூ.50 உயர்ந்து 1090.50 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இனி கேஸ் சிலிண்டர் கொண்டு வரும் செலவுடன் மாதந்தோறும் 1130 செலவு செய்யவேண்டியுள்ளது. இதனால் கேஸ் விலை உயர்வு எங்கள் குடும்பத்திற்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பிள்ளைகளின் பள்ளி கட்டணம், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் தவித்து வரும் நிலையில் கேஸ்விலை உயர்வு சுமையை ஏற்படுத்தியுள்ளது.
உதகை பேட்டிகள்
சுப்பம்மாள் நாங்கள் கூலி வேலை செய்து வருகிறோம் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான எண்ணை, பருப்பு, அரிசி, காய்கறிகள், மசாலா சாமான்கள் வாங்குவதற்கே மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். அடுப்பு மூட்டிய காலம் போய் தற்போது கேஸ் சிலிண்டர் அடுப்பு வந்துவிட்டது. இந்த கால கட்டாயத்துக்கு நாங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறோம். எங்களுக்கு விறகு அடுப்பு என்பது சாத்தியமில்லாதது. அப்படி இருக்கும்போது கேஸ் சிலிண்டர் விலை என்பது தினந்தோறும் ஏறுகிறதால அச்சத்தை ஏற்படுத்துகிறது. அடிக்கடி ஏறுவதால் கேஸ் மட்டுமல்ல எங்களது பிரஷ்ஷரும் தான். ஒன்றிய அரசு எங்களை போன்றவர்கள் வாழ வைக்க வேண்டும்.
வெயிஸ் சி சி லியா -
கியாஸ் சிலிண்டர் உயர்வால் நாங்கள் கடையில் டீ விலை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் எங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்துவிட்டார்கள். இதனால் விலை அதிகரிக்க முடியாமல் நாங்கள் சிரமத்திற்கு உள்ளாகிறோம். ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. தற்போது கியாஸ்சிலிண்டர் உயர்ந்துள்ளதால் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளோம்.
பெயர் ஜெனிபர் –
சமையல் சிலிண்டர் விலையை கேட்டாலே தலை சுற்றுகிறது. ஆரம்பத்தில் அரசு மானிய விலையில் கியாஸ் சிலிண்டர்கள் வழங்கியது. அப்போது 400 முதல் 450 வரை விலை கொடுத்து வாங்கி நிம்மதியாக இருந்தோம். அதேபோல் முன்பு இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடவும், சமையல் அடுப்பு இரண்டுக்கும் சேர்த்து மாதம் ரூ1500 ஒதுக்கினால் போதுமானதாக இருந்தது. தற்போது சிலிண்டர்க்கு மட்டும் ரூ1100ம், பெட்ரோலுக்கு ரூ 1500 மாதம்மாதம் செலவு செய்ய வேண்டியதாக உள்ளது. எங்களது தலைமுறைதான் விறகு, மண்ணெண்ணெய் அடுப்பிலிருந்து கேஸ் அடுப்புக்கு மாறி உள்ளோம் இந்த நிலையில் கியாஸ்விலை உயர்ந்து வருவதால் கண்டிப்பாக நாங்கள் மீண்டும் முதியோர்கள் தலைமுறைக்கு செல்ல வேண்டிய நிலைதான் ஏற்பட்டுள்ளது.
டி.சுதா மாதர் சங்க கோவை மாவட்ட செயலாளர்
சிலிண்டர் விலை நிர்ணயம் ஒன்றிய அரசிடம் இருந்தபோது விலை கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது அது எண்ணை நிறுவனங்களிடமே ஒப்படைத்ததின் விளைவு தற்போது கண்கூடாக பார்க்க முடிகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 253 ரூபாய் ஒரு ஆண்டில் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் வாழ்வாதாரத்தில், வருமானத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துடன் வேலை இழப்பு வருமானமின்மை உள்ளிட்ட இந்த சூழலில் தொடர்ந்து நிலையற்றம் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. மேலும் நகர்ப்புறத்தில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கேஸ் இணைப்பைத் தவிர்த்து வேறு விறகு அடுப்பு போன்றவற்றிற்கு மாற முடியாது சுழலும் உள்ளது. இரண்டு சிலிண்டர் இணைப்பு பெற்றவர்களுக்கு மண்ணெண்ணெய் என்பதும் இல்லை. அவர்கள் வேறு வழியின்றி சிலிண்டர் வாங்கி ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுபோன்ற சூழலில் இந்த விலையேற்றம் என்பது மக்களை மேலும் மேலும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ள வைக்கிறது. ஆனால், இது எல்லாம் பற்றி கவலை கொள்ளாத ஒன்றிய அரசு மக்களை பற்றி சிந்திக்காமல் பெரு முதலாளிகளுக்காக இயங்கி வருகிறது. அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மாநிலக் குழுவின் அறைகூவல் படி கையெழுத்து இயக்கமும் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த கையெழுத்து பதிவுகளை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்க உள்ளோம். ஆகவே ஒன்றிய அரசு மக்களின் கஷ்டங்களை புரிந்து பெரு முதலாளிக்காக செயல்படாமல் மக்களுக்காக செயல்பட்டு உடனடியாக இந்த விலையேற்றத்தை தவிர்க்க வேண்டும்.
ஈஸ்வரி
கடந்த ஆட்சியின் போது 400 ரூபாய் ஆக இருந்த சிலிண்டரின் விலை தற்போது 1100 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒன்றிய பிஜேபி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அனைத்து பொருட்களின் விலையையும் ஏற்றி வருகிறது. பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மிகவும் ஏழை வாய்ந்தவர்களாக மாறுகின்ற சூழல் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இப்படி தொடர்ந்து விலையேற்றினால் அன்றாட கூலி வேலைக்கு சென்று வரும் நாங்கள் எப்படி குடும்பத்தை சமாளிப்பது.
சசிகலா
நான் எங்களது சொந்த ஊரை விட்டு இந்த ஊருக்கு பிழைப்பு தேடி வந்துள்ளேன். எங்கள் ஊரில் விவசாயம் செய்ய முடியவில்லை என்று இந்த ஊருக்கு வந்துள்ளேன். நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம் இந்த விலையேறத்தால் சிலிண்டருக்கு என்று தனியாக பணத்தை எடுத்து வைக்க வேண்டிய சூழல் உள்ளது. நாங்கள் எங்களது ஊரில் விறகு அடுப்பு வைத்து கூட சமைத்துக் கொள்வோம் ஆனால், இங்கு அவ்வாறான சூழலும் இல்லை. உடனடியாக இந்த விலையேற்றத்தை கைவிட வேண்டும்
பானுமதி
சிலிண்டர் விலையேற்றத்தால் மிகவும் பாதிப்படைந்து வருகிறோம். தினசரி வாழ்க்கை நடத்தும் எங்களைப் போன்றோருக்கு இவ்விலையேற்றம் ஏற்றதல்ல. இவ்வாறாக தொடர்ந்து விலைவாசி ஏறிக் கொண்டிருந்தால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து போகும்.
ஈரோடு மாதர் சங்க மாவட்ட செயலாளர் பிரசன்னா
சாதாரண மக்களும் புகை அடுப்பை விட்டு கேஸ் அடுப்பிற்கு வந்துவிட்டார்கள். இன்று சிலிண்டர் விலை உயர்வு பண்டைய கால வாழ்க்கைக்கு செல்ல வேண்டியதாக உள்ளது. உஜாலா திட்டம் என்பதை கொண்டு வந்து எல்லோருக்கும் கிடைத்து வந்த மானியத்தை வெட்டிவிட்டனர். ஆண்டுக்கு ஒருமுறை இரண்டாண்டுக்கு ஒருமுறை உயரும் நிலை என்பது மாறி 15 நாட்களுக்கு ஒருமுறை உயர்கிறது. வருமானத்தைக் குறைக்கக்கூடிய வழிவகைகளைச் செய்து விட்டு,பாமர மக்கள் வாழ்வதற்கே வழியில்லாத நிலையைக் ஒன்றிய அரசாங்கம் செய்து வருகிறது. ஓய்வூதியத்தை மட்டுமே நம்பி வீட்டில் அடுப்பெரிக்கக் கூடிய வயதானவர்கள், தனித்து வாழ்பவர்களின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. ஒன்றிய அரசின் சிலிண்டர் விலை உயர்வை மாதர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
சமையல் எரிவாயு விலை உயர்வு மகளிர் கருத்து
ஈரோடு
ஓட்டல் கடை ஊழியர்
எஸ்.தேன்மொழி
சிலிண்டர் வாங்குவதற்கே ஒரு தொகையை சேமித்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் ரூ.300, 350 இருந்த போது பிரச்சனையே இல்லாம இருந்துச்சு. இப்போ ஆயிரம் ரூபாய கடந்து போச்சு. சிலிண்டர் வாங்குவது இப்போ பெரிய மலையை வாங்குவதுபோல் உள்ளது. விலை குறைத்தால் நல்லாயிருக்கும்.
சிவகிரி தையல் தொழிலாளி
மோகனபிரியா
ஐயாயிரம், பத்தாயிரம் சம்பளம் வாங்குகிற எங்களைப் போன்றவர்களுக்கு எப்படி சிலிண்டர் வாங்கி பயன்படுத்துறதன்னே தெரியவில்லை. எல்லா விலையும் ஏறுகிறது. பெட்ரோல், டீசல் விலையைப் போல சிலிண்டர் விலையும் ஏறிக்கொண்டே போனால் வாழ்க்கை நடத்துவதற்கே மிகக் கடினம்தான்.
ஈரோடு தேவி (மளிகை கடை பணியாளர்)
350ரூபாய்க்கு விற்ற போது உங்கள் பணம் உங்கள் கையில் என்று வங்கியில் மானியத்தை செலுத்துவதாகக் கூறினர். படிப்படியாக விலை ஏறி இன்று 1050க்கு விற்கிறது. மானியம் வருவதாகவே தெரியவில்லை. விலை உயர்வு தான் வந்துள்ளது.
நம்பியூர் வேலுமணி
சிலிண்டர் விலை இப்படி உயர்ந்தால் எப்படி சாப்பிடுவது. வீட்டு செலவும் செய்து கொண்டு சிலிண்டரும் வாங்குவதற்கு முடியவில்லை. எங்களுக்கு வழங்கப்படும் பென்சனே மிகக்குறைவு. குடும்பத்தை நடத்த முடியவில்லை. சிலிண்டர் விலையை குறைச்சு குடுத்தால் பரவாயில்லை.
வீரமணிகண்டன்,
சிலின்டர் எரிவாயு விலை ஏற்றம் என்னை போன்ற கூலித் தொழிலாளிக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் எந்த வேலையும் இல்லை. என்னை போன்ற சாதாரணமான கூலித் தொழிலாளிக்கு எரிவாயு சிலிண்டர் வாங்கி பயன்படுத்துவதே ஆரம்பகாலத்தில் ஆடம்பரமாக இருந்தது. ஆனால் இப்போ அதுவே அத்தியாவசியமாகிவிட்டது. தற்போது மண்ணெண்ணெய் கூட எங்கள் முன்பை போல கிடைப்பதில்லை. எங்கள் வயிறுதான் எரிகிறது. தீ பற்றவைக்காமலேயே..!
வடிவுக்கரசி நான், பஞ்சாயத்து வேலையான நூறுநாள் வேலையில விவசாயக் கூலி வேலைக்கு போறேன், ஒரு நாள் கூலியாக ரூ,216 தர்றாங்க, இப்ப இருக்குற கேஸ் சிலிண்டர் விலை ஏறினத பாத்தா ரொம்ப கஷ்டமா இருக்கு, என்னோன ஒருவார கூலிய தான், கொடுத்து ஒரு சிலின்டர வாங்கவேண்டிய நிலையில இருக்கு போன மாசம் 1080 க்கு வாங்கினேன், ஆனா இப்போ 1,130 வரை வந்துடுச்சிங்க , போற போக்க பாத்தா கலைஞர் கொடுத்த அடுப்பையும் சிலின்டரையும் விலைக்கு வித்திட்டு பழைய படி விறகு அடுப்புலதான் சாப்பாடு செய்யும் நிலைமை வரும்!
- பாலசுப்ரமணியம்
இதுக்குத்தான கேஸ் கொடுத்தாங்க?
அதுக்கு மானியம் வரும்னு சொன்னாங்க இப்ப வரைக்கும் வரல! ஆனா 450 ரூபாயா இருந்த கேஸ் இப்போ 1130ரூபாய ஏறிடுச்சி, 680 ரூபாய், கூடுதலா விலையேத்துன அரசாங்கம், எப்படி எங்க வறுமைய ஒழிக்கும், எங்களதான் ஒழிக்குது!
தொகுப்பு: லெனின், எழில், அமீன், சக்திவேல், ராஜா, ஜீவா, மணியாழன், தினேஷ், விளாடிமிர் பீட்டர், பா.முத்துக்குமார், சக்தி சரவணன்.