districts

img

கார்ப்பரேட்டுகளின் கள்ளக்கூட்டுக்கு சாட்சியே ஒன்றிய பட்ஜெட்..!

“என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்” என்று எம்ஜிஆர் வாயசைத்த பாடல் ஒன்று உண்டு. அவ்வளவு வளங்களையும் கார்ப்ரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் ஒரு ஆட்சியாக மோடி தலைமையிலான பாஜக அரசு செயல்படுகிறது. வேலையின்மை, விலைவாசி உயர்வு என தொடர் தாக்குதல் பொதுமக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள போதும், சிஞ்சிற்றும் கவலை கொள்ளாது, கார்ப்ரேட்டுகளுக்கு சேவகம் செய்வதே என் தலையாய பணி என தவம் கொண்டிருக்கிறது பாஜக அரசு. அதன் சாட்சியாகவே ஒன்றிய பாஜக அரசின் இந்த பட்ஜெட் பிரதிபலித்துள்ளது என்கிறார்கள் மக்கள்…

ஓய்வூதியர்களை வஞ்சித்த பட்ஜெட்

நடப்பாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் ஓய்வூதியர்களைப் பெரிதும் வஞ்சித்துள்ளது. புதிய பென்சன் திட்டம் ரத்து, 8 ஆவது ஊதியக்குழு அமைத்தல், மூத்த குடிமக்களுக்கு நிறுத்தப்பட்ட ரயில் கட்டணச்சலுகையை மீண்டும் வழங்குதல், முன்னேற்றமான மருத்துவக்காப்பீடு, நிறுத்தப்பட்ட 18 மாத அகவிலைப் படியைத் திரும்ப வழங்குதல், 65 வயது முதல் கூடுதல் ஓய்வூதியம், மாதாந்திர மருத்துவப்படியை ரூ.3000 ஆக உயர்த்துதல், கம்முடேசன் தொகை பிடிக்கும் காலத்தை 12 ஆண்டுகளாகக் குறைத்தல் ஆகிய எந்தக் கோரிக்கை பற்றியும் அறிவிக்கப்படவில்லை. மொத்தத்தில் இது ஒரு ஓய்வூதியர் விரோத பட்ஜெட்டாகும். இந்தக் கோரிக்கைகளை வென்றடைய என்.சி.சி.பி.ஏ. அமைப்பின் அறைகூவலுக்கிணங்க தொடர் போராட்டங்களை மத்திய அரசு ஓய்வூதியர்கள் நாடு முழுவதும் நடத்த உள்ளோம் என அஞ்சல் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்க கோட்டச் செயலாளர் என்.ராமசாமி தெரிவித்துள்ளார்.

ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு, மறு கண்ணுக்கு வெண்ணயா!

தங்களுக்கு ஆதரவளிக்கும் மாநிலங்களுக்கு மட்டும் நிதியைக் கொடுத்துள்ளனர். மற்ற மாநிலங்களிலும் மக்கள் வசிக்கிறார்கள் என்ற எண்ணமே இல்லை அவர்களுக்கு. இதை ஏற்க முடியாது. எல்லா மாநிலங்களிலிருந்தும் ஜிஎஸ்டி வாங்கிக் கொள்கின்றனர். ஆனால், கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுப்பதே இல்லை. இச்சூழ்நிலையில் எந்த வரிப்பணமும் மத்திய அரசுக்கு போகக்கூடாது. தமிழகத்திலிருந்து எம்பி சீட் கிடைக்கவில்லை என்பதற்காக தமிழ்நாட்டை வஞ்சித்துள்ளனர். இது வன்மையான கண்டனத்திற்குரியது என இஸாரத்தலி தெரிவித்தார்.

சாதாரண மக்களுக்கு எதுவும் இல்லை.

இந்த பட்ஜெட்டில் சாமானியர்களுக்கானதாக எதுவும் இல்லை. டாப் லெவலில் இருப்பவர்களுக்கான பட்ஜெட் இது. தினக்கூலிகளுக்கு, நடுத்தர குடும்பங்களுக்கு இதில் எதுவும் இல்லை. கேஸ் விலை குறையவில்லை. பெட்ரோல் விலை குறையவில்லை. பள்ளிக் கட்டணங்கள் குறைகிறதா என்றால் இல்லை. அனைத்தும் மேல்தட்டு வர்க்கத்திற்கான பட்ஜெட்டாகவே உள்ளது என்றார் ஸ்ரீரங்கன்.

வெளிப்படையான லஞ்சம்

பெரும்பான்மை இல்லாத பாஜக ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவருக்கு (ஆந்திரா) ரூ.15 ஆயிரம் கோடியும், இவருக்கு (பீகார்) ரூ.37 ஆயிரம் கோடியும் கொடுப்பதாக தெரிவித் துள்ளனர். அவர்கள் ஆதரவளிக்காமல் ஓடி விடக்கூடாது என்பதற்காக வெளிப்படையாக லஞ்சம் கொடுத்துள்ளனர். வேறு என்ன சொல்வது என்றார் டயர் கடை உரிமையாளர் பூர்ணசந்திரன்.

அருள்மொழி, சேலம்

ஒன்றிய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என்பது, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலன் சார்ந்த பட்ஜெட்டாக இல்லை. கார்ப்பரேட் கம்பெனிக்காக பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. செல்வ வரி, வாரிசு வரி, கார்ப்பரேட் வரிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதற்கு மாறாக ஏழைகளை வஞ்சிக்கும் மறைமுக வரி அதிகம் உயர்ந்துள்ளது. மோடி அரசு மீண்டும் ஏழை எளிய நடுத்தர மக்களை வஞ்சித்துள்ளது.

உதயகுமார், ஆட்டோ தொழிலாளி

மோட்டார் தொழிலை நம்பி இனி வாழ்வது கடினம் தான். தேர்தலுக்குப் பின்னாவது இன்சூரன்ஸ், எப்சி, சாலை வரி, சுங்கவரிக் கட்டணங்கள், பெட்ரோல் டீசல், விலை குறையும் என எதிர்பார்த்து இருந்தோம். ஒன்றிய அரசாங்கத்தின் பட்ஜெட் அறிவிப்பில் இது சம்மந்தமாக எந்த தகவலும் இல்லை. விலைவாசி உயர்வின் காரணமாக வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளது. தங்கம், வெள்ளி, ஸ்மார்ட்போன்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் பொருளுக்கு எந்த வரியை குறைத்துள்ளார்கள்? மோடி அரசு ஏழைகளுக்கான அரசாக தெரியவில்லை. 

ஜெனிவா, வியாபாரி, உதகை.

மத்திய அரசின் பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. டீசல், பெட்ரோல் விலை குறைந்தாலே அனைத்து பொருஙகளின் விலை குறைந்து விடும். ஆனால். இந்த பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி பொருட்களுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இது ஏழை, எளிய மக்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லை. அதேபோன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கியது போன்று, தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்துள்ளது இந்த பட்ஜெட் மூலமாக தெரிகிறது. இதனால், தமிழக மக்கள் மத்திய அரசின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர்.

பிச்சையம்மாள், வழக்கறிஞர்

மத்திய அரசு என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், ஒரு சில மாநிலங்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கிவிட்டு, நீண்ட காலமாக அனைத்து நிலைகளிலும் தமிழகத்தையும், தமிழக மக்களையும் புறக்கணித்து வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கும் மற்றும் வேலைவாய்ப்பு சமுதாய முன்னேற்றம் ஆகியவற்றுக்கு ஏற்ற பட்ஜெட்டாக இல்லை.

பொதுத்துறையான எஸ்ஐசியின் பங்குகளின் ஒரு பகுதி தனியாருக்கு விற்கப்படும் - ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்