சேலம், ஜூலை 27- தமிழ்நாட்டை வஞ்சித்து, நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த ஒன்றிய அரசைக் கண்டித்து திமுகவினர் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டை வஞ்சித்து, நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாடு என்ற ஒரு வார்த்தைக்கூட அறிக்கையில் இடம்பெறவில்லை. இதனைக் கண்டித்து மாநிலம் முழுவதும் சனியன்று திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்ஒருபகுதியாக சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக மாவட்டச் செயலளார்கள் ஆர்.ராஜேந்திரன் எம்எல்ஏ, டி.எம்.செல்வகணபதி எம்.பி, சிவலிங்கம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, திமுக மாநிலங்களவைக்குழு தலைவர் திருச்சி சிவா தலைமை வகித்தார். இதில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், மதுரா செந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், பொன்னுசாமி உட்பட திரளானோர் பங்கேற்றனர். தருமபுரி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, திமுக மாவட்டச் செயலாளர்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, பி.பழனியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, நகரச் செயலாளர் நாட்டான் மாது, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தாமரைச்செல்வன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பி.என்.இன்பசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தர்மசெல்வன், மாவட்ட துணைச்செயலாளர் ரேனுகாதேவி ஆகியோர் பங்கேற்றனர்.