ஜெனீவா, டிச.4- உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது: ஓமைக்ரான் தீவிரமான வகையாக மாறுமா என்று கணிக்க இயலாது. மிகவும் பரவக்கூடியதாக உள்ளது. தென் ஆப்ரிக்காவில் தினசரி பாதிப்பு இரட்டிப்பாகிறது. நாம் தயாராகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் பீதி அடையாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த சூழ்நிலையிலிருந்து நாம் மாறுபட்டு உள்ளோம். தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. உலகளவில் 99 சதவீத நோய்த் தொற்றுக்கு டெல்டா வகை வைரஸ்காரணம். இந்த உருமாறிய வைரசும் அதிகம் பரவக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால், தற்போது கணிக்க முடியாது. நாம் காத்திருக்க வேண்டும். ஒமைக்ரானால் பெரும் பாதிப்பு இருக்காது. மிகச்சாதாரணமானது என நம்புவோம் என்றார்.