districts

img

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் மீது போக்சோவில் வழக்குப் பதிவு!

கோவை வடவள்ளி தனியார் சி.பி.எஸ்.சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் நூலக கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்ட நிலையில், பள்ளி தலைமை ஆசிரியை உட்பட மூன்று பேர் மீது போக்சோவில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

கோவை வடவள்ளி ஓணாப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் சி.பி.எஸ்.சி பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகப் புகார் எழுந்தது.   இந்நிலையில் நேற்று அப்பள்ளியில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில் பள்ளியின் நூலக கண்காணிப்பாளர் பால்ராஜ் என்பவர் மூன்று பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து குழந்தைகள் நல அலுவலர் ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் புகார் அளித்தார்.  

புகார் அடிப்படையில் பால்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான  தகவலைத் தெரிவிக்காமல், பெற்றோரை மிரட்டிய பள்ளி தலைமை ஆசிரியை மகேஸ்வரி மற்றும் பள்ளி நிர்வாகி தண்டபாணி, பள்ளி நிர்வாகம் ஆகியோர் மீது ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.