districts

நாமக்கல் புத்தகத் திருவிழா இன்று துவக்கம்

நாமக்கல், ஜன.25- நாமக்கல் மாவட்டத்தில் 2 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா வெள்ளியன்று (இன்று) துவங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில், 2 ஆம் ஆண்டு புத்தக திருவிழா நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு) வெள்ளியன்று (இன்று) துவங்கி பிப்.2 ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறவுள்ளது. இப்புத்தகத் திருவிழாவானது 60க்கும் மேற்பட்ட அரங்குகள், 16 ஆளுமைகளின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், உணவுத் திருவிழா, கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் சிறப்பாக நடைபெறவுள்ளது. தினசரி காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகளும், மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 16 ஆளுமைகளின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.