கோவை, நவ.2- பொள்ளாச்சி வடசித்தூரில் இந்து, முஸ்லீம் மக்கள் இணைந்து கொண்டாடும் ‘மயிலந்தீபாவளி’ வெள்ளியன்று களை கட்டியது. கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே வடசித்தூர் கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான இந்து, முஸ்லிம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மாமன் மச்சான் உறவு முறை அழைத்தே பழகி வருகின்றனர். இங்குள்ள மக்கள் தீபாவளி பண்டிகைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தீபாவளிக்கு அடுத்த நாள் மயிலந்தீபாவளியை கொண்டாடுவர். அனைத்து மதத்தினரும் இனைந்து வெளியூரில் வசிக்கும் உறவினர்கள், நண்பர்களளை வீட்டிற்கு வரவழைத்து சாதி, மத பேதமின்றி உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கறிவிருந்து அளித்து மயிலந்தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். ஆண்டுதோரும் நடைபெறும் இந்த மயிலந்தீபாவளி வழக்கம் போல இந்த ஆண்டும் வடசித்தூர் ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இந்த மயிலந்தீபாவளியை முன்னிட்டு பல்வேறு ராட்டினங்கள், உணவகங்கள், பேன்சி பொருட்கள் கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், விளையாட்டு திடலில் திரண்டிருந்த ஏராளமான இந்து, முஸ்லீம் பொதுமக்கள், ஒருவருக்கொருவர் கை குலுக்கியும் கட்டித்தழுவியும் மயிலந்தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். மேலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வண்ண நிற பட்டாசுகள் வெடித்து மயிலந்தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இவ்விழாவில் கோவை, பல்லடம், திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.