சாலையை கடக்க முயன்ற யானை கூட்டத்தை விரட்டிக் கொண்டு செல்லும் வகையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநரால் பரபரப்பு.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து பில்லூர் அணை செல்லும் வழியில் கெத்தை சாலை உள்ளது. இங்கு அவ்வப்போது யானைகள், மான்கள், காட்டெருதுகள் உள்ளிட்ட விலங்குகள் எதிர்ப்படுவதும் வழக்கம் என்பதால் இவ்வழியே பயணிக்கும் வாகனங்கள் மிதமான வேகத்திலும், விலங்கினங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும் வாகனங்கள் இயக்கப்பட வேண்டும் எனவும், யானைகளை கண்டால் அவை கடந்து செல்லும் வரை வாகனத்தை நிறுத்திப் பாதுகாப்பாக கடந்து செல்ல வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், நேற்று மஞ்சூர் நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர், சாலையில் காட்டு யானைகள் நிற்பதைக் கண்டும், பேருந்தை நிறுத்தாமல் யானைகளை நோக்கி அதனை அச்சுறுத்தி விரட்டும் வகையில் பேருந்தை ஓட்டினார். மேலும், பயணிகளோடு யானைகளை ஒட்டியபடி ஆபத்தான வகையில் யானைகளை கடந்து சென்றுள்ளார். இது போன்ற செயல்கள் மிகவும் ஆபத்தானவை என வன உயிரின ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.