வனம் வாழட்டும்..
காடுகள் காணாமல் போக,
உணவு தேடி ஊருக்குள்
விலங்கினங்கள்…
எதைத் தேடி காடுகளில்
மனிதனின் காலடிகள்..?
காரிருள் கானகத்தில்
மின்னொளி ஜாலங்கள்,
மிரட்சியில், மகரந்த
சேர்க்கையை மறந்த மலர்கள்.
வானவூர்தியின் பேரிரைச்சலில்
வாலை சுருட்டி பதுங்கும்
வீரம் செறிந்த வேங்கை இனங்கள்..
வாகனங்களின் அணிவகுப்பில்
சிதறி ஓடி வாழ்வை
இழக்கும் சிற்றுயிர்கள்..
வழிமாறா யானைக் கூட்டத்திற்கோ,
மின்வேலி மரணங்கள்..
லட்சங்களில் கூடி
சத்தமிட்டால் வனம் தூங்குமா?
வன உயிரினங்கள்
நாட்டுக்குள் புகுந்தால் நாடு தாங்குமா?
வன அமைதியை குலைத்து
மன அமைதியை நாடுவது, தியானமா?
ஆரண்யம் அழித்து, ஆன்மீகம் வளர்க்க
ஆண்டவன் சொன்னானா?
ஆயிரமாயிரம் கேள்விகளுடன்
ஆதி சிவன் முன்னால்
வன உயிரினங்களும்...நானும்:
-சேரன் செல்வராஜ்
(முன்னாள் விமானப்படை வீரர்)