districts

உதகை அணையில் மூழ்கி பொறியாளர் பலி

உதகை, நவ.19- உதகை அணையில் மூழ்கி பொறியாளர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், எலந்தகுட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடசாமி என்பவரின் மகன் ராம்குமார் (28). இவர் கோவையிலுள்ள மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக கடந்த சில மாதங்களாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த அத்திகல் பகுதியில் இவருடைய நண்பரின் திருமணம் நடைபெற ஞாயிறன்று திட்டமிடப்பட்டது. இதற்காக ராம்குமார் தனது நண்பர்கள் சுமார் 10 பேருடன் உதகைக்கு வந்தார். திருமணத்திற்கு அத்திகல் செல்லும் முன்னர் உதகை - கூடலூர் சாலையில் பைன்பாரஸ்ட் பகுதியில் உள்ள காமராஜர் அணையின் பின்பக்கம் தண்ணீர், சேறும் தேங்கியுள்ள இடத்தில், நண்பர்களுடன் சுற்றிப் பார்க்க சென்றார். அப்போது திடீரென்று தண்ணீரில் குதித்த ராம்குமார் நீந்தி சென்று குளித்து மகிழ்ந்தார். ஒரு கட்டத்தில் கரைக்கு திரும்பலாம் என்று நினைத்தபோது அவரால் வர முடியவில்லை. அவர் தண்ணீரில் தத்தளித்தவாறு சத்தம் போட்டபோது, அவர்களுடைய நண்பர்களுக்கு நீச்சல் தெரியாததால், அவர்களாலும் காப்பாற்ற முடியவில்லை. இதனால் சுமார் 50 அடி ஆழம் உள்ள இடத்தில் ராம்குமார், தனது நண்பர்களின் கண்முன் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதுமந்து காவல் உதவி ஆய்வாளர் குத்தாலிங்கம், நீலகிரி மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் அரிபரந்தாமன், நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து அணையில் மூழ்கி இறந்த ராம்குமாரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதன்பின் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.