districts

img

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பில்லூர் அணை நிரம்பியது

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால்  பில்லூர் அணை நிரம்பியது.அணையில் இருந்து அதன்  உபரி நீர் பவானியாற்றில் வெளியேற்றப்படுவதால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது..

இதன் காரணமாக அணையின் நீர் மட்டம் கிடு கிடுவென உயர துவங்கி இன்று 27 ஆம் தேதி அதிகாலை அணையின் மொத்த நீர்தேக்க உயரமான 100 அடியில் இதன் நீர்மட்டம் 97அடியை கடந்ததுள்ளது.. தற்போது அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்து உள்ளதால் இது அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.

அணையின் நீர் மட்டம் 97  எட்டும் போது அணையின் பாதுகாப்பு கருதி அதன் நான்கு மதகுகளும் திறக்கப்பட்டு உபரி நீர் பவானியாற்றில் வெளியேற்றப்படுவது வழக்கம்..இதனால் பவானி ஆற்றின் வேகமும் அதிகரித்துள்ளது.

அணை முழுமையாக நிரம்பி அதன் நீர்வரத்து அப்படியே  உபரி நீராக பவானியாற்றில் திறந்துவிடப்படுவதால் பவானியாற்று கரையோர பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதில் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல்கள் மூலம் ஆற்றை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.