districts

திருப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்

திருப்பூர், டிச.1- திருப்பூர் ஒன்றியம் மங்கலம் அருகே சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த 12 வயது பள்ளிச் சிறுவன் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு செவ்வாயன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது தவிர திருப்பூர் வட்டாரத்தில் ஏழு பேர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பூர் மங்கலத்தை அடுத்துள்ள சுல்தான்பேட்டை, வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுவனுக்கு நவம்பர் 10 ஆம் தேதி டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்து செவ்வாயன்று சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் சுகாதாரப்பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார், மாவட்ட மலேரியா அலுவலர் சேகர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்பகுதி முழுதும் துாய்மை பணி மேற்கொண்டு, கொசுமருந்து தெளிக்கப்பட்டது.

திருப்பூர் மாநகரில் மழை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்திக்கு வழி வகுக்கிறது. இந்நிலையில் டெங்கு உள்பட பல்வேறு விதமான காய்ச்சலின் தாக்கம் மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது.  திருப்பூர் மாநகரில் தொடர்ச்சியாக டெங்கு பாதிப்பு இருந்து வரும் நிலையில், திருப்பூர் திருமுருகன்பூண்டி பெரியாயிபாளையத்தை சேர்ந்த 22 வயது ஆண், உடுமலை காந்திநகர் வி.கே.பி. நகரை சேர்ந்த 7 வயது சிறுவன், திருப்பூர் அவிநாசி சாலை அம்மாபாளையத்தை சேர்ந்த 2வயது சிறுவன், திருப்பூர் காங்கயம் சாலை பாளையக்காட்டை சேர்ந்த 42 வயது ஆண், உடுமலை முக்கோணம் புளியங்காட்டை சேர்ந்த 4 வயது சிறுவன், திருப்பூர் காந்தி நகர் ஈபி நகரை சேர்ந்த 4 வயது சிறுமி, திருப்பூர் முதலிபாளையத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் உட்பட 7 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

;