திருப்பூர், ஜூலை 27 - திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் பொத்தியம்பாளையம் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பயனாளிகளுடன் கலந்துரையாடினார். திருப்பூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் ஜூலை 16 முதல் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை 76 இடங்களில் முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதுவரை 23 முகாம்கள் நடத்தப்பட்டு, 17,400 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சனியன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக, திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் பொத்தியபாளையம், வீரணம்பாளையம் மற்றும் பாப்பினி ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் கலந்துரையாடினார். இதில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை பார்வையிட்டு பல்வேறு துறைகளில் சார்பில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகள் மனுக்கள் குறித்து கேட்டறிந்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், காங்கேயம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் மகேஷ் குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.