districts

img

கோயில் நிலங்களில் குடியிருப்போரின் வாடகையை தள்ளுபடி செய்ய கோரிக்கை

காஞ்சிபுரம், மே 29- தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட பேரவை கூட்டம் ஞாயிறன்று (மே.29) காஞ்சிபுரம் நகரில் நடைபெற்றது. கொரோனா தொற்று காலம் வரை முழுமையான வாடகை தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு பி.கே.வேணுகோபால் தலைமை தாங்கினார். கோயில் மனையின் குடிப்போர் சங்க தலைவர் இ.முத்துக்குமார், விவசாய சங்க மாவட்ட செயலாளர் கே.நேரு, சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர்கள் வி.செல்வம், எம்.நடராஜன், காஞ்சிபுரம் கோவில் மனை குடியிருப்போர் நலச் சங்க செயலாளர்  டி. ஸ்ரீதர், விவசாய சங்க மாவட்டத் தலைவர் எல்.முருகேசன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் எல்.முருகேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

தீர்மானங்கள்
அறநிலையத்துறை சட்டம் 34-ன் படி கோவில் மனையில் குடியிருக்கும் ஏழை குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். கோயில் நிலத்தில் குடியிருக்கும் வீடுகளுக்கு அடிமனை வாடகை பல மடங்கு உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும். தலைமை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட நிர்ணயிக்கும் புதியகுழு வாடகை நிர்ணயிக்கும் வரை அறநிலைத்துறை சட்டபிரிவு 78, 79-ஐ பயன்படுத்தி வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பி பூட்டி, சீல் வைப்பதை நிறுத்த வேண்டும். கோயில் இடங்களில் குடியிருக்கும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்
21பேர் கொண்ட புதிய மாவட்டக்குழுவிற்கு சிறப்பு தலை வராக இ.முத்துக்குமார், மாவட்டத் தலைவராக பி.கே.வேணுகோபால், மாவட்டச் செயலாளராக டி.லிங்கநாதன், பொருளாளராக ஜி.லட்சுமிபதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.