கடலூர், ஏப். 13- கோடை மழையால் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் எள் பயிர் சேதம் அடைந்துள்ளதற்கு நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கோ.மாதவன் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு வரதராசன்பேட்டை, குருவப்பன் பேட்டை, மேல புதுப்பேட்டை, பொட்டவெளி போன்ற கிராமங்களில் சம்பா அறுவடை முடிந்த வயல்களிலும், மணிலா பிடுங்கிய புஞ்சை வயல்களிலும் விவசாயிகள் எள் பயிர் செய்து வருகின்றனர். குறைந்த நாட்களில் அதிக மகசூல் எடுத்து லாபம் ஈட்டும் எள் செடிகள் பூக்கும் தருனத்திலும், காய் பிடிக்கும் தருணத்திலும் கடந்த 2 நாட்களாக பெய்த கோடை மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி எள் செடிகள் அழுகி விடுகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து வருகின்றனர். இதேபோல் சென்ற வருடம் மழை பெய்து எள் வயல்கள் நாசமாகின. வேளாண் துறையினர் பார்வையிட்டுச் சென்றதோடு சரி, பிறகு அப்போதைய அரசும் கண்டுகொள்ளவில்லை. அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. இந்த வருடமும் ஏப்ரல் 9, 10 ஆகிய தேதிகளில் இரவு பெய்த கனமழையால் சுமார் 600 ஏக்கர் எள் வயல்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. தண்ணீர் வடிந்து வெயில் அடிக்கும் போது எள் செடிகள் முற்றிலுமாக அழிந்துவிடும். எனவே வேளாண் துறையினர் உடன் வயல்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.