உடுமலை, ஜூலை 25- உடுமலை ஒன்றியம் மான் பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி தொழிலாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையீட்டின் அடிப்படையில் வேலை வழங்க உத்தரவாதம் செய்யப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியம் சார்பில் மான்பட்டியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் மாற்றுத் திறனாளி தொழிலாளிகளுக்கு தொடர்ச்சியாக பணி வழங்க வேண்டும், வேலை இல்லை என்று திருப்பி அனுப்பக் கூடாது, அலைய விடக்கூடாது என வலியுறுத்தி உடுமலை வட்டார வளர்ச்சிஅலுவலர் சுப்ரமணியத்தை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட மான்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் பேசப்பட்டது. தொடர்ந்து வேலை வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ், கமிட்டி உறுப்பினர் எஸ்.ஜெகதீசன், 9/6 செக் போஸ்ட் கிளைச் செயலாளர் முத்துக்குமார், மான்பட்டி பிரகாஷ் உட்பட மாற்றுத் திறனாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.