court

img

சிறப்பு டிஜிபி மீதான வழக்கை 6 வாரத்திற்குள் முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திடுக.... சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.....

சென்னை:
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறப்பு டிஜிபி  ராஜேஷ்தாஸ் மீதான வழக்கு விசாரணையை ஆறு வாரத்திற்குள் முடித்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் சிபிசிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டம்- ஒழுங்கு சிறப்பு டிஜிபி  ராஜேஷ்தாஸ், பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண்எஸ்.பி. ஒருவர் தமிழக டிஜிபி திரிபாதியிடம் புகார் அளித்தார். சிறப்பு டிஜிபியின் செயலுக்கு அரசியல் கட்சியினர் ,பெண்கள் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். உடனடியாக சஸ்பெண்ட் செய்து, உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி,மாணவர்,வாலிபர்,பெண்கள் அமைப்பினர் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டமும் நடைபெற்றது.  இதன்பின்னரே சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு,  அவர்மீது சிபிசிஐடியினர் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறார். ஏற்கெனவே, இந்த வழக்கு ஆவணங்களை மூடி முத்திரையிட்ட உரையில் காவல்துறை தாக்கல் செய்திருந்தது.இந்த வழக்கை உயர் நீதிமன்றம் நேரடியாககண்காணிக்கும் என்றும், விசாரணையின் முன்னேற்றம்குறித்து, குறிப்பிட்ட கால இடைவெளியில்சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 30 அன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, அரசுதலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, 106 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும், இன்னும் 30 சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது என்றும்  தெரிவித்தார். அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோமையாஜி,ஏற்கெனவே விசாகா கமிட்டி அறிக்கை அரசிடம்சமர்ப்பிக்கப்பட்டு, முடிவுக்காக காத்திருப்பதாக குறிப்பிட்டார்.இதையடுத்து, இன்னும் விசாரணையை முடிக்க எத்தனை நாட்கள் தேவைப்படுகிறது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது, விசாரணை அதிகாரி சார்பில், 4 முதல் 8 வாரங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி கூறுகையில், சிறப்பு டிஜிபி மீதான வழக்கை 6 வாரத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரசிடம் அனுமதி பெற்று சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை ஜூன் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

;