புதுதில்லி, மார்ச் 21 - “மூடி முத்திரையிடப்பட்ட உறைகளில் தாக்கல் செய்யப்படும் பதில்கள், நீதிக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது; எனவே, அனைத்தையும், மூடி முத்திரையிட்ட உறைகளில் தாக்கல் செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ஒன்றிய அரசைக் கண்டித்துள்ளார். ‘ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்’ (OROP) தொடர்பாக இந்திய முன்னாள் ராணுவத்தினர் இயக்கம் (IESM) தொடர்ந்த வழக்கு திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான பாதுகாப்பு அமைச்சகத்தின் முடிவை, ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது, மூடி முத்திரையிடப்பட்ட உறையிலான கடிதத்தை ஏற்க மறுத்துவிட்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி அதனை நீதிமன்றத்தில் படித்துக் காட்டவேண்டும் அல்லது அதனை திரும்பப் பெறவேண்டும்” என்று அவர் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
“நாங்கள் எந்த ரகசிய ஆவணங்களையும், மூடி முத்திரையிடப்பட்ட உறைகளையும் ஏற்க மாட்டோம், இதுபோன்ற நடவடிக்கையை நாங்கள் வெறுக்கிறோம். நீதிமன்றத்தில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். உத்தரவுகளை அமல்படுத்துவதில் இங்கு என்ன ரகசியம் இருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “மூடி முத்திரையிடப்பட்ட உறையை சமர்ப்பிக்கும் வேலைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம்” என அவர் உறுதிபடக் கூறிவிட்டார். “உச்ச நீதிமன்றம் இதைப் பின்பற்றினால், உயர் நீதிமன்றங்களும் இதைப் பின்பற்றும்” என்று அட்டர்னி ஜெனரலிடம் கூறிய சந்திரசூட், “மூடி முத்திரையிடப்பட்ட உறைகள், நீதிக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது” என்று தெரிவித்தார்.
2019-ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்குவது தொடர்பான இந்த விசாரணையில், இவர்களுக்கான நிலுவைத் தொகையை மார்ச் மாதம் வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் ஓய்வூதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்குவது அரசுக்கு சாத்தியமில்லை என்ற நிலையில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் அதனை வரும் 2024 பிப்ரவரி 28 முடிய பல்வேறு பிரிவுகளாக தவணை முறையில் வழங்க முடிவெடுத்திருந்தது. நிலுவைத் தொகையை மார்ச் மாதம் வழங்குவது சாத்தியமில்லை என்பதை நீதிமன்றம் உணர்ந்த போதும், நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக பாதுகாப்பு அமைச்சகம் தன்னிச்சையாக முடிவெடுத்தது குறித்து கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் இதுகுறித்து நீதிமன்றத்தின் ஆலோசனையை பெற தவறியது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையிலேயே, ஒன்றிய அரசின் பதில்களை மூடி முத்திரையிட்ட உறையில் அல்லாமல், வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கண்டித்துள்ளார். அண்மையில், அதானி விவகாரத்தில் ‘செபி’ அமைப்பை சீரமைப்பது தொடர்பான ஆலோசனைகளையும் ஒன்றிய அரசு மூடி முத்திரையிட்ட உறையிலேயே தாக்கல் செய்தது. அப்போதும் உச்ச நீதிமன்றம் அதனை ஏற்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.