court

img

ஜூலை 31-க்குள் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும்... மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு....

புதுதில்லி:
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை ஜூலை 31 ஆம்தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலக் கல்வி வாரியங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவலால் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. அதையடுத்து சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வு முடிவை எந்த முறையில்நிர்ணயிக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டது. பொதுத்தேர்வு ரத்து செய்யப் பட்டதை எதிர்த்தும் மதிப்பெண் கணக்கீட்டு முறையை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறியும் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போது வரை 21 மாநிலங்கள் பிளஸ்- 2 பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளன. 6 மாநிலங்கள் தேர்வை நடத்தி முடித்துள்ளன. 

இந்நிலையில் பொதுத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஜூன் 24 அன்று நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் தினேஷ் மகேஸ்வரி அமர்வில் விசாரணைக்கு வந்தன.அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘’சிபிஎஸ்இ, ஐசிஎஸ்சி வாரியங்கள் இரண்டு வார இடைவெளியில் மதிப்பெண் கணக்கீட்டு முறையைச் சமர்ப்பித்ததுபோல, பிற மாநிலக் கல்வி வாரியங்களும் மதிப்பீட்டுமுறையை விரைவில் இறுதி செய்ய வேண்டும். இன்றில் இருந்து 10 நாட்களுக்கு உள்ளாக உச்சநீதிமன்றத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல அக மதிப்பீட்டு முறையை இறுதி செய்து, ஜூலை 31-ம் தேதிக்குள் 12 ஆம்வகுப்புத் தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

ஆந்திரப்பிரதேசத்திற்கு எச்சரிக்கை
மேலும் பிற மாநிலங்கள் பிளஸ் -2 தேர்வை ரத்துசெய்த நிலையில், ஆந்திரப் பிரதேச அரசு தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்று கேட்பது ஏன்? பெருந்தொற்றுச் சூழல் அனைத்தும் முறையாக ஆய்வு செய்யப் பட்டதா?என்பது குறித்த அறிக்கையை ஆந்திர அரசு தாக்கல் செய்ய வேண்டும்.தேர்வை நடத்தி அதனால் ஒரு மரணம் ஏற்பட்டால்கூட அதற்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க உத்தரவிடுவோம்’’ என்று நீதிபதிகள் எச்சரித்தனர். இதுதொடர்பான விசாரணை ஜூன் 25 மதியம் 2 மணிக்கு மீண்டும் நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

;