court

img

ரதயாத்திரையை அனுமதித்தால் சட்டம்-ஒழுங்கு, மதப்பிரச்சனைகள் ஏற்படும்... மதுரை காவல் ஆணையர் மேல்முறையீடு....

மதுரை:
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு நிதி சேகரிக்க மதுரையில் ரத யாத்திரை நடத்த அனுமதித்தால் சட்டம்-ஒழுங்கு, மதப்பிரச்சனைகள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே தனி நீதிபதி அளித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென மதுரை மாநகர் காவல் ஆணையர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல் முறையீடு செய்துள்ளார்.மதுரை மாநகர காவல் ஆணையர்  தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், “மதுரையில் 100 வார்டுகளிலும் ரத யாத்திரையை நடத்த அனுமதி வழங்கி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டம்-ஒழுங்கைப் பாதிக்கும் வகையிலும், மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலான பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், கட்சி மற்றும் கட்சி சாராத நிறுவனங்களின் பொது நிகழ்வுகள் போன்றவற்றுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் சூழலில் இதுபோன்ற யாத்திரைக்கு அனுமதி வழங்குவது மிகப் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.  “ட்ரஸ்ட்” தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்காததன் மூலம், அவர்கள் சட்டத்தை மதிக்காதது தெரிய வருகிறது.  பிப்ரவரி 19-ஆம் தேதி மதுரை கரிமேடு பகுதியில் கூடி சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில், சட்டவிரோத ரத யாத்திரையை மேற்கொண்டதன் காரணமாக அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சட்டம்-ஒழுங்கு மற்றும் மதக்கலவர பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டும் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலையைக் கருத்தில் கொண்டும் மதுரையில் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கு நீதிபதிகள்  எம்.எம்.சுந்தரேஷ். ஆனந்தி அமர்வு முன்பாக செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில்,” கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அந்த அமைப்பு சார்பில் உரிய பதிலளிக்க வில்லை. ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கினால், சட்டம்- ஒழுங்கு, மதப் பிரச்சனை ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆகவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என வாதிடப்பட்டது.இதையேற்ற நீதிபதிகள், குறிப்பிட்ட நேரத்தில்  காவல்துறையினர் அனுமதி அளிக்கும் வழித்தடத்தில் மட்டும், அனுமதிக்க இயலுமா? என்பது குறித்து தகவல் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.