அயோத்தி- ராம ஜென்ம பூமி தீர்ப்பிற்குப் பின் ஸ்டார் ஹோட்டலுக்கு சென்ற விருந்து அருந்தி ஒயின் சாப்பிட்டதாக முன்னாள் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பல்வேறு சர்ச்சைகளுக்குப் பெயர் போன முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், ஓய்விற்குப் பின்னர் பாஜக அரசால் ரஜ்யசாப உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் ரஞ்சன் கோகோய் ''நீதிபதிக்கான நீதி - ஒரு சுயசரிதை '' என்ற பெயரில் புத்தகத்தை எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்தில் தான் நீதிபதியாக இருந்த காலத்தில் எவ்வாறு நடந்து கொண்டேன் என்பது குறித்து எழுதியிருக்கிறார். அதில் பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
ராமஜெம்ம பூமி தீர்ப்பும் - விருந்தும்
அதில் இடம் பெற்றிருப்பவற்றில் சில தீர்ப்பும் - : 2019 நவம்பர் அன்று ராம் ஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கில் ஒருமனதாகத் தீர்ப்பை வழங்கிய பிறகு, தனது ( ரஞ்சன் கோகோய் ) தலைமையிலான அமர்வில் அங்கம் வகித்த சக நீதிபதிகளை ஹோட்டல் தாஜ் மான்சிங்கிற்கு அழைத்துச் சென்று அங்கு இரவு விருந்து அருந்தியதாகவும், அப்போது இருந்த விலை உயர்ந்த சிறந்த ஒயினை அருந்தியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அந்த அமர்வில் பின்னர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதிகள் டி.ஓய்.சந்திரசூட், அசோக் பூஷன் மற்றும் எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் இருந்தனர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக தீர்ப்பை வழங்கிய பின்னர் நீதிமன்ற எண் 1க்கு வெளியே உள்ள நீதிபதிகள் கேலரியில் அசோக சக்கரத்திற்குக் கீழ் நின்று கூட்டாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
நீதிபதி குரேஷி விவகாரம்
மேலும் மே 10, 2019 அன்று, நீதிபதி குரேஷியை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்தது. ஆனால் மத்திய அரசும் சட்ட அமைச்சரும் நீதிபதியின் பரிந்துரைக்கு ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தனர். அதற்கு அவர்கள் கூறிய காரணம் நீதிபதி குரேஷி இயற்றிய சில நீதித்துறை உத்தரவுகளிலிருந்து வரும் எதிர்மறையான கருத்தை அடிப்படையாகக் கொண்டது என அந்த ஆட்சேபனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உடனே கோலிஜியமும் அகில் குரேஷியை நியமிக்கும் பரிந்துரையை வாபஸ் பெற முடிவு செய்தோம். மத்தியப் பிரதேசத்திற்குப் பதிலாகத் திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த சமரசம் அரசியலமைப்பு அமைப்புகளுக்கு இடையிலான மோதலை தவிர்ப்பதற்காகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதற்கடுத்து தற்செயலாக, நீதிபதி குரேஷி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திரிபுராவிலிருந்து ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். உச்சநீதிமன்ற நீதிபதியாக அவர் பதவி உயர்வு பெற்ற விவகாரம், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொலிஜியத்தின் நடத்தையைக் கிட்டத்தட்ட முடக்கியது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதே போல் நீதிபதிகள் பிரதீப் நந்த்ராஜோக் மற்றும் ராஜேந்திர மேனன் ஆகிய இரு உயர் நீதிமன்ற நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பரிந்துரைக்க கொலிஜியம் கொள்கை அடிப்படையில் முடிவு செய்ததாகவும் ஆனால் விவாதங்கள் பொதுமக்களுக்குக் கசிந்ததால் அவை தொடரவில்லை என்றும் நீதிபதி கோகோய் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
பத்திரிகையாளர் சந்திப்பு
நீதிபதிகள் கோகோய், செல்லமேஸ்வர், மதன் லோகூர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோரின் 2018 செய்தியாளர் சந்திப்பு பற்றி, இது சரியான விஷயம் என்று தான் நம்பினாலும், நான் ஒரு முழு பத்திரிகையாளர் சந்திப்பை “எதிர்பார்க்கவில்லை” ஒரு சில பத்திரிக்கையாளர்களுடனான சந்திப்பு என்று தான் நினைத்தேன் என கோகோய் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
2018 ஜனவரி 12 அன்று மதியம் 12 மணியளவில், நீதிபதி செல்லமேஸ்வர் இல்லத்திற்குச் சென்றேன். அங்கு நான் பார்த்தது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது: பத்திரிகையாளர்கள் முழு வருகையுடன் இருந்தனர், சந்திப்பு நடைபெறும் இடமான அவரது வீட்டின் பின்புற புல்வெளியில் பல கேமராக்கள் அமைக்கப்பட்டன. வெளியே பல நேரடி ஒளிபரப்பு செய்யும் வேன்கள் இருந்தன. நான் இதை எதிர்பார்க்கவில்லை; நீதியரசர் செல்லமேஸ்வரின் ‘பத்திரிகையாளர்களைச் சந்திப்போம்’ என்பதை நான் புரிந்துகொண்டது ஒரு சில/குறைவான பத்திரிக்கையாளர்களுடனான சந்திப்பு என்று தான் நினைத்தேன். ஆனால் எப்படியிருந்தாலும், இப்போது வெளியேற வழி இல்லை. இது நான் பின்வாங்க விரும்பினேன் என்பதல்ல; நான் செய்தியாளர்களிடம் பேசுவதற்கு உறுதியளித்தேன், இன்று வரை, சூழ்நிலைகளின் அடிப்படையில், இது மிகவும் அசாதாரணமானது என்றாலும், அது சரியானது என்று நான் நம்புகிறேன், ”என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பாலியல் புகார்
மேலும் உச்சநீதிமன்ற ஊழியர் ஒருவர் தனக்கு ( ரஞ்சன்கோகோய்க்கு ) எதிராகச் சுமத்திய பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். அதில் குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்தபோது, நீதிபதி கோகோய் ஒரு சனிக்கிழமை (ஏப்ரல் 20, 2019) உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வைக் கூட்டி, அமர்வுக்குத் தலைமை வகித்தார். எவ்வாறாயினும், அவர் அமர்வில் இருந்தபோதிலும், “மறு: நீதித்துறையின் சுதந்திரத்தைத் தொடும் பெரும் பொது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம்” என்ற தலைப்பில் உள்ள உத்தரவில் கையெழுத்திட மறுத்துவிட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் புத்தக வெளியிட்டு விழாவில் பேசும் போது, “பின்னோக்கிப் பார்த்தால், நான் அமர்வில் நீதிபதியாக இருந்திருக்கக் கூடாது. நான் அதில் தவறு செய்திருக்கிறேன். நான் அமர்வில் இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கலாம். நாம் அனைவரும் தவறு செய்கிறோம். அதை ஏற்றுக்கொள்வதில் எந்தத் தீங்கும் இல்லை, ” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ராஜ்ய சபா எம்பி பதவி
அதே போல் ஒன்றிய அரசால் தனக்கு ராஜ்ய சபா சீட் கொடுக்கப்பட்டபோது, ராம ஜென்ம பூமி வழக்குகள் மற்றும் ரஃபேல் விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்குச் சாதகமாக வழங்கப்பட்டது என்று பகிரங்கமாக வெளிவரும் என எனக்குத் தோன்றியிருந்தால் வேட்பு மனுவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு யோசித்திருப்பேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார். புத்தகம் முழுவதும் ரஞ்சன்கோகோய் செய்து கொண்ட சமரசத்திற்கு வித்தியாசமாக நியாயம் கற்பிக்க முற்படுவதோடு, இருக்கும் நிலையையும் தக்க வைக்கும் விதத்தில் பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த புத்தகம் நீதித்துறை மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.