மதுரையில் பருத்தி நூல் வணிகர்கள் மற்றும் சாயப் பட்டறை உரிமையாளர்களால் நிறுவப்பட்ட சில சினிமா நிறுவனங்கள் தமிழ் திரைப்படத்தின் துவக்ககால பத்தாண்டுகளில் செயல்பட்டு வந்தன. ராயல் டாக்கி எனும் பட விநியோக நிறுவனம்போலவே முருகன் டாக்கி ஃபிலிம் கம்பெனி என்பது அவற்றில் ஒன்று. தமிழ் திரைப்படவுலகின் தொடக்க காலத்தில் அதன் வளர்ச்சிக்கு மிகச்சிறந்த பங்களிப்புகளைச் செய்தன அந்த இரண்டு நிறுவனங்களும். மற்ற நிறுவனங் களைப்போலவே தொடங்குகிறபோது பட விநியோகப் பணிகளை மேற்கொண்டு, பின்னர் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டன அவை. முருகன் டாக்கி ஃபிலிம் கம்பெனி பாடல்களால் இன்றும் பேசப்படுகிற திரைப் படமான அசோக் குமார் (1941) திரைப் படத்தைத் தயாரித்தது. அதில் எம். கே.டி. பாகவதரும் பி. கண்ணாம்பாவும் நடித்திருந்தார்கள். ரத்னகுமார் (1949) திரைப்படம் முருகன் டாக்கி ஃபிலிம் கம்பெனியின் தயாரிப்பில் வெளிவந்த மற்றொரு படம். அந்நாளைய வெற்றிகரமான நாயகன், பாடகன் பி.யூ.சின்னப்பா நாயகனாக நடித்தபடம். அவருக்கு இணையாக பி. பானுமதி நடித்தார். அவர் நடித்து, பி.என்.ரெட்டியின் தயாரிப்பில் வெளிவந்த சொர்க்கசீமா (1945) மிகப்பெரிய வெற்றிப்படமாக அவருக்குப் புகழைப் பெற்றுத்தந்திருந்தது. பானுமதி முற்றிலும் மாறுபட்ட நடிப்புக் கலைஞர். தனக்கு உடன்பாடில்லாதவற்றோடு சமரசமோ சமாதானமோ பானுமதியிடம் இருந்ததில்லை. தயாரிப்பாளர், இயக்குநர், நாயகநடிகர் என்று எவரிடத்திலும் தன் விருப்பத்திற்கு மாறான விசயங்களில் மோதவும் தயங்காதவராக பானுமதி ஆரம்பம் முதலே அறியப்பட்டிருந்தார்.
அப்படித்தான் ரத்னகுமார் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. பி.யூ. சின்னப்பா அந்தநாளின் மெகா நடிகர். பன்முகத் திறமைகள் கொண்டிருந்தவர் அவர். ஒரு நாள் சின்னப்பாவிடமிருந்து மது வாசம் வந்துவிட்டது. அன்று அவர் மது அருந்தி விட்டு நடிக்க வந்திருக்கிறார் என்பதை அவருடன் நெருங்கி நடித்த பானுமதி அறிந்து கொண்டார். உடனே பிரச்சனையாகிவிட்டது. பானுமதியை சமாதானம் செய்ய முயன்றார்கள். ஆனால், அவரோ அந்தப் படத்திலிருந்து விலகிக்கொள்வதாகச் சொல்லிவிட்டு செட்டை விட்டு வெளியேறிவிட்டார். பானுமதியின் இயல்பு இதுவாக இருந்தபோதிலும் அவரிடம் அபரிமிதமான திறமைகள் இருந்ததை உணர்ந்த சின்னப்பாதான் பானுமதிக்காக இறங்கிவர வேண்டியதாகியது. சின்னப்பாதான் தன் தவற்றை உணரவேண்டியதானது. இது போன்ற காரணங்களால் படம் உருவாகி வெளிவர மிகவும் தாமதமானது. ஆமாம், 1946 ல் தொடங்கிய படப்பிடிப்புப் பணிகள் ஆமை வேகத்தில் சென்று, எல்லாம் முடிந்து படம் வெளிவர மூன்று ஆண்டுகளை எடுத்துக்கொண்டது.
பிச்சைக்காரனும் அரசனாகலாம், அரசனுக்கும் பிச்சையெடுக்கும் நிலை வரலாம் என்று உணர்த்தும்படியானதுதான் படத்தின் கதை. வீதிகளில் பாடிப் பிச்சை யெடுப்பவன் ரத்னகுமார் (பி.யூ. சின்னப்பா). ஒருநாள் இரவில் அவன் ஒரு பிச்சைக் காரியை (பானுமதியை) சந்திக்கிறான். இரு வரும் சேர்ந்து பாடிப் பிச்சை யெடுக்கிறார்கள். காதல்வயப்பட்டு திருமண மும் செய்துகொள்கிறார்கள். இந்தச் சூழலில் அரசன் தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறான். அங்கே அந்த ஜோடி ஒரு கலை நிகழ்ச்சியை நடத்து கிறார்கள். ரத்னகுமாருக்கு அந்த இளவரசி மீது காதல் ஏற்படுகிறது. உடனே தனது மனைவியை மறந்துபோகிறான். இப்படிப் போகிற கதையில் இன்னல்கள் பல வற்றையும் கடந்து இறுதியில் கணவனும் மனைவியும் இணைகிறார்கள். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் மதுரமும் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்தார்கள். அவர்களோடு துரை ராஜ் இணைந்துகொண்டார். எம்.ஜி.ஆர். இந்தப் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார். அப்போது அவரது பெயர் ராமச்சந்தர் என்றே அறியப்பட்டிருக்கிறது. ஜி. ராமநாதனும் சி.ஆர். சுப்புராமனும் இசை யமைத்தார்கள். பாடல்களை பாபநாசம் சிவன் மற்றும் சுரபி இயற்றினர். நடனக் காட்சிகளை வேதாந்தம் ராகவய்யாவும் வேம்படி சத்யமும் அமைத்திருந்தார்கள். பின்னாளின் திரைமேதை ஏ.பீம்சிங் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். கிருஷ்ணன் - பஞ்சு இரட்டையர்கள் ரத்னகுமார் படத்தை இயக்கினார்கள். சின்னப்பாவும் பானுமதியும் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருந்தபோதிலும் படம் வசூலில் பெரிய வெற்றிபெறவில்லை என்பதை என்னவென்பது?