articles

img

அணையா நெருப்பு - சுடராய் வருகிறது! - கா. பிருந்தா

அணையா நெருப்பு - சுடராய் வருகிறது! - கா. பிருந்தா

மதுரை தியாகிகளின் பூமி. இதன் வீதிகளில் பறக்கும் செங்கொடி கம்பங்களை தொட்டுப் பார்த்தால் தியாகிகளின் இரத்தம் கையில் ஒட்டும். அன்னை ஜானகி, தூக்கு கயிற்றை முத்தமிட்ட பாலு, காவல்துறையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான மாரி, மணவாளன், குட்டி ஜெயபிரகாஷ், வில்லாபுரம் லீலாவதி, மாணவ தியாகிகள் சோமசுந்தரம், செம்புலிங்கம், தலைமறைவில் மாண்ட பொதும்பு பொன்னையா என தியாகிகளின் பட்டியல் மதுரையில் நீளும். அமெரிக்கன் கல்லூரியில் மாணவர் சங்கம் தொடங்கி மாணவர்களை விடுதலைப் போரில் ஈடுபடுத்திய தோழர் சங்கரய்யா போன்றோர் அரசியல் களம் கண்டதும் மதுரைதான்.

இப்பெருமைமிகு மண்ணில் மக்கள் போராட்டங்களில் சமரசமின்றி களமாடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு நடைபெறுவது பெரும் எழுச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. சோமு - செம்பு தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் 1981 மார்ச் 31 அன்று அந்தி மறைய மறுத்தது. கல்லூரி விடுதி முழுவதும் பரபரப்பாய் ஒரு செய்தி: 50க்கும் மேற்பட்ட அடியாட்கள் இந்திய மாணவர் சங்கத் தலைவர்களை தாக்கப் போகிறார்கள். சோமுவும் செம்புவும்தான் அவர்கள் குறி. தூத்துக்குடி மாவட்டத்தின் கடைகோடி கிராமத்திலிருந்து முதல் தலைமுறை பட்டதாரிகளாக வந்தவர்கள் சோமசுந்தரமும், செம்புலிங்கமும். கல்லூரியில் ராகிங் கொடுமையிலிருந்து புதிய மாணவர்களைப் பாதுகாத்து அரசியல் ரீதியாக அணிதிரட்டும் பணிகளை இந்திய மாணவர் சங்கம் செய்துவந்தது.

சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் நடத்திய போராட்டத்தில் சோமு இணைந்து, கல்லூரி கிளைச் செயலாளர் பொறுப்பிற்கு உயர்ந்தார். சமதர்ம அரசியல் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்ட தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள் அதிகமாக இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்தனர். ஆதிக்க சாதியினரால் இயக்கப்பட்ட மாணவர் அமைப்புகளால் இதை ஏற்க முடியவில்லை. கல்லூரி உணவு விடுதியின் தரம், கட்டணம், மாணவர் வசதிகள், கல்லூரி கட்டண உயர்வு ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களில் தோழர்கள் சோமு, செம்பு இருவரும் முன்னணி வகித்தனர். இதனால் மாணவர்களிடையே நல்ல பெயர் பெற்றிருந்தனர். எஸ்எப்ஐ தோழர்கள் “அன்பு குழு” என்ற அமைப்பை உருவாக்கி, சாதி பாகுபாடின்றி மாணவர்களை ஒன்றிணைத்தனர். 1980-81ம் ஆண்டு மாணவர் பேரவைத் தேர்தலில் செம்புலிங்கம் பொதுச் செயலாளராக வெற்றிபெற்றார். தோழர் ரவீந்திரன் தலைவரானார். அனைத்து பதவிகளுக்கும் இந்திய மாணவர் சங்கத் தோழர்களே தேர்வானார்கள்.

தோற்றுப்போன அணியினர் பல தகராறுகளை உருவாக்கி, இறுதியில் வெளியாட்களுடன் விடுதியில் நுழைந்து சோமசுந்தரத்தையும், செம்புலிங்கத்தையும் தாக்கி படுகொலை செய்தனர். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக மாணவர்களை திரட்டியதும், அடிப்படை உரிமைகளுக்காகப் போராடியதுமே அவர்கள் கொல்லப்படக் காரணம். 44 ஆண்டுகளாக சோமு-செம்பு நினைவுகளை நெஞ்சில் ஏந்தி இந்திய மாணவர் சங்கமும், செங்கொடி இயக்கமும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை மழுங்காமல் கூர்தீட்டிக் கொண்டிருக்கின்றன. பேரவை தேர்தல் ஏன் தேவை? “கல்வி நம்மை வெறும் எழுத்தர்களாக மட்டுமே ஆக்கக்கூடியது என்றால் அதனை நாம் பெற்றிருப்பதில் ஒரு மகிழ்ச்சியும் இல்லை.

அத்தகைய கல்வி நமக்குத் தேவையும் இல்லை” என்றார் பகத்சிங். கல்வி வளாகங்களில் மாணவர்களுக்கான ஜனநாயகத்தை உறுதிசெய்ய மாணவர் பேரவைகள் முக்கியமானவை. ஆனால் இன்றைய அரசுகள் இத்தேர்தல்களை நடத்துவதில் பெரும் தடைகளாக உள்ளன. கருத்துச் சுதந்திரத்தை வளர்க்கவும், இளைஞர்கள் ஜனநாயக வழியில் செயல்படவும் கல்வி வளாகங்களில் மாணவர் பேரவைகள் அவசியம். இந்த ஜனநாயக நடைமுறை தமிழ்நாட்டில் மறுக்கப்படுகிறது. கடந்த காலங்களில் பேரவைகளே மாணவர்களை ஜனநாயகப்படுத்தி, அரசியல்படுத்தியுள்ளன. ஆளும் வர்க்கங்களுக்கு மாணவர் அரசியல் எப்போதும் எதிராகவே நின்றுள்ளது என்பதே வரலாறு. அதனாலேயே மாணவர் பேரவைத் தேர்தல்களை நடத்தாமல் தவிர்க்கின்றனர் ஆட்சியாளர்கள்.

ஜனநாயக முறைப்படி மாணவர் பேரவைத் தேர்தலை நடத்தக் கோரி இன்றும் இந்திய மாணவர் சங்கம் கருத்தரங்கம், கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட போராட்டங்களைத் தொடர்கிறது. கல்லூரி வளாகங்களில் மட்டுமல்ல, மதவெறி அதிகாரம் பெற்றிருக்கும் இக்காலகட்டத்தில் தேசத்தின் ஜனநாயகமும் மாண்டுகொண்டிருக்கிறது. இத்தகைய நிலயில், தோழர்கள் சோமு-செம்பு உயிர்த்தியாகம் மாணவர் உரிமைப் போராட்டத்தை அணையாமல் பாதுகாக்கும்.

சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம் என்ற பதாகைகள் தியாகிகள் சிந்திய இரத்தத்தால் உயிர்ப்பித்துக்கொண்டிருக்கும். இத்தனை வீரத்தியாகம் பெற்ற, சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக, மாணவர் உரிமைக்காகப் போராடிய தியாகிகள் சோமுசுந்தரம், செம்புலிங்கம் நினைவுச் சுடர் தூத்துக்குடியிலிருந்து மதுரை மண்ணில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாட்டிற்கு அணையாத நெருப்பு சுடராய் வருகிறது. அந்த மகத்தான தியாகிகளின் நினைவுகளை நெஞ்சில் ஏந்தி வீறுநடை போடுவோம்!