கம்யூனிஸ்ட் கட்சியும் கலைக்குழுக்களும்
தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் தோன்றிய காலம் முதல் ஏராளமான கலைஞர்களையும், கலைக் குழுக்களையும் உருவாக்கி வளர்த்தது. கலைக்குழுக்கள் மக்களிடம் பிரச்சாரம் செய்து கட்சி வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றன. மேடையில் பாடல்களோடு உரையாடலும் இணைந்து மக்களை ஈர்த்தன. கம்யூனிஸ்ட் கலைக்குழுக்களுக்கு தோழர் ப. ஜீவானந்தம், மதுரை மணவாளன், வெ.நா. திருமூர்த்தி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், சாத்தூர் பிச்சக்குட்டி, கன்னிவாடி பச்சைநிலா போன்ற பலரும் பாடல் புனைந்து அளித்தனர். 1935 காலத்திலேயே ஜீவாவின் எழுச்சிப் பாடல்களை கே.பி. ஜானகியம்மாள், கே.பி. சுந்தராம்பாள் போன்றவர்கள் நாடக மேடைகளில் பாடினர். கட்சியின் பாடல்களுக்கு தோழர் எம்.பி. சீனிவாசன் இசையமைப்பாளராய் திகழ்ந்தார். நாதஸ்வர கலாநிதி காருகுறிச்சி அருணாசலம், வில்லிசைக் கலைஞர் சாத்தூர் பிச்சக்குட்டி போன்ற புகழ்மிக்க கலைஞர்கள் கட்சி மேடைகளில் நிகழ்ச்சிகள் நடத்தினர். பாவலர் வரதராஜன் கலைக்குழு, சிவகிரி எஸ்.எம். கார்க்கி கலைக்குழு பெரும் கூட்டங்களைச் சேர்த்தன. இவை வெகுமக்களிடையே கட்சிப் பிரச்சாரத்தைக் கொண்டு சென்று கட்சி மீது பெரும் மரியாதையை ஏற்படுத்தியன.
பட்டி மண்டபங்கள் நிறைய நடந்தன. குன்றக்குடி அடிகளார் முதல் சாலமன் பாப்பையா வரை பெரும் பட்டி மண்டபங்கள் நடத்தியுள்ளோம். தொடர்ந்தும் நடத்தி வருகிறோம். மதுரை புதுமைக்கலாமன்றம் அரைமணி, முக்கால்மணி நேர நாடகங்களை நடத்தியது. வங்கப் பஞ்சம் பற்றிய நாடகத்தில் கே.பி. ஜானகியம்மாள் அவரது கணவர் குருசாமி, பி.ராமமூர்த்தி, எம்.ஆர். வெங்கட்ராமன், என். சங்கரய்யாபோன்றோர் நடித்தனர். அதே போல் கந்தன் காட்டிய வழி என்ற நாடகம் தமிழகம் முழுவதும் நடந்தது. பி.ராமமூர்த்தி, எம்.ஆர். வெங்கட்ராமன், கே. பாலதண்டாயுதம், பி. சீனிவாசராவ், ஜீவானந்தம், கே.பி. ஜானகியம்மாள், என். சங்கரய்யா இந்நாடகத்தில் நடித்தனர். ஜீவாவின் பாடல்களை நாங்கள் பாடும் போது மக்கள் தேம்பி அழும் குரல்கள் கேட்கும் என்பார் ஜானகியம்மாள். மேடையில் பாரதியாரின் பாடல்களுக்கு குழந்தைகள் நடனமாடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் என்பார். மதுரையில் செம்மலர் கலைக் குழு சில ஆண்டுகள் தெரு நாடகங்களையும் , ரத்தபூமி போன்ற அரங்க நாடகங்களையும் நடத்தியது. பீப்பிள்ஸ் தியேட்டர் நாடகக் குழுவும் சிறப்புற இயங்கியது. செவ்வானம், நெஞ்சில் ஒரு கனல், வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால்.. ஆகிய நாடகங்கள் நடத்தியது. மதுரை நாடக இயக்கம் பல்வேறு நாடகங்களை நடத்தி புகழ்பெற்றது. தற்போதும் நடத்தி வருகிறது. கலைவாணர் கலைக்குழு, சுடர் கலைக்குழு ஆகியவையும் சிறப்பாக இயங்கி வருகின்றன. கவிஞர், பாடகர் வெ.நா. திருமூர்த்தி காலில் சலங்கை கட்டி பாடி ஆடுவார்.
கையில் சப்ளாக் கட்டையை அடித்துத்தாளம் பிசகாமல் ஆடுவார். “ஆண்டவனே சர்வே போட்டு அளந்து விட்டானா- இல்லே அவனவனே நெலத்தையெல்லாம் அமுக்கிக்கிட்டானா?” போன்ற அவரது பாடல்கள் மக்களை ஈர்க்கும். தெருமுனைப் பிரச்சாரத்தில் இவர் பெரும் கூட்டத்தைக் கூட்டி விடுவார். நிலப்பிரபுத்துவ சாதிய சக்திகளை அம்பலப்படுத்தும் முத்துப்பட்டன் கதையை வில்லிசையில் சிவகிரி கார்க்கி 1500 இடங்களில் நடத்தியுள்ளார். அதே போல் சாத்தூர் பிச்சக்குட்டியும் புராண, இதிகாசக்கதைகள், நாடோடிக்கதைகள் அறுபதுக்கு மேற்பட்ட தலைப்புகளில் வில்லிசைக் கச்சேரி நடத்துவார். இடையிடையே மக்கள் படும் துயரங்கள், ஆட்சியாளர் கொடுமைகள் பற்றிய பாடல்களும் பாடுவார். அதனால் இந்த வில்லிசைக் குழுக்களை கிராமப் பொங்கல், திருவிழாக்களுக்கு அழைத்துப் பாட வைப்பார்கள். இவர்கள் பாடும் பாடல்களில் கட்சிக் கொள்கைகள் சேர்ந்து மக்களை சிந்திக்க வைக்கும். மூட நம்பிக்கைகளை நையாண்டி செய்யும் பாடல்கள் மக்களை மகிழ்வித்து சிந்தனையைத் தூண்டும். தாலாட்டுப் பாடலில் கூட- காட்டுப் புளியவிதை கருக்கியே தானரைத்து காப்பித் தூள் என்று விற்கும் காயச் சித்தர் உங்கள் ஐயா ஆற்று மணல் தனிலே அரிசியைத் தான்கலந்து தாராளமாய் விற்கும் தர்மதுரை உங்கள் ஐயா! - என்று கிண்டல் இருக்கும்.
இக்கலை நிகழ்வுகளில் சாதித்துவேசங்கள் ஒழிய வேண்டும்; குலத்தால் உயர்வு தாழ்வு கூடாது; ஏழைகள் விவசாயிகள் தொழிலாளர்கள் வாழ்வு மலர வேண்டும். பொருளாதார ஏற்றத் தாழ்வு நீங்க வேண்டும். அதற்கு சுரண்டப்படும் மக்கள் போராட வேண்டும்; பெண்கள் தங்கள் சமத்துவ உரிமைகளைப் பெற போராட வேண்டும் என்பன போன்ற கருத்துக்கள் பிரச்சாரம் செய்யப்படும். நெல்லை மாவட்டம் வில்லிசைக்கு பெயர் பெற்றது எஸ்.எம். கார்க்கி தென் மாவட்டங்களில் வில்லிசை மூலம் தொடர்ந்து பிரச்சாரம் செய்தவர். அம்பை கவிஞர் ஆவுடையப்ப தேசிகர் கவிஞராகவும் பாடகராகவும் திகழ்ந்தவர். மறைந்த தோழர் சிவகிரி எம். பாண்டியனும் கட்சியின் சிறந்த பாடகர். கரிசல் குயில் கிருஷ்ணசாமி, திருவுடையான், பொதிகை இசைக்குழு, முத்துச்சிப்பி கலைக்குழு, தாமிரபரணி நாடகக்குழு என இந்த பாரம்பரியம் தொடர்கிறது. மதுரை கடந்த காலத்தில் கம்யூனிஸ்டுக் கட்சிக் கலைஞர்களின் பாடிவீடாய்த் திகழ்ந்தது.
மதுரை மணவாளன் (சுட்டுக்கொல்லப்பட்ட தியாகி) நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியவர். அவரது விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே என்ற பாடல் காலத்தால் அழியாததாகும். கே.பி. ஜானகியம்மாள், எம்.எம். மாணிக்கம், எம்.ஆர். எஸ். மணி, ஐ. சுப்பையா, கமலம் போன்ற பாடகர்கள் பாடினர். “செங்கொடி என்றதுமே ஒரு ஜீவன் பிறக்குதம்மா” காலுக்குச் செருப்புமில்லே கால்வயிற்றுக்கூழுமில்லே” - போன்ற பாடல்களை எம்.பி சீனிவாசன் இசையமைத்துப் பாடினார். கே.பி. ஜானகியம்மாவின் கணவர் எஸ். குருசாமி சிறந்த ஆர் மோனிஸ்ட். அவரது மகள் சுப்புலட்சுமி, சங்கரராஜ். ஆனந்தராஜ், ராஜம்மாள் போன்ற பல பாடகர்கள் இருந்தனர். அதனால் மதுரையில் கட்சியின் பிரச்சாரத்தை ஆடல், பாடல், நாடகம் லட்சக்கணக்கான மக்களிடம் கொண்டு சென்றது. 1957 க்குப்பிறகு பாவலர் வரதராஜன் தனது சகோதரர்களுடன் வந்து தனது கலை நிகழ்ச்சி மூலம் தமிழகத்தையே கலக்கினார். “தாய் நாட்டுக்காகத் தன் உடல் பொருள் ஆவியைத் தந்த தியாகிகளுக்கு வணக்கம்” என்று துவங்கி இறுதியில் தியாகி சிவராமன் கதையை பாவலர் கூறி முடிக்கும் போது கூட்டம் கண்கலங்கிச் செல்லும். தோழர் கோபா காளிமுத்து- சுந்தரமூர்த்தி குழுவும் மறக்க முடியாதவை. தொடர்ந்து குமார் கலைக்குழு, மணவாளன் கலைக்குழு, ராமசாமி கலைக்குழு, செம்மலர் கலைக்குழுக்களின் பணி பாராட்டத்தக்கது.
கோமல் சுவாமிநாதனும் நமது கட்சி மேடைகளில் ‘தண்ணீர் தண்ணீர்’ போன்ற நாடகங்களை நடத்திக் கொடுத்ததையும் மறக்கவியலாது. மதுரை புறநகர் மாவட்டத்தில் கரிசல் கருணாநிதி கலைக்குழு, வன்னிவேலம்பட்டி தமிழன்னை கலைக்குழு, கருமாத்தூர் கலைக்குழுக்கள் செயல்பட்டுவருகின்றன. 1982ம் ஆண்டு கே.ஏ. குணசேகரன் -கோட்டைச்சாமி கிராமியக் கலைக்குழுவை உருவாக்கினேன். பின்பு , அக்குழுவோடு சிவகங்கை காந்தி, அண்ணாவி, நையாண்டி, மேளக்குழுவை இணைத்தோம். கவிஞர் கன்னிவாடி பச்சை நிலாவின் பாடல்களை இசையமைத்து பாடியதால் குழு பிரபலமாகி தமிழகம் முழுவதும் வலம் வந்தது. கடலைச் செடியத் தின்னு புடுச்சே கம்பளிப் பூச்சி எல்லாம், முக்காமுழம் நெல்லுப் பயிரு முப்பது கெஜம் தண்ணீர் கெணறு, பாவாடை சட்ட கிழிஞ்சுபோச்சுதே- போன்ற பச்சைநிலாவின் பாடல்கள் கிராம, நகர பேதமின்றி மக்களை ஈர்த்தன. 1985 ல் மதுரையில் நடந்த அரசியல் மாநாட்டில் கொல்லங்குடி கருப்பாயி , மாரியம்மாள் பங்கேற்ற நிகழ்ச்சியை தோழர் இ. எம். எஸ். நம்பூரிதிபாட் பாராட்டி திருவனந்தபுரத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்த வைத்தார். அதே போல் 1983ல் விருதுநகர் அருகிலுள்ள எரிச்சநத்தம் பொங்கல் விழாவுக்கு போயிருந்தபோது பாவலர் ஓம் முத்துமாரி கலை நிகழ்ச்சியை பார்த்தேன். அவர் பாடிய பாடல்களில் “எரிச்சலா இருக்கா இல்லையா” “கூட்டுசேந்து கொள்ளையடிக்கிற நாட்டிலே- நீ குறட்டை விட்டு தூங்காதப்பா வீட்டிலே” போன்ற பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தன.
அதே வாரம் அருப்புக் கோட்டையில் நடந்த வாலிபர் சங்க மாநாட்டில் ஓம் முத்துமாரி கலைக்குழுவை அழைத்துப் பாடச் செய்தேன். நிகழ்ச்சி சிறப்புற்று முகவை மாவட்டத்தின் பல ஊர்களுக்கு குழு சென்றது.பின்பு தமிழகம் அறிந்த குழுவானது. அதைத் தொடர்ந்து விருதுநகரில் ஓம் முத்துமாரியின் மகன் முருகன், மாரிமுத்து தலைமையில் பாவலர் வரதராசன் கலைக்குழுவை துவக்கிவைத்தேன். அக்குழு கலைந்த பின் தற்போது புயல் கலைக்குழு, சந்துரு கலைக்குழுக்கள் இயங்கி வருகின்றன. கோவை ராமதாஸ் தமிழகத்தின் தலை சிறந்த கம்யூனிஸ்ட் பாடகராய் திகழ்ந்தார். 1963ல் தோழர் ஜீவா மறைந்த பின் தாமரை ஒரு சிறப்பு மலர் வெளியிட்டது. அவ்வெளியீட்டு விழாவில் பி. ராமமூர்த்தியுடன் காமராசரும் கலந்து கொண்டார். அந்நிகழ்வில் கோவை ராமதாஸ் ஜீவாவின் “ காலுக்குச் செருப்புமில்லை” பாடலை பாடினார். அதில் பேசிய காமராசர் ராமதாசின் பாடல்களை கேட்டு உருகி “ எவ்வளவு நாளாச்சி, ராமதாஸ் பாட்டைக் கேட்டு, மிகச் சிறந்த பாடகர்” என்று பாராட்டினார்.
சேலத்தில் சிதம்பர பாரதி, சடையாண்டி, பாவாடசாமி (பார்வையற்றவர்) போன்ற அற்புதமான பாடகர்கள் இருந்தனர். தற்போதும் அக்னி கலைக்குழு நாடகங்கள், பாடல்கள் தயாரித்து தேர்தல் போன்ற மக்கள் இயக்கங்களின் போது பிரச்சாரம் செய்து வருகின்றன. சென்னையில் விடியல், பீட் கலைக்குழுக்கள் மற்றும் சென்னை கலைக்குழுக்கள் இயங்கி வருகின்றன. குமரியில் முரசு கலைக்குழு, நாகை சப்தர்ஹஸ்மி கலைக்குழு, தஞ்சை என்.வெங்கடாசலம் கலைக்குழு, புதுவை சப்தர் ஹஸ்மி கலைக்குழுக்கள் தற்போது இயங்கி வருகின்றன. புதுகை பூபாளம் குழுவினரின் நையாண்டி தர்பார் மக்களின் வெகுவான பாராட்டுதல்களை பெற்றுள்ளது. நவகவி, வையம்பட்டி முத்துசாமி போன்ற நமது கவிஞர்கள் சிறந்த பாடல்களை தருகிறார்கள். தேர்தல் காலங்களில் தோழர் தமிழ்ச்செல்வன் நமது குழுக்களை ஒருங்கிணைத்து பயிற்சி அளித்து வருகிறார். அவை தேர்தல் பிரச்சாரத்தில் பெரிதும் பயன்படுகின்றன. திண்டுக்கல் சக்தி போர்ப்பறை தோழர் சந்திரா தலைமையில் பெண்கள் தப்பாட்டக் குழு நமது கலை மேடைகளில் ஜொலிக்கிறது. அதன் ஈர்ப்பில் சுடர் கலைக்குழு போன்ற பல தப்பாட்டக் குழுக்கள் இக்காலத்தில் உருவாகியுள்ளன. மேலும் பல குழுக்கள் உருவாகின்றன. மாற்றுக் கலையை, மக்கள் கலையை, மக்களிடம் கொண்டு செல்வதில், நாட்டுப்புறக் கலையை பாதுகாப்பதில் கம்யூனிஸ்ட் கலைக்குழுக்கள் முன்னணியில் உள்ளன. புதிய கலைக்குழுக்களும் நம்பிக்கையோடு பிறக்கும்.