articles

img

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்...! - பெ.சண்முகம்,

“நீரின்றி அமையாது உலகு” என்றார் திருவள்ளு வர். அவருடைய பெருமையை பறைசாற்றும் விதமாக அரசால் அமைக்கப்பட்டுள்ள பிரம் மாண்டமான “வள்ளுவர் கோட்டம்” அமைந்திருப்பது ஒரு ஏரியில் தான். எவ்வளவு பெரிய முரண். சென் னப்பட்டினத்தில் முன்பு 36 ஏரிகள் இருந்துள்ளன. இப்போது ஒரு ஏரிகூட இல்லை. சென்னையின் பிரம் மாண்டமான வியாபார மையமாக திகழ்கிற தி.நகர் ஏரியை அழித்துத்தான் அமையப் பெற்றுள்ளது. சென்னையில் உள்ள போரூர் ஏரியின் மொத்தப் பரப்பளவு 800 ஏக்கர்! இதில் ஒரு பகுதியை ராமச் சந்திரா தனியார் மருத்துவமனைக்கு அரசே தாரை வார்த்தது. இப்போது ஏரியின் பரப்பளவு 330 ஏக்கர் தான் உள்ளது. 

வருவாய்த்துறை ஆவணங்களின் படி தமிழ் நாட்டில் 39,202 ஏரிகள் இருப்பதாக கணக்கு! ஆனால், உண்மையில் அத்தனை ஏரிகள் இப்போது இல்லை என்பது எல்லோரும் அறிந்த உண்மை. ஏனென்றால், மதுரை மாவட்டத்தில் உலகனேரி உயர்நீதிமன்றமாகவும், அரசால் விற்பனை செய்யப்பட்ட ஏரியில் தான் ஏராள மான வீட்டுவசதிவாரிய குடியிருப்புகளும் அமைக்கப் பட்டுள்ளன. புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் ஏரி களில் தான் அமைந்துள்ளன. எனவே, நீர்நிலை களை பாதுகாப்பதில் ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கும், நீர்நிலைகளை அழித்து பல்வேறு பணி களுக்கு மாற்றியதும், முன்னோர்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய பாசன மற்றும் குடிநீர் ஆதாரங்களை அழிக்கிறோமே என்கிற குறைந்தபட்ச வருத்தம் கூட  இல்லாமல் தான் ஆட்சியாளர்கள் இதனை மேற்கொண்டுள்ளனர். அரசு, தனது தேவைக்கு நீர்நிலைகளை வகைமாற்றம் செய்து இவ்வாறு பயன் படுத்தி வருவது பல்வேறு ஆட்சிக் காலங்களிலும் நடை பெற்றுள்ளது. 

நீதிமன்றங்களின் தலையீடு

முன்னோர்கள் ஏரிகளை மட்டுமல்ல, கோயில்க ளுக்கு அருகில் தெப்பக்குளங்கள், கண்மாய்கள், குளங்கள், ஊரணிகள் என தமிழ்நாட்டின் மொத்த தேவைக்கான நீரையும் தேக்கி வைப்பதற்கான கட்ட மைப்பு வசதிகளை உருவாக்கியுள்ளனர். ஆனால், இந்த கட்டமைப்பை சிறிது சிறிதாக அழித்துக் கொண்டி ருக்கிறோம் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. இதனைத் தொடர்ந்து, கடந்த சில வருடங்களாக, சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும், “நீர் நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். மீட்கப்பட்ட விபரங்களை அறிக்கையாக நீதிமன்றத் தில் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் தலைமைச் செயலாளர் உட்பட அதிகாரிகளை கூண்டி லேற்றுவோம்” என்றெல்லாம் தீர்ப்புகளையும், கறா ரான உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றன. வரு வாய்த்துறை ஆவணங்களில் உள்ள அடிப்படையில் நீர்நிலைகள் மீட்கப்பட்டு பராமரிக்கப்பட  வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

சமீபத்தில் சட்டப்பேரவையில், வருவாய்த்துறை மானிய கோரிக்கை தொடர்பான விவாதத்தின் போது, வருவாய்த்துறை அமைச்சர், “மக்களை வெளி யேற்ற வேண்டுமென்பது அரசின் நோக்கமல்ல. ஆனால், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது” என்று கூறி யுள்ளார். அரசின் இந்த அணுகுமுறை காரணமா கத்தான் தமிழ்நாடு முழுவதும், பல்வேறு வகையான புறம்போக்குகளில் பல தலைமுறைகளாக குடி யிருக்கும் மக்களை வெளியேற்றுவதற்கான நோட்டீஸ்  வழங்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் ஆக்கிர மிப்பை அகற்றுகிறோம் என்ற பெயரில் வீடுகளை இடித்து குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ள னர். இதனால், புறம்போக்குகளில் குடியிருந்து வரும் லட்சக்கணக்கான குடும்பங்கள் பதற்றத்தில் உள்ளன. இடித்துவிட்டால் எங்கு செல்வது என்று திகைத்துப் போய் செய்வதறியாது நிற்கின்றன.  இந்த நிலையில் தான் மாநிலம் முழுவதும் குடி மனைப்பட்டா கோரி பல லட்சக்கணக்கான மக்கள் மே 6 ஆம் தேதி வருவாய்த்துறை அலுவலகங்களில் மனு  கொடுக்கத் தயாராகி வருகிறார்கள். இதற்கான முயற்சி களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்து வரு கிறது. 

தீவிரமடைந்துள்ள நகர்மயம்

கிராமப்புறங்களில் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் காரணமாக ஏராளமான குடும்பங்கள் நகர்ப் புறங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். நகர்மயமாதல் என்பது வேகமாக நடைபெற்று வரு கிறது. கிராமத்தில் சொந்த வீட்டில் கௌரவமாகவும், சுயமரியாதையோடும் வாழ்ந்த மக்கள் பிழைப்பு தேடி நகரங்களுக்கு வந்து சாலையோரம், சாக்கடை யோரம், மயானம் என ஒதுங்க கிடைத்த இடங்களில் எல்லாம் சிறிய குடிசைகளை அமைத்து வாழ்ந்து கொண்டிருப்பது எவ்வளவு கொடூரமான ஒரு வாழ்க்கை. மனரீதியாக எவ்வளவு பெரிய பாதிப்புக்கு அவர்கள் உள்ளாவர் என்பதையெல்லாம் எண்ணிப் பார்க்கவே மனம் பதறுகிறது. அரசுக்கு சொந்தமான புறம்போக்குகளை, நீர்நிலைகளை விற்பனை செய்தவர்கள் ஆளுங்கட்சி பிரமுகர்கள் தான். அதனால் தான் அது கலைஞர் நகர், எம்.ஜி.ஆர்.நகர், ஜெ.ஜெ.நகர், அண்ணாநகர் என்று நாமகரணம் சூட்டப்பட்டிருக்கிறது. இதில் ஒரு பாது காப்பு இருப்பதாக மக்கள் உணருகின்றனர். சில இடங்களில் அம்பேத்கர் பெயரும் உண்டு. எங்க ஆட்சி தான், எங்கள மீறி எதுவும் நடக்காது, வாங்குங்க! துணிந்து வீட்ட கட்டுங்க! நாங்க இருக்கிறோம் என்று மக்களுக்கு நம்பிக்கையூட்டி விற்பனை செய்தார்கள். இதற்கு வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை முழு ஆதரவும் இருந்திருக்கிறது. இப்படி எல்லாமே சேர்ந்து தவறு செய்துவிட்டு மொத்தப் பழியையும் இப்போது அங்கு வசிக்கும் மக்கள் ஏற்க வேண்டி இருக்கிறது என்பதை அரசும், நீதிமன்றங்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசாணை எண் 854

2006ஆம் ஆண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் செப்டம்பர் 5 அன்று, அரசு நிலங்க ளில் வீடுகட்டி குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென்று கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கத்தை நடத்தினோம். சுமார் 5  லட்சம் மக்கள் அன்றைய இயக்கத்தில் கலந்து கொண்டு மனு அளித்தனர். இதன் விளைவாகத்தான் 30.12.2006 அன்று அரசாணை என் 854 வெளி யிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு விளக் கங்கள், விதிவிலக்குகள், திருத்தங்கள் என 13 அர சாணைகள் மற்றும் வருவாய்த்துறை நிர்வாக ஆணை யரின் கடிதங்கள் என ஏராளமாக உத்தரவுகள் பிறப் பிக்கப்பட்டன.  இதனைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் வீட்டுமனைப் பட்டாக்கள் அமைச்சர்களால் வழங்கப் படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இப்போது திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 07.05.2021 முதல் 31.05.2022 வரை 1,51,701 மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், குடி மனைப்பட்டா கோரி மக்கள் தொடர்ந்து மனு கொடுத்து  சலித்துப்போய் விட்டார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

மீண்டும் உருவாக்க முடியுமா?

தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிர மனங்கள் அகற்றுதல் சட்டம் 2007 என்பதை பயன் படுத்தித்தான் நோட்டீஸ் என்பது வழங்கப்படுகிறது. சென்னையில் பெத்தேல் நகர் என்ற பகுதியில் சுமார் 4000 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அந்நகர் உருவாகி 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. பல மாடிக்கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இப்போது அது நீர்நிலை; அங்கிருப்பவர்கள் எல்லாம் ஆக்கிர மிப்பாளர்கள்; எனவே, உடனடியாக வெளியேற்ற வேண்டுமென்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது என்றால், அந்த 4000 குடும்பங்களை எங்கே குடியமர்த்துவது? சிறுகச்  சிறுக சேர்த்தும், கடன் பட்டும் கட்டப்பட்ட வீடுகளை இடித்துவிட்டால் மீண்டும் அவர்களால் அப்படியொரு வீட்டைக் கட்ட முடியுமா? அப்படியே ஆக்கிரமிப்பை அகற்றி 4000 குடும்பங்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்து அந்த இடத்தை மீட்டாலும் மீண்டும் அங்கே ஏரியை உருவாக்க முடியுமா? என்பதற்கு அரசும், நீதிபதிகளும் தான் பதில் சொல்ல வேண்டும். 

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகில் உள்ள நரியம்பாக்கம் என்ற இடத்தில் புறம்போக்கில் வாழ்ந்து வந்த குடும்பங்களை அகற்றுவதற்கு அதிகாரிகள் இரண்டு முறை நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இரண்டு குழந்தைகளுக்கு தாயான சுபலட்சுமி (க/பெ.மோ கன்) என்பவர் தாங்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்படு வோம் என பயந்து ஏப்ரல் 30 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாயை இழந்து அந்த இரண்டு குழந்தைகளும் தாய் இல்லா பிள்ளை களாய் தவித்துக் கொண்டுள்ளனர். அரசு அதிரடியாக நடவடிக்கையில் இறங்கினால் இதுபோல் இன்னும் எத்தனை உயிர்கள் போகுமோ தெரியவில்லை. அரசு கொடுக்கும் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், மனைப்பட்டா இல்லாத குடும்பமே தமிழகத்தில் இருக்கக்கூடாது. ஆனால், பட்டா கேட்டு மக்கள் அரசு அலுவலகங்களுக்கு அலைந்து கொண்டு தான் உள்ளனர். எனவே, அரசு நினைத்தால் அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு குடிமனை வழங்குவது முடி யாத காரியமல்ல. குடும்பத்திற்கொரு ரேசன்கார்டு வழங்குவது போல சொந்தக் குடிமனை இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு குடிமனை வழங்கு வது என்று அரசு முடிவெடுத்து செயல்படுத்தினால் ஒரே ஆண்டில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். ஆட்சேபகரமான புறம்போக்குகளில் குடியிருக்கி றார்கள்; எனவே பட்டா தர முடியாது என்று அதிகாரிகள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதை வகை மாற்றம் செய்து பட்டா வழங்குவது என்றால்  அரசு தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் அரசு முடி வெடுக்காமல் பிரச்சனையை நீட்டித்துக் கொண்டே இருக்கிறது. இப்போது, அரசே வகைமாற்றம் செய்து பட்டா வழங்கலாம் என்று முடிவெடுக்க நினைத்தா லும் நீதிமன்றங்கள் முட்டுக்கட்டை போடுகிறது. 

நல்லா இருக்கு சார், உங்க நீதி!

நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் நீதிபதிகளுக்கு உள்ள ஆர்வத்தையும், அக்கறையை யும் பார்த்தால் நமக்கு புல்லரிக்கிறது. ஆனால், “கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” என்ற பழமொழியும் கூடவே நினைவுக்கு வருகிறது. போரூர் ஏரியை உடை யாருக்கு அரசு தாரைவார்த்த போது, இதே நீதிமன்றம், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்றது. ஆனால், வரன்முறைப் படுத்தி ஏழைகளுக்கு பட்டா வழங்கலாம் என்றால், அரசு அவ்வாறு முடிவெடுக்கக் கூடாது என்று அரசை மிரட்டுகிறது. நல்லா இருக்கு சார், உங்க நீதி, நேர்மை, நியாயம், தீர்ப்பு!

தமிழ்நாடு முழுவதும் சுமார் 25 லட்சம் குடும்பங் கள் ஆட்சேபகரமான புறம்போக்குகளில் வாழ்ந்து வருகின்றனர். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது என்று அரசு முடிவெடுத்தால் இத்தனை குடும்பங்க ளின் கதி! நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் கலங்கு கிறது. எனவே, மக்களின் குடியிருப்பு உரிமையை பாது காக்கும் வகையில் அரசு இதில் முடிவெடுக்க வேண்டி யது கட்டாயம். நீதிமன்ற தீர்ப்பினால் ஏற்பட இருக்கும் விளைவுகள் குறித்து உணர்ந்து அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.  நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை. ஆனால், அரசு ஆவணங்களில் மட்டுமே நீர்நிலை என்று இருந்து, பல்லாண்டு காலமாக மக்களின் குடியிருப்பு பகுதியாக மாறிவிட்ட நிலையில், அதை வரன்முறைப் படுத்தி பட்டா வழங்குவது தான் பொருத்தமான தீர்வாக இருக்க முடியும். உண்மையில், இப்போதும் நீர்நிலையாகவும், நீர்பிடிப்புப் பகுதியாகவும் இருக்கும் இடங்களில் உள்ள குடும்பங்களுக்கு மாற்று இடம் கொடுத்து அவர்கள் அங்கே வீடுகட்டி குடியேறும் வரை அவர்களை வெளியேற்றக் கூடாது. இப்போது, இருக்கும் நீர்நிலைகளை பாதுகாக்கவும், மேம்படுத்த வும் அரசு திட்டமிட வேண்டும். இனி, புதிதாக நீர்நிலை ஆக்கிரப்புகள் ஏற்படாத வகையில் அரசும், உள்ளாட்சி நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டும். இத்தகைய நட வடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இப்பிரச்ச னைக்கு தீர்வு காண முன்வரவேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலி யுறுத்துகிறது. 

அறநிலையத்துறையின் அச்சுறுத்தல்

கோயில், மடம், தேவாலயங்கள், வக்பு வாரியம் ஆகியவற்றுக்கு சொந்தமான இடங்களில் சில லட்சம் குடும்பங்கள் அடிமனை வாடகை செலுத்தி பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். தங்களின் கடின உழைப்பில் அதில் வீடு கட்டியுள்ளனர். ஆனால், வீடு அவர்கள் பெயரில் இருக்காது. அற நிலையத்துறை அவ்வப்போது வாடகையை உயர்த்திக் கொண்டே வருகிறது. அதுவும் முன் தேதியிட்டு உயர்த்தி அதை ஒரே தவணையாக செலுத்த வேண்டும்; இல்லையென்றால் வெளியேற்றுவோம் என்று அச்சுறுத்தல் வேறு. எப்போது வெளி யேற்றப்படுவோமோ என்ற பயத்திலேயே மக்கள் வாழ வேண்டிய அவல நிலை. இதற்கொரு நிரந்தரத் தீர்வை  ஏற்படுத்தும் வகையில், விலையை தீர்மானித்து தவணை முறையில் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். ஏழைக ளுக்கு இலவசமாக வழங்கி அதற்குரிய தொகையை அரசே அறநிலையத்துறைக்கு செலுத்த வேண்டும். இப்படி பெறப்படும் தொகையின் மூலம், கோயில் மற்றும் சமய நிகழ்வுகளை சிறப்பாக நடத்த முடியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தப் பகுதி மக்களும் மனு கொடுக்கும் இயக்கத்தில் பங்கேற்க இருக்கிறார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களின் குடியிருப்பு உரிமையை பாதுகாக்க மேற்கொண்டுள்ள மே 6  இயக்கத்தில் மக்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும். அரசு மக்களின் குடியிருப்பை புல்டோசர் கொண்டு இடிக்க வந்தால் தடுக்கும் முன்னணிப் படையாக கட்சி களத்தில் இறங்கும். “அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே செல்வத்தை தேய்க்கும் படை” - என்ற குறளின் பொருளை உணர்ந்து குடிகளின் துன்பத்தை போக்க உரிய நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பு. மக்களின் குடியிருப்பு உரிமையை காக்க களம் காண்போம்!