உலகில் கிரேக்கம், இலத்தீன், சீனம், அரபி, சமஸ்கிருதம், பார்சியன் ஹீப்ரு மொழிகளைப் போலவே தமிழும் ஒரு செம்மொழி. அது மட்டுமல்ல, 2500 ஆண்டுக் கால வளமான-செழுமையான இலக்கியங்களையும், இலக்கணங்களையும் பெற்றிருப்பதால் தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழி. தமிழ் ஒரு செம்மொழி என தமிழ்நாடு, இந்திய, உலக மொழியறிஞர்களால் நீண்டகாலமாக ஏற்கப்பட்டிருந்தும் - போற்றப் பட்டிருந்தும் தமிழை செம்மொழியாக ஏற்று அறி விப்பதில் முந்தைய பிரதமர் வாஜ்பாய் தலைமை யிலான பாஜக ஒன்றிய அரசு இழுத்தடிப்பு வேலை செய்தது மட்டுமல்லாமல் அங்கீகரிக்கும் நடவடிக்கை யை மேற்கொள்ளவும் இல்லை.
இந்தியாவில் சமஸ்கிருதம் மட்டுமே ஆங்கி லேயர் காலம்முதல் மிகநீண்ட காலமாக ஒற்றைச் செம்மொழியாக இருந்துவந்தது. தமிழுக்கு நியாய மான செம்மொழி அந்தஸ்து அங்கீகாரம் கிடைப்ப தற்காக நடைபெற்ற போராட்டங்கள், எழுந்த உரத்த குரல்கள், எழுதிய எழுத்துகள் ஏராளம், ஏராளம்...இந்தப் போராட்டம் நாடாளுமன்றத்திற்குள்ளும் நடை பெற்றது. தமிழ்நாடு அரசு, அரசியல் கட்சிகள், தமிழ் அறிஞர்கள், தமிழ் அமைப்புகள், கலை-இலக்கிய அமைப்புகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என தமிழ்நாடே செம்மொழித் தமிழுக்காகக் களம் இறங்கி யது. தமிழுக்கான இந்த எழுச்சியின் வரலாற்றில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் வகித்த உத்வேகமான பங்கேற்பு அழுத்த மான சிறப்பு முத்திரையாகும். செம்மொழித் தமிழை செம்மொழியாக ஏற்று அறிவிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தித் தமிழகம் தொடர்ந்து எழுப்பிய உரத்தக் குரலுக்கும், நடத்திய தொடர் போராட்டங்களுக்கும் வெற்றி கிடைத்த திருநாள் அக்டோபர் 12. இன்றுடன் 17 ஆண்டுகள் ஆகின்றன.
வாராது போல வந்த மாமணி
2004-ஆம் ஆண்டு இதே நாளில் இடதுசாரிகளின் ஆதரவு பெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் வழங்கி அறி வித்தது. மத்தியில் திமுக இடம் பெற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்றபோது அது வெளியிட்ட குறைந்தபட்ச பொதுச்செயல் திட்டத்தில் அந்த உறுதிமொழியையும் சேர்த்தே அறிவித்தது. மகாகவி பாரதியின் வார்த்தைகளில் சொல்வதென் றால், “வாராது போல வந்த மாமணி” யாகத் தமிழகம் இதை வரவேற்று மகிழ்ந்தது. இன்றும் அந்த அறிவிப்பு எண்ணி மகிழத்தக்கது.
கால்டுவெல்லின் மதிப்பீடு
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த அறிஞர் டாக்டர் கால்டுவெல் எழுதிய 1856-ஆம் ஆண்டு வெளிவந்த, ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற ஆய்வு நூல் தமிழ்மொழி செம்மொழிக்கான அனைத்துத் தகுதிகளையும் பெற்றுள்ளது என உலகிற்குப் பறைசாற்றியது. “தமிழ் இலக்கிய வளர்ச்சியின் தொன்மை பற்றிய ஆராய்ச்சி, அது திராவிட ஒப்பி லக்கண ஆராய்ச்சியோடு கொண்டிருக்கும் தொடர்பு யாதேயாயினும், தன்னளவிலேயே மதிக்கத்தக்கச் சிறப்புடையது. ஆதலின் அச்சிறப்பிற்காம் காரணங் கள் சிலவற்றை ஈண்டு தருகின்றேன். தமிழ் பெற்றி ருக்கும் உயர்தனிச் செம்மொழியாம் தகுதிப்பாட்டி னைத் தானும் பெற்றிருப்பதோடு...” என்ற வரிகளில் தமிழை உயர்தனிச் செம்மொழியாக மதிப்பிட்டி ருப்பதைக் காணலாம்.
பரிதிமாற் கலைஞரின் பரிந்துரை
சூரிய நாராயண சாஸ்திரி என்கிற தம் பெயரைத் தமிழுக்கு மாற்றி ‘பரிதிமாற்கலைஞர்’ என்று அமைத்துக்கொண்ட பன்மொழிப் புலமை பெற்ற அந்தத் தமிழ்ப் பேரறிஞர், 1902-ஆம் ஆண்டிலேயே “திருந்திய பண்புஞ் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி புகல் செம்மொழியாம்” என்று இன்றை க்கு 120 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழைச் ‘செம் மொழி’ எனப் போற்றிப் புகழ்ந்துரைத்தார். அவர் காலத்தில் வெளிவந்த மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாகிய ‘செந்தமிழ்’ எனும் இதழில், “வடநாட்டு யர்தனிச் செம்மொழி சமஸ்கிருதமெனக் கொண்டாற் போலத் தென்னாட்டுயர்தனிச் செம்மொழி தமிழெனக் கொண்டு விதிகள் வகுத்தலே ஏற்புடைத்தாம்”என்று தமிழுக்குரிய சமநீதியை எடுத்துரைத்தார். அடுத்து 1903-ஆம் ஆண்டு வெளிவந்த ‘தமிழ்மொழி வர லாறு’ எனும் நூலிலும் தமிழ்மொழியின் தனிச்சிறப்பு களை எடுத்துரைத்து செம்மொழித் தகுதிக்கு வலு சேர்த்தார் பரிதிமாற்கலைஞர்.
தொல்காப்பியமே முந்தையது
1918-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை பச் சையப்பன் கல்லூரியின் அரங்கத்தில் அறிஞர்களும், பட்டம் பெற்ற கல்வியாளர்களுமாக சுமார் 400 பேர் கூடிய கூட்டம் தமிழைச் செம்மொழியாக ஏற்று அறி விக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியது. 2500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட தொல் காப்பியம் வடமொழியில் உள்ள பாணினியம் எனும் இலக்கண நூலைவிடவும் பழைமையானது என்றும், தமிழ்மொழியின் திருந்திய பண்பினைத் தொல்காப்பி யத்தில் அறியலாம் என்றும், இதைச் செம்மொழிகளின் பட்டியலில் இணைத்துப் போற்ற வேண்டுமென்றும் அந்தத் தமிழ் அறிஞர்களின், கல்வியாளர்களின் கூட்டத் தீர்மானம் வலியுறுத்தியது. 1919-ஆம் ஆண்டு தஞ்சையில் உள்ள கரந்தைத் தமிழ்ச் சங்கம் புகழ்பெற்ற தமிழறிஞர்கள் பங்கேற்ற தனது ஆண்டு விழாவில் தமிழ்மொழியைச் செம்மொ ழியாக அறிவித்துத் தீர்மானம் நிறைவேற்றியது.
சாகித்ய அகாடமி மாநாட்டில்...
1951-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தில்லியில் சாகித்ய அகாடமி அமைப்பு மாநாட்டில் பேசிய இந்தியா வின் முதலாவது கல்வி அமைச்சர் மவுலானா அபுல் கலாம் ஆசாத், “தமிழ் ஒரு செம்மொழியாக ஏற்பதற் குத் தேவையான எல்லா தகுதிகளையும் பழங் காலத்திலேயே பெற்றிருக்கிறது” என்றார். 1955-ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் தலைமையில் நடைபெற்ற அகில இந்திய கீழ்த்திசை மாநாட்டிலும், 1981-இல் மதுரையில் நடை பெற்ற உலகத் தமிழ் மாநாட்டிலும், அடுத்து 1995-இல் தஞ்சையில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டிலும், ஒன்றிய அரசு தமிழ்மொழியைச் செம்மொழியாக அங்கீகரித்து அறிவிக்க வேண்டு மெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கல்கத்தா பல்கலைக் கழகத்தை மையமாகக் கொண்டு செம்மொழி ஏற்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. சமஸ்கிரு தம், பாரசீகம், உருது ஆகிய மொழிகளை மட்டுமே அக்குழு செம்மொழிகளாக ஏற்புசெய்து அறிவித்தது. அது தமிழைச் செம்மொழியாக ஏற்காததற்குக் காரணம், தமிழின் செம்மொழிச் சிறப்பை எடுத்து ரைக்க அக்குழுவில் எவரும் இல்லை. இந்தியாவைப் பொறுத்தமட்டில் அன்று சமஸ்கிருதம் மட்டுமே செம்மொழி. பன்மொழிகளைக் கொண்ட இந்தியப் பெருந்தேசத்தில் ஒற்றை மொழிக்கு மட்டுமே செம்மொழி அங்கீகாரம்!
தில்லியில் தமுஎகச ஆர்ப்பாட்டம்
தாங்கவில்லை தமிழ் மனம்! தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகள், தமிழறிஞர்கள், கலை இலக்கிய அமைப்புகள், பத்திரிகைகள், மாணவர் கள் அனைவரும் செம்மொழி அங்கீகாரத்திற்காகக் களமிறங்கினர். சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டவேண்டுமென வலி யுறுத்தி நீண்ட நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி விருதுநகர் சங்கரலிங்கனாரின் பெயர் சூட்டப்பட்ட அரங்கில் சென்னையில் 1994 ஏப்ரல் 24 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்- கலைஞர்கள் சங்கம் நடத்திய தமிழ் வளர்ச்சி - பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடுமுதல் 2000 ஆவது ஆண்டு ஆகஸ்ட் 22 அன்று தில்லியில் செம்மொழி ஏற்புக்காக ஆர்ப்பாட்டம் நடத்தியது வரையும் அதற்குப் பின்னரும் தமிழுக்காக இச்சங்கம் நடத்திய இயக்கங்களும் எழுப்பிய குரல்களும் எழுதிய எழுத்துக்களும் ஏராளம் ஏராளம்... தில்லி ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, பிரதமரிட மும், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரிடமும் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் நகல் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 மக்களவை உறுப்பினர்க ளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. அடுத்து நடை பெறவிருக்கும் மக்களவை குளிர்காலக் கூட்டத் தொட ரில் தமிழின் உரிமைகள் குறித்துக் குரல் எழுப்புமாறு எம்.பி.க்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தமிழை உடனடியாகச் செம்மொழியாக ஏற்று அறிவிக்க வலியுறுத்தி பிரதமருக்குத் தந்திகள் அனுப்பும் இயக்கமும் நடத்தப்பட்டது.
ஓரவஞ்சனை வேண்டாம்!
பல கோடிகள் நிதி ஒதுக்கி 1999-2000 ஆவது ஆண்டை சமஸ்கிருத ஆண்டாக அறிவித்துக் கொண்டாடிய அன்றைய பாஜக ஒன்றிய அரசு உயர்தனிச் செம்மொழியாம் தமிழுக்கு 2000-2001-ஆம் ஆண்டை அவ்வாறு அறிவித்துக் கொண்டாட மறுத்துவிட்டது. இந்த ஓரவஞ்சனையை மக்களுக்கு எடுத்துரைத்தது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம். ஆண்டுதோறும் 15 சமஸ்கிருத அறிஞர்களுக்கு விருதும், புலமைத் தொகை யும் வழங்கப்பட்டு வருவதுபோல் 15 தமிழறிஞர்களுக் கும் வழங்க வேண்டும் எனவும், சமஸ்கிருத மொழிக் கல்விக்கும் ஆய்வுக்கும் ஆண்டுதோறும் ஒன்றிய அரசு ஏறத்தாழ பத்துக் கோடி ரூபாய் ஒதுக்குவதுபோல் தமி ழுக்கும் ஒதுக்கப்படவேண்டும் எனவும் இச்சங்கம் வலியுறுத்தியது. ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தின் தமிழ் தொடர் பான- செம்மொழி ஏற்புத் தொடர்பான எந்தக் கோரிக் கையையும் ஏற்காமலே இழுத்தடிப்பு செய்து கொண்டிருந்த சூழலில்தான், மத்தியில் அடுத்து வந்த இடதுசாரிகளின் ஆதரவு பெற்ற திமுக இடம் பெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தமிழ் மொழி யைச் செம்மொழியாக ஏற்புசெய்து 2004 அக்டோபர் 12 அன்று நல்அறிவிப்பு வெளியிட்டது. பன்மொழிகள் கொண்ட இந்தியப் பெருந்தே சத்தில் சமஸ்கிருதம் எனும் ஒற்றை மொழிக்கு மட்டுமே நூறாண்டுகளுக்கு மேலாகச் செம்மொழி அந்தஸ்து இருந்துவரும் நிலையில் அடுத்து தமிழ்மொழிக்கும் நியாயமான செம்மொழி நீதி கிடைத்தது.