articles

img

மொழி வழி மாநிலமே பன்முகப் பண்பாட்டின் அடிப்படை - ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

நவம்பர் 1 மொழிவழி மாநிலம் அமைந்த நாள். குமரி மாவட்டத்திற்கு அம்மாவட்ட ஆட்சியர் விடுமுறை நாளாக அறிவித்துள்ளார். அந்த நாளில்தான் குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன்  இணைந்த நாள். தமிழகத்தோடு குமரிப் பகுதியை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து குமரி மக்கள் வீரஞ்செறிந்த போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தில்16 பேர் அரசின் அடக்குமுறையால் கொல்லப்பட்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் போராட்டங்களில் முக்கியப் பங்காற்றியது. தோழர்கள் ஜி.எஸ்.மணி, டி.மணி உள்ளிட்டு பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். குமரி மட்டுமல்ல; திருத்தணி யும் போராட்டத்திற்குப் பிறகுதான் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.

செங்குருதி சிந்தி, மொழியை, மொழி சார்ந்த நமது பண்பாட்டை பாதுகாப்பதற்காகப் போராடிய தீரர்களின் நினைவைப் போற்றுவதற்கான நாளாக மட்டும் நவம்பர் 1 திகழவில்லை; நம்முடைய மொழி, வரலாறு உள்ளிட்ட பல கூறுகளுக்கு, உரிய அரசியல் அங்கீகாரத்தை வெல்லும் போராட்டத்தில் நவம்பர் 1 முக்கிய நாளாகத் திகழ்கிறது. தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக இந்நாள் திகழ்கிறது. அந்நியர்களுக்கு நமது நாட்டின் வளங்களைக் கொள்ளை அடிப்பது ஒன்றே குறிக்கோளாக இருந்தது. இந்த நாட்டின் பல்வேறு தேசிய இனங்களின் பண்பாடு, மொழி அடையாளங்களைப் பற்றியோ, மக்களின் துன்ப துயரங்களைப் பற்றியோ, கிஞ்சிற்றும் கவலைப்படாத அரசாங்கமாக அந்நியர் ஆட்சி இருந்தது. வணிகத்தை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் இந்தியாவை மதறாஸ், பம்பாய், கல்கத்தா போன்ற நிர்வாக மாகாணங்களாகப் பிரித்தார்கள். பிரிட்டிஷ் இந்தியாவோடு இணைக்கப்படாத நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களோடு அவர்கள் நட்புறவு கொண்டதும் தங்களுடைய ஏகாதிபத்திய வணிக நோக்கங்களுக்காக மட்டுமே!

விடுதலைப் போராட்டத்தின் விளைச்சல்

விடுதலைப் போராட்டத்தின்போதே மொழிவழி மாநிலம் அமைக்க வேண்டுமெனப் போராடி பிரிட்டிஷ் ஆட்சியிலேயே 1936ல் ஒடிசா மொழி வழி மாநிலம் உருவானது. விடுதலைப் போராட்டத்தோடு இணைந்தே மொழி, பண்பாட்டு உணர்வுகளும் மக்களுடைய எண்ண ஓட்டமாக மாறியது. இத்தகைய பின்னணியில்தான், ‘செப்புமொழி பதினெட்டு உடை யாள்; எனிற் சிந்தை ஒன்றுடையாள்’ என, ‘மொழி அடிப்படையில் மாநிலங்கள் உருவாக வேண்டும்; அதே சமயத்தில் வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒரே நாடாக இந்தியா அமைய வேண்டும்’ எனும் கருத்தை வலியுறுத்தி பாடினார் மகாகவி பாரதி. சுதந்திரத்திற்குப் பிறகு மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமைப்பதற்கு பரிந்துரை செய்திட அன்றைய மத்திய அரசு ஒரு ஆணையத்தை உரு வாக்கியது. மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் அமைந்தால், நாட்டின் ஒற்றுமைக்கும், பாது காப்புக்கும் ஆபத்து ஏற்படும் என்று மொழிவழி மாநிலக் கோரிக்கையை அந்த ஆணையம் நிராக ரித்தது. தமிழகத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியும், இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. மெட்ராஸ் ராஜதானி என்ற பெயரிலேயே நீடிக்க வேண்டுமென ராஜாஜி வாதிட்டார்.

கம்யூனிஸ்ட் கட்சியின்  முழக்கம்

தேசிய இனம் என்பதையோ; தங்களது மொழியை, மொழியால் விளைந்த பண்பாட்டை மக்கள் உயிர்மூச்சாக நேசிப்பார்கள் என்பதையோ புரிந்து கொள்ளாத, கவலைப்படாத கட்சியாக அன்றைக்கு காங்கிரஸ் தலைமை இருந்தது. இந்தப் பின்னணி யில்தான் நாட்டில்மொழிவழி மாநிலங்கள் அமைவ தற்காக கம்யூனிஸ்ட் கட்சி வலுவாகக் குரல் கொடுத்தது. இந்திய ஒன்றியத்தில் மாநிலங்களின் எல்லை களைத் தீர்மானிக்கிறபோது அளவுகோல் என்ன? அடையாளம் என்ன? -இந்தக் கேள்வி எழுந்த போது, மானுட வரலாற்றில் மொழி ஒரு இணைப்புக் கருவியாக அமைகிறது. குறிப்பிட்ட தேசிய இனத்தைச் சார்ந்த மக்களை இணைக்கும் கருவியாக மொழி திகழ்கிறது. எனவே மொழி அடிப்படை யில்தான் மாநிலங்களைத் தீர்மானிக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி போராடியது. தமிழ்நாடு, ஐக்கிய கேரளம், விசாலாந்திரம், சம்யுக்த மராட்டியம் என்ற  முழக்கங்களை  கம்யூ னிஸ்ட் கட்சி முன்வைத்துப் போராடியது. பி.ராம மூர்த்தி, ப.ஜீவானந்தம், இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், ஏ.கே.கோபாலன், பி.சுந்தரய்யா போன்ற கம்யூ னிஸ்ட் தலைவர்கள் மொழி அடைப்படையில் மாநி லங்களை அமைக்க வேண்டுமெனக் களமிறங்கி னார்கள்; மக்களைத் திரட்டினார்கள். “மொழிவழி ராஜ்ஜியம் அமைப்பதுதான் நாட்டின் ஒற்றுமையைப் பலப்படுத்தும்; அதுதான் உண்மையில் நாட்டை ஜனநாயக முறையில் நடத்திச் செல்வதற்கு வாய்ப்பு வசதியளிக்கும்” என தமிழ்நாடு சட்டமன்றத்தில் 28.3.1956ல் தோழர்.ப.ஜீவானந்தம் பேசியிருக்கிறார்.

மக்கள் போராட்டங்களின் நிர்பந்தத்தினால் மொழிவழி மாநிலம் அமைப்பதை அன்றைய ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டது. விளைவாக மானுடத்தின் பண்பாட்டுக் கூறுகளில் முக்கியமான மொழியை அளவுகோலாக வைத்து மாநிலங்கள் மறுசீரமைக் கப்பட்டன. அப்போது ஆந்திராவில் சிலர் சென்னை யைத் தங்கள் மாநிலத்தின் தலைநகரமாக அளிக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்தார்கள். ‘சென்னை தமிழர்களுக்குத்தான்!’ என உறுதிபடச் சொல்லி, அந்த சர்ச்சைக்கு முற்றுள்ளி வைத்தார் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பி.சுந்தரய்யா அவர்கள்.

சங்கரலிங்கனார் உண்ணாவிரதம்

மொழிவழியில் மாநிலங்கள் அமைந்தபிறகு, மதறாஸ் மாகாணத்திற்கு  தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 1956 ஜூலை 27 அன்று காந்திய சிந்தனையாளர் சங்கரலிங்க னார், மதறாஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். விருதுநகர் தேசபந்து மைதானத்தில் அந்தப் போராட்டம் தொடங்கியபோது, காமராஜர் முதல மைச்சராக இருந்தார். 70 நாட்களுக்கு மேல் உண்ணா விரதம் தொடர்ந்தது. காங்கிரஸ் அமைச்சர்கள் அங்கு வந்தபோது, தான் வைத்த கோரிக்கை ஒன்றை யாவது ஏற்றுக்கொண்டால் உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக சங்கரலிங்கனார் தெரிவித்தார். காங்கிரஸ்காரர்கள் சிலர் பந்தலைப் பிய்த்தெறிய முயன்றபோது கம்யூனிஸ்ட் தோழர்கள் சங்கரலிங்க னாருக்குப் பாதுகாப்பாக நின்றார்கள். கம்யூனிஸ்ட் தலைவர்கள் பி.ராமமூர்த்தி, கே.டி.கே.தங்கமணி, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் அவரைச் சந்தித்து, ‘உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நாங்கள்  போராடுவோம்; உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்’ என வேண்டிக்கொண்டார்கள். ஆனால், சங்கர லிங்கனார் போராட்டத்தைத் தொடர்ந்தார். 77 நாட்களுக்குப் பிறகு அவரது உயிர் பிரிந்தது. மதுரை மருத்துவமனையில் அவர் அனுமதிக் கப்பட்டபோது, “நான் இறந்த பிறகு எனது உடலைக் கம்யூனிஸ்ட்களிடம் ஒப்படையுங்கள்; அவர்கள்தான் எனது இறுதி நிகழ்ச்சியை நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார். கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்க ளான கே.பி.ஜானகியம்மாள், கே.டி.கே.தங்கமணி உள்ளிட்ட பலர் பங்கேற்புடன் தியாகி சங்கரலிங்க னாரின் இறுதி நிகழ்ச்சி நடந்தேறியது.

சங்கரலிங்கனாரின் கனவு மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழகத்தின் கனவாகவும் இருந்த மாகா ணத்துக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டவேண்டும் என்ற அந்தப் பிரச்சனையை, மாநிலங்களவை உறுப்பினராக இருந்த தோழர் பி.ராமமூர்த்தி நாடாளு மன்றத்திற்கு எடுத்துச் சென்றார். அரசமைப்புச்சட்ட திருத்த தனிநபர் மசோதா தயாரானது. இடையில் பி.ராமமூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டதால் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருந்த மேற்கு வங்கத்தைச் சார்ந்த தோழர் பூபேஷ் குப்தா தனிநபர் திருத்த மசோதாவை அறிமுகம் செய்தார்.

பூபேஷ் குப்தாவின்  உணர்ச்சிமிகு பேச்சு

இது 1963 மே மாதம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தோழர் பூபேஷ் குப்தா “எங்கள் தோழர் பி.ராமமூர்த்திதான் இந்த மசோதாவை வலியுறுத்திப் பேசி இருக்க வேண்டும். அவர் தமிழக மக்கள் மத்தியில் செல்வாக்கு வாய்ந்த தலைவராக இருப்பவர்.  இந்த அவையில் உறுப்பி னரான அவர் ஆற்றல் வாய்ந்த பேச்சாளர். மதிப்பு மிக்கத் தலைவர். தமிழ்நாட்டில் முக்கியமான தலைவர்; அவர் ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியில்  பிரதான தலைவர்களில் ஒருவராக இருந்தவர். இன்றைய அமைச்சர்களில் பலர் அவரது அன்றைய சகாக்களாக இருந்தவர்கள். இந்த மசோதாவைக் கொண்டுவர அவர்தான் முன்முயற்சி எடுத்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் சிறையில் இருப்பதால், அவருக்குப் பதிலாகக் கட்சியின் சார்பாக நான் இந்த மசோதாவை வலியுறுத்திப் பேசுகிறேன்” என்று மசோதாவை  அறிமுகப் படுத்தினார். “வரலாறு, மொழி, கலாச்சார அடிப்படைகளுக்கு இசைவாக, தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கருத்து, மெட்ராஸ் மாகாணம் மற்றும் நாட்டின் பிற பகுதி மக்களிடம் மிக ஆழமாக உள்ளது. இது சாதாரணப் பெயர் மாற்றமல்ல. பண்பாடு மற்றும் பிற காரணங்களின் அடிப்படையில் முக்கியமானதாகும். உலகத்திலேயே மிகத் தொன்மையான மொழிக ளில் ஒன்று. உலகின் பல பாகங்களிலும் உள்ள மக்களின் பேச்சுமொழியே வளர்ச்சியடையாதிருந்த நிலையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பி ருந்தே தமிழ் இருக்கிறது. உலகின் பல மொழிகள் வளர்ச்சி அடைவதற்கு முன்னமேயே சிறப்பான இலக்கியங்களைப் படைத்தது. தமிழ், மொழி அத்தகு புகழ்படைத்தது.

நமது நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியத்திற்கு, அவ்வளவு சிறப்பாகவும், வளமாகவும் பங்களிப்புச் செய்த தமிழ் மக்களின் மேன்மை அத்தகையது. தமிழைப் பற்றிப் பேசும்போது நமக்கு மிகுந்த பாசம் உண்டாகிறது. ஏனெனில் நாம் இன்றைக்குப் பார்க்கிற இந்தியா, ஏராளமான மொழிக்கூறுகளும், குழுக்களும் அடங்கியதாக இருக்கிறது. அவர்களில் தமிழ்நாட்டு மக்கள் மிகச் சிறப்பான இடத்தைப் பெறு கிறார்கள். அவர்களின் இலக்கியத்தில், அவர்களின் கலாச்சாரத்தில், அவர்களின் பாடல்களில், இசையில், அவர்களின் வாழ்க்கை முறையில், நமது மக்களின் கலாச்சாரம் என்று நாம் கருதுகின்றவற்றின் தொன்மை, பெருமை மிளிர்கிறது. ஆகவே எல்லா வகையிலும் இந்தியக் கலாச்சாரத்தின் மையமாக தமிழ்நாடு இருக்கிறது. இந்தியாவின் வேறு எந்தப் பகுதி நாகரி கத்தைவிடவும் தமிழ்நாட்டு நாகரிகம் பழமையானது. இதனால், அம்மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும்” என்று தோழர் பூபேஷ் குப்தா வலியுறுத்தினார். மேலும், “தியாகி சங்கரலிங்கனாரின் போராட் டத்தையும், அவரது கொடுமையான மரணத்தையும், மனதில் நினைத்துப் பார்த்து இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்” எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.

தமிழகத்தில் இருந்து அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள், மசோதாவை ஆதரித்துப் பேசும்போது, “இந்த அவையின் தகவ லுக்காக, இந்த உண்ணாவிரதத்தில் திமுகவிற்கு பங்கேதும் இல்லை; உண்ணாவிரதம் கட்சி சாராத ஒருவரால் மேற்கொள்ளப்பட்டது என்பதைத் தெரி வித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டார். மேலும், இந்த மசோதாவை, “முழுமனதுடனும், முழுமையாக வும், உண்மையாகவும் ஆதரிக்கிறேன்” எனக் கூறினார். ஆனாலும், காங்கிரஸ் தலைமையிலான ஒன்றிய அரசு இந்த மசோதாவை நிறைவேற்றிட மறுத்து விட்டது. அண்ணா முதலமைச்சரான பிறகு, 1967, ஜூலை 18  அன்று தமிழ்நாடு என்று பெயர்சூட்ட வேண்டும் என்ற மசோதா சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டது. இதனால்தான், தமிழ்நாடு அரசு ஜூலை 18 தினத்தைக் கொண்டாடியது.

இந்தப் போராட்டங்கள் பெயருக்கானவை மட்டு மல்ல. மொழிவழி மாநிலம், பெயர் கோரிக்கைக ளில், ஆட்சிமொழியாகத் தமிழ், நீதிமன்றத்தில் வழக்கு மொழியாகத் தமிழ், கோவில்களில் வழிபாட்டு மொழியாகத் தமிழ் மற்றும் பயிற்றுமொழியாகத் தமிழ் வேண்டுமென்ற நியாயமான கோரிக்கைகளும் அடங்கும். ஆனால், இன்றைய ஒன்றிய பாஜக அரசு இந்தி மொழியைத் திணித்து, மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்ட நோக்கத்தையே சிதைக்க முயன்று வருகிறது. இந்தித் திணிப்பை எதிர்ப்பது என்பது மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்ட நோக்கங் களைப் பாதுகாக்கும் போராட்டமாகும். ஆகஸ்ட் 15 இல்லாமல் நவம்பர் 1 இல்லை. நவம்பர் 1 இல்லாமல் ஜூலை 18 இல்லை. தமிழ்நாடு அரசு நவம்பர் 1 தினத்தையும் கொண்டாட வேண்டும்.