articles

img

இலங்கையில் நடப்பது என்ன? - எஸ்.பி.ராஜேந்திரன்

1948 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களி டமிருந்து விடுதலை பெற்ற பிறகு ஏற்பட்ட முதல் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, அதைவிட மிகப்பெரிய அளவில் முதல்முறையாக நெருக்கடியை சந்தித்துள்ளது இலங்கை. இப்போது  ஏற்பட்டிருப்பது அந்நியச் செலாவணி நெருக்கடி யாகும். அந்நியச் செலாவணி கையிருப்பு சில நாட்களிலேயே அதிவேகமாக கரைந்து போனதால், செய்வதறியாது திகைத்து நிற்கிறது இலங்கை.  வெறும் 400 கிராம் பால் பவுடர் 790 ரூபாய்க்கு விற்கிறது; அரிசி ஒரு கிலோ 290 ரூபாயாக எகிறி யுள்ளது; இன்னும் வரும் நாட்களில் 50 சதவீதம் விலை அதிகரிக்கும்; கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பெட்ரோலியப் பொருட்களின் விலை 88 சதவீதம் அதிகரித்துள்ளது. பொருளாதார நெருக்கடி, மக்களின் அன்றாட வாழ்வியலில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகக் கொடூரமாக வெளிப்பட்டு வருகிறது. எவ்வளவு விலை கொடுத்தாலும், பொருட்கள் இல்லை என்ற நிலையும்  உருவாகியுள்ளது. வாழ வழியில்லாமல், அங்கிருந்து தமிழகத்திற்கு தப்பிச் செல்ல வாய்ப்பு கிடைக்குமா என்று ஏராளமானோர் காத்திருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே கடல் கடந்து 16 பேர் இராமேஸ்வரம் வந்தடைந்துள்ளனர்.

இலங்கையில் மகிந்தா ராஜபக்சேவும் அவரைத் தொடர்ந்து அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சே வும் ஆட்சி நடத்தி வருகிறார்கள். சிறுபான்மை தமிழ் மக்களின் நலன்களை மட்டுமல்ல; யாருக்காக தங்களது ஆட்சி நடக்கிறது என்று இவர்கள் கூறி னார்களோ, அந்த பெரும்பான்மை சிங்கள மக்களின் நலன்களும் சூறையாடப்பட்டு, ஒட்டுமொத்த இலங்கை மக்களும் தற்போது அன்றாடத் தேவைகளுக்காக வீதிகளில் அலைந்து திரியும் அவலத்திற்கு ஆளாக்கப் பட்டிருக்கிறார்கள். இலங்கை, கலவர பூமியாக மாறிக் கொண்டிருக்கிறது.

கழுத்தை நெரிக்கும் கடன் வலை

எல்லா நாடுகளிடமும் பெருமளவில் கடன் வாங்கி யிருக்கிறது இலங்கை. எந்தக் கடனையும் திருப்பிச் செலுத்த முடியவில்லை. தற்போதைய நிலையில், 51 பில்லியன் டாலர் அளவிற்கு இலங்கையை வெளி நாட்டுக் கடன் கழுத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. பன்னாட்டு நிதி நிறுவனம், இலங்கை கடன் வலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் உடனடியாக 4 பில்லி யன் டாலர் அளவிற்கான பன்னாட்டு கடன்களை கட்டாயம் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இலங்கை அரசு உள்ளது. இலங்கை பெற்றுள்ள மொத்தக் கடனில் சீனா 9.8 சதவீதம், ஆசிய வளர்ச்சி வங்கி 12.7 சதவீதம், ஜப்பான் 9.7 சதவீதம், உலக வங்கி 9.3 சதவீதம், இந்தியா 2.5 சதவீதம், இதரர்கள் 8.9  சதவீதம் என்ற அளவில் கொடுத்துள்ளன. இதுதவிர, வெளிச்சந்தையிலிருந்து மட்டும் 47.2 சதவீதம் இலங்கை கடன் வாங்கியிருக்கிறது. சீனா, ஜப்பான், இந்தியா, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றிடமிருந்து பெற்ற கடன்களை உடனே திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாய நிலை இலங்கைக்கு இல்லை. ஆனால், வெளிச்சந்தை கடன்களிலிருந்து இலங்கை தப்பிக்க முடியாது. 

இத்தகைய கடன் வலை சூழ்ந்துள்ள நிலையில், இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து குறைந்து வந்தது. கடந்தாண்டு பிப்ரவரி யில் வெறும் 2.31 டாலர் அளவிற்கே கையிருப்பில் இருந்த அந்நியச் செலாவணி, 70 சதவீதம் கரைந்து, அபாயக் கட்டத்தை எட்டியது. அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாப்பதற்காக 2020 மார்ச் மாதத்தில் இலங்கை அரசு, பொருட்கள் இறக்குமதிக்கு தடை  விதித்தது. இதுதான் இலங்கைக்கு பெரும் ஆபத்தை  கொண்டு வந்தது. ஏனென்றால், இலங்கைப் பொருளா தாரம் அடிப்படையில் தொழில் உற்பத்தி பொருளா தாரம் அல்ல. மாறாக, கணிசமான அளவு சுற்றுலா வருமானத்தை நம்பியுள்ள பொருளாதாரம். அங்கு, மிகப்பெரிய பொருள் உற்பத்தி தொழிற்சாலைகளோ, தளவாட உற்பத்தி ஆலைகளோ அதிகம் இல்லை. தீவு நாடு என்ற போதிலும், இலங்கையில் ஆளும்  அரசுகள் முறையாக திட்டமிட்டிருந்தால், உற்பத்தி தொழில்களை உருவாக்கியிருக்க முடியும். ஆனால் பல்லாண்டு காலம் அந்த நாட்டின் ஆளும் வர்க்க அரசுகள், சிங்கள பேரினவாதத்தில் ஆழ்ந்து, அதன் விளைவாக தமிழீழ விடுதலை சார்ந்த கிளர்ச்சிகள் உருவாகி, அதைத் தொடர்ந்து ஒடுக்குமுறைகள், மோதல்கள், போர்கள், சீர்குலைவு என பொருளா தாரமே நொறுங்கிக் கிடந்தது. அதற்கு முன்பும் பின்பும்கூட, இலங்கையின் ஆளும் வர்க்க அரசுகள்,  இலங்கை அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ளபடி, தமிழ் மக்களின் சுயாட்சி உரிமை களை, நில உரிமைகளை மதிப்பதற்கும் அமலாக்கு வதற்கும் தயாராக இல்லை. 

இதற்கும் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி  மேம்படாமைக்கும் நேரடித் தொடர்பு உண்டு. இலங்கை யின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாய்ப்பு கள் இருந்தும் தொழில் நிறுவனங்கள் உருவாக வில்லை; பெருமளவிலான மக்களின் அடிப்படைத் தொழிலான விவசாயமும், தோட்டத் தொழிலும்கூட திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி வியூகத்திற்குள் கொண்டு வரப்படவில்லை. இவற்றுக்கு மாறாக, ராஜ பக்சேவும், அவரது சகோதரர்களும் அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டு தொடர் ஒடுக்குமுறைகளை ஏவுவதிலும், ராணுவ எதேச்சதிகாரத்தை நிறுவு வதிலும்தான் குறியாக இருந்தார்களே தவிர, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை சிந்திக்க வில்லை. இடையில், சில ஆண்டு காலம் சீனாவுடன் பொரு ளாதார - வர்த்தக உறவுகளை இலங்கை மேம்படுத்தி வந்தது. அந்த உறவுகளின் அடிப்படையில்தான், இலங்கையில் சில உட்கட்டமைப்பு நடவடிக்கைகள் துவங்கியிருந்தன. ஆனால், அவை இன்னும் முழுமை பெறவில்லை.

இந்தப் பின்னணியில்தான் கோவிட்- 19 தாக்கமும், உலகளவிலான ஊரடங்குகளும் அமலுக்கு வந்தன. இதன் விளைவு, இலங்கை பொருளாதாரத்தின் மிக முக்கியத் துறையான சுற்றுலாத்துறை பலத்த அடி வாங்கியது. இன்னும்கூட இலங்கை சுற்றுலாத்துறை மீளவில்லை. வருமானம் அடியோடு நின்றுபோனது. இந்தியா மற்றும் சீனாவின் உதவியோடுதான் இல ங்கை உயிர் பிழைத்திருந்தது என்றால் மிகையல்ல. இத்தகைய சூழலில்தான், அந்நியச் செலாவணி யைப் பாதுகாக்க இறக்குமதிகளை இலங்கை அரசு நிறுத்தியது. உள்நாட்டில், உற்பத்தியும் இல்லை; இறக்குமதியும் இல்லை என்பது, உள்நாட்டில் சில  நாட்களிலேயே உணவுப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது. இதன் உடனடி விளைவு உணவு, மருந்துகள், பெட்ரோலியம் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் திடீரென செங்குத்தாக உயர்ந்தன. இது, மக்களின் கைகளில் இருந்த பணத்தை பறித்தது. மக்களின் வாங்கும் சக்தி பறி போனது. இது உடனடியாக பொருளாதார சுழற்சியை  பின்னோக்கி இழுத்தது. உள்நாட்டில் பெரும் பதற்றச் சூழலை உருவாக்கியது. அனைத்துப் பொருட்களின் விலைகளும் தொடர்ந்து அதிகரித்தவுடன், பொரு ளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பிக்கத் துவங்கின. இது அடுத்தடுத்த விளைவுகளை தீவிரப்படுத்தியது. மொத்தப் பொருளாதாரமும் கிட்டத்தட்ட நின்று போன நிலை உருவாகியுள்ளது.

டாலரின் ஆதிக்கம்

உலக நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகள் அமெரிக்க டாலரிலேயே நடந்து வருகின்றன. அந்நியச் செலாவணி என்பது ஒரு நாட்டின் டாலர்  கையிருப்பு எவ்வளவு உள்ளது என்ற அடிப்படை யிலேயே கணக்கிடப்படுகிறது. இது உலக அரங்கில் கோலோச்சும் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நிதி மூலதனத்தின் திருவிளையாடல்களில் ஒன்றாகும். நவீன தாராளமய கொள்கைகள் உலகம்  முழுவதும் அமலான பிறகு, உள்நாட்டுத் தொழில்கள்  அழிக்கப்பட்டு, பெரும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறு வனங்கள் எல்லா நாடுகளுக்குள்ளும் புகுந்தன. இதன் காரணமாக, நாடுகளின் ஏற்றுமதி-இறக்குமதி உள்ளிட்ட அனைத்து வர்த்தகங்களும் டாலரிலேயே நடப்பது முக்கியத்துவம் பெற்றது. ஒரு நாட்டில் டாலர் கையிருப்பு குறைந்தால் அல்லது ஒரு நாட்டின் நாணயத்திற்கான டாலர் மதிப்பு குறைந்தால், அந்த நாடு சர்வதேச அளவில் நெருக்கடியில் சிக்கும் என்ற அபாயம் உருவாக்கப்பட்டது. இது, இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளின் பொருளா தாரத்தை நசுக்கி, அவற்றின் பொருளாதார சுயசார்பை சிதைத்து, பிறநாடுகளிடமும் உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனத்திடமும் கையேந்த வைத்து, கடைசியில் அந்த நாட்டையே கபளீகரம் செய்வது என்ற நிலைக்கு இட்டுச் செல்கிறது. அமெரிக்க ஏகாதி பத்தியம் சர்வதேச நிதி அமைப்புகளை தனது கைகளில் வைத்துக் கொண்டு உலகின் பல நாடுகளை இப்படி சிதைத்துள்ளது. அதுதான் இப்போது இலங்கை யிலும் நடந்துள்ளது.

மீள முடியுமா?

ஆனால், இலங்கைக்கு இப்போதும் கூட சில வாய்ப்புகள் உள்ளன. இலங்கை, இந்தியா மற்றும் சீனா வின் மிக நெருக்கமான நட்பு நாடாகும். இந்த நட்பை பயன்படுத்தி தன்னை மீட்டுக் கொள்ளும் சூழலை உருவாக்கிக் கொள்ள இலங்கை அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். பெரும்பான்மை சிங்கள மக்கள், சிறுபான்மை தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள் ஆகிய அனைவரையும் உள்ளடக்கிய, வடக்கு  - கிழக்கு மாகாணங்களுக்கு அதிகபட்ச சுயாட்சி உரிமைகளை உறுதி செய்கிற, அனைவரது வாங்கும் சக்தியையும் படிப்படியாக உயர்த்துகிற அர சியல் - பொருளாதார திட்டங்களை உடனடியாக அம லாக்கிட வேண்டும். அந்நியச் செலாவணியைப் பற்றி  கவலை கொள்ளாமல் இந்திய ரூபாயிலும் சீனாவின்  யுவானிலும் பரஸ்பரம் வர்த்தக உறவுகளை உடனடி யாக செயல்பாட்டுக்கு கொண்டு வர முனைப்பு காட்ட  வேண்டும். இப்போதேனும், எதேச்சதிகாரமாக முடிவு களை மேற்கொள்ளாமல், நாடாளுமன்றத்தின் அனைத்துத் தரப்பு உறுப்பினர்களுடனும் ஆலோ சித்து உரிய முடிவுகளை கோத்தபாய ராஜபக்சே அரசு  மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், இந்தியப் பெருங்கடல் தீவான இலங்கை, ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் கம்பெனிகளிடம் வாங்கியுள்ள கடன் எனும் பெருங்கடலில் மூழ்குவது தவிர்க்க முடியாதது.