மதுரை மேலூர் பகுதி மக்கள் மட்டுமின்றி அனைத்துப் பகுதி மக்களிடமும் பேசு பொருளாக மாறியுள்ள முக்கியமான போராட்டம். இன்றைய மோடி அரசாங்கம் விவசாயம் அழிந்தாலும் பரவாயில்லை, அப்பகுதியில் இருக்கக் கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில், இத்திட்டத்தை கொண்டு வரத் துடிக்கிறது.
சுரங்கத்தின் பரவல் மற்றும் பாதிப்புகள்
முதல் கட்டமாக 5000 ஏக்கர் இருக்கும் என்றும், இதனை 38 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்துவார்கள் என்றும் இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். சுரங்கம் எடுப்பதால் ஏற்படும் கதிர்வீச்சுகள் மூலம் புதிய புதிய நோய்கள் முதல் புற்றுநோய் வரை வரும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
நான்கு மாவட்டங்களின் அழிவு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் ஆரம்பித்து அரிட்டாபட்டி வந்து சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சென்று இராமநாதபுரம் மாவட்டம் வரை செல்ல உள்ளது. நான்கு மாவட்டத்திலும் 38,500 ஏக்கர் எடுக்கப் போவதாக தெரிய வருகிறது. இப்பகுதி முழுவதும் மக்கள் வாழ தகுதியற்ற பகுதியாக மாற்றப்படும்.
மோடி அரசின் மக்கள் விரோத கொள்கை
பாஜக அரசாங்கத்தை பொறுத்தவரை மக்கள் வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன என்ற அணுகுமுறை. பன்னாட்டு கம்பெனிகளுக்கு சேவகம் செய்வதும், அவர்களுடைய திட்டத்தை கொண்டு வருவதுமே இவர்களின் நோக்கம்.
மக்கள் போராட்டத்தின் வெற்றி
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான 2018 ஆம் ஆண்டு போராட்டத்தால் அப்பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக 13 மாத காலம் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது போல, டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தையும் போராட்டத்தின் மூலமே தடுக்க முடியும்.
போராட்டத்தை தீவிரப்படுத்த அறைகூவல்
தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் இந்த திட்டத்தை ரத்து செய்யும் வரை இந்த போராட்டத்தை பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தி, பலப்படுத்தி நடத்துவோம்!
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மதுரையில் திங்களன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் ஆற்றிய உரையிலிருந்து